Saturday, December 25, 2010

திருப்பரங்குன்றம்!

பிணிஊழ்ப் பிடிநீங்க
மணிஆர் மதிதன்னை
அணிவான் அடிநாடிப்
பணிவாய் பரங்குன்றே....6

விரைநன் மலர்தூவி
குரைசெய் கழல்பாடும்
பரமன் அடியார்கள்
பரவும் பரங்குன்றே....7

குரை= ஒலி
விரை= மணம்.

திங்கள் சடைக்கன்பர்
துங்கத் தமிழ்பாடும்
மங்கை உமையாளின்
பங்கன் பரங்குன்றே....8

பெற்றம் அமர்வோனாம்
நெற்றி விழியானைச்
சுற்றம் எனுமன்பர்
பற்றும் பரங்குன்றே....9


துகளாய் வினைதீர்க்கும்
புகலாம் கழல்வேண்டின்
இகமாய்ப் பரமாகும்
பகவான் பரங்குன்றே....10

Monday, December 13, 2010

திருப் பரங்குன்றம்.

புளிமா புளிமாங்காய்(வஞ்சித்துறை)

பொலிவெண் பொடிசூடும்
பலிதேர் பரங்குன்றன்
நலிவாம் நவைதீர்ப்பான்
வலிகொள் மனந்தந்தே....1.

புரியா மயல்தீரப்
புரிநீ மடநெஞ்சே
விரியார் சடை ஈசன்
பரிவான் பரங்குன்றே....2.

சிரமோர் மதிசூடி
கரமோர் அருளாசி
வரமாய்த் தருமீசன்
பரமன் பரங்குன்றே... 3.

நண்ணா வினைத்துன்பம்
பெண்ணோர் புறங்கொண்டான்
நண்ணி நினைநெஞ்சே
பண்பன் பரங்குன்றே...4.

பொதியாம் வினைத்தீரப்
பதிவாய் மனமேநீ
கதிதாள் பெறச்செய்யும்
பதியாம் பரங்குன்றே....5.

Friday, December 3, 2010

ஆலவாய் அண்ணல் - (திருஆலவாய்) - 2



விதித்த வாழ்வும் வெருதா கிடாதுளம்
பதித்த நாமம் பரவினால் உய்யலாம்
கதித்து ஆடுவான் கழலிணைக்(கு) அன்பராய்த்
துதித்த வர்துயர் தீர் ஆல வாயரே....6.

கதித்து=விரைந்து

மாலை வண்ணனாய் மன்றதில் ஆடிடும்
நீல கண்டனாய் நெஞ்சுறைத் தெய்வமாய்ச்
சூலை நோயுறு தூயடி யார்க்கருள்
ஆல வாயுறை அங்கண் அடிகளே....7.

கல்லேன் பொன்னார் கழல்தொழு துய்வழி
வல்லான் இன்னருள் வள்ளலென்(று) ஏத்திலேன்
பொல்லாத் தீவினைப் பொடியெனச் செய்குவன்
நல்லார் போற்றும்நம் ஆலவாய் நாதனே....8.

ஆர்=அழகு என்னும் பொருளில்

கால காலனாய்க் கண்ணுதல் அண்ணலாய்க்
கோல மாகவேக் கொண்டிடும் ஆடலை
ஞால முய்ய நடித்தநம் ஐயனாம்
ஆல வாயரற் கன்புசெய் நெஞ்சமே....9.

சேவி லூர்பவன் சிந்தையில் நிற்பவன்
கூவி யன்பர் குரல்கொடுத் தாலுமே
தாவி வந்தருள் தந்திடும் மெய்யனாய்
ஆவி காப்பவன் ஆலவாய் அண்ணலே.....10.

(கலிவிருத்தம்)

Sunday, November 28, 2010

ஆலவாய் ஈசனே!-- 1


விரிவான் கங்கையன் வெண்ணீ றணிசிவன்
பொரியார் வண்டுசூழ் பூம்பொழில் தளியான்
தரியான் அன்பிலார் தம்முளம் அவர்க்கே
அரியான் ஆலவாய் மேவிய அண்ணலே....1

முன்பின் இல்லா ஆதியாம் மூலமாம்
அன்பில் ஆளும் அருள்நிறை வள்ளலாம்
துன்பில் தோன்றாத் துணையாய்த் தோன்றிடும்
என்பொன் ஆலவாய் மேவிய ஈசனே.....2

வீற்ற இன்னருள் கோலமும் வெவ்வினை
மாற்றும் ஆறுதல் தந்திடும் மாயமென்?
போற்றும் அன்பரின் பற்றெனும் பூரணன்
ஏற்றில் ஏறுமெம் ஆலவாய் ஈசனே...3

புறவும் ஆழியும் நின்னருள் போற்றிடும்
கறவைக் கன்றென உன் தாள் கருதியே
நறவு சேர்மலர் தூவினேன் நைவினை
அறவந் தேத்துமெம் ஆலவாய் அண்ணலே....4

புறவு=காடு,நறவு=தேன்,வாசனை
கறவை=பசு.....

கல்லால் தாக்கினும் கனிந்ததைத் தாங்குவான்
ஒல்லாச் சாட்டையின் ஊறினை ஒப்புவான்
சொல்லால் கூடிடாத் தூயமெய் அன்பினால்
எல்லாம் நல்கும்நம் ஆலவாய் அண்ணலே....5

கல்லால்=கல்லினால்.(சாக்கிய நாயனார்)
ஒல்லா=பொறுக்கமுடியாத.

Sunday, November 21, 2010

அடியேற் கருள்வாயே!(திருவண்ணாமலை)


வண்டார் மலர்மாலை வடிவாய் இசைந்தாடக்
கண்டோர் உனைநாடும் கதியாய் வருவாயே
பண்டாய் நவமானாய் பதியே பரமேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....6

எண்ணாய் எழுத்தாகி இயம்பும் பொருளாகிப்
பண்ணார் இசையாகிப் பரவும் துதியானாய்!
கண்ணோர்க் களியாகக் காணும் பெருஞ்சோதி
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.... 7

எண்ணேன் இமைப்போதுன் இணைத்தாள் சிரமேற்கப்
பண்ணேன் உனைநாளும் பரவும் துதிபூசைத்
தண்ணார் தடம்சோலைத் தருசூழ் வனமோங்கும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....8

கண்ணா யிரங்கொண்ட காளி யவள்கேள்வா
விண்ணா றினையேற்கும் விரிசெஞ் சடையோனே
வெண்ணீ றணிவோனே விந்தை அழலோனே
அண்ணா மலையோனே அடியேற் கருள்வாயே....9

விண்ணோர் அமுதேஎம் வினையாம் பவம்தீர்ப்பாய்
பெண்ணோர் புறம்வைத்தாய் பிறைவார் சடையோனே
மண்ணோர் தொழும்ஞான மறையோன் ரமணர்சேர்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....10

Sunday, November 14, 2010

அடியேற்கு அருள்வாய் (திருவண்ணாமலை)


'மா புளிமாங்காய் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.

பண்ணார் நடமாடும் பதமே தருவாயே
கண்ணால் முடி,தாளைக் காணா அயன்மாலும்
விண்ணாய் வளர்தீயாய் மிளிரும் உனைநாடும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....1

புண்ணாம் படிநோவப் புரியும் வினையோடக்
கண்ணார் ஒளிமேவும் கருணை பொழிவாயே
மண்ணாய்ப் புனல்வானாய் வளியாய் அழலானோய்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....2

கண்ணால் உகுநீருக் கருள்வாய் மதலைக்கே
உண்ணா அமுதுண்டே உமையா ளுடைமைந்தாய்
பண்ணார் பதிகத்தால் பரவித் துதிசெய்தார்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....3

கண்ணீர் விழிமல்கக் கரையும் உணர்வாகி
எண்ணேன் உனதன்பை இரங்காய் இறையோனே
விண்ணாய் உயர்கோவில் மேவும் அருணேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....4

புண்ணார் விழிசெந்நீர்ப் புனலாய் வழிந்தோடக்
கண்ணாய்த் தனதப்பும் கருணை சொலப்போமோ?
திண்ணார்த் தடந்தோளன் திண்ணன் துதிசெய்யும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....5

Saturday, November 6, 2010

சிராப்பள்ளி சேர்!



அலையாய் அலைந்தே அமைதியை நாடின்
நிலையாய் மலர்தாள் நினையென் மனமே
கலையாய் நடிக்கும் கழலன் இமயச்
சிலையான் சிராப்பள்ளி சேர்....6

சிலை=மலை.

நலம்பெற வைத்து நலி வினைத் தீர்த்தே
வலம்பல நல்கிடும் வாஞ்சைஎண் நெஞ்சே!
தலம்பல ஆடிடும் தாண்டவன் கைலைச்
சிலம்பன் சிராப்பள்ளி சேர்....7

ஆர்த்தெழும் தீவினை அண்டாதென் நெஞ்சமே
வார்த்தையில் சொல்லொணா வாத்ஸல்யம் பொங்கிடப்
பார்த்தருளும் அன்னையாய்ப் பாவையின் துன்பினைத்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்....8

பகழியின் கூர்தோய்ப் பறவையாய் நோவ
நிகழும் வினைத்துயர் நீங்கிட நெஞ்சே
தகழி யொளியினில் தண்மலர் தூவத்
திகழ்ந்தான் சிராப்பள்ளி சேர்....9

பகழி=அம்பு.

கட்டும் வினைகள் கயிறாய்ப் பிணிப்பதை
விட்டு விலகிட வேண்டிடின் நெஞ்சமே
இட்டன், அடியருக்(கு) இன்னருள் செய்திடும்
சிட்டன் சிராப்பள்ளி சேர்....10

Sunday, October 31, 2010

சிராப்பள்ளி சேர்!


( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )

பற்றும் பழவினையால் பந்தப் படும்வேளை
சற்றும் சிவநாமம் சாற்றுவை நெஞ்சமே!
சுற்றும் கயலுயரத் துள்ளுமெழில் பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்....1

குருவாய் அமர்வோனின் கோலம் நினைந்தே
உருவாய் ஒளியாய் உணர்வாய் மனமே
தருவான் மலர்பதம் தாயாய் அருள்வான்
திருவார் சிராப்பள்ளி சேர்....2

தொல்வினை சூழ்ந்தே துயர்தரும் போதினில்
வெல்வழி யொன்றினை மேவிடு நெஞ்சமே
மெல்லிய லாளொடு வெள்ளை எருதமர்
செல்வன் சிராப்பள்ளி சேர்....3

அவமாய் அலைந்தே அலமரும் வாழ்வில்
நவமாம் வழியினை நாடிடில் நெஞ்சே
தவமே உருவெனச் சார்ந்தார்க்(கு) அருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்....4

தாவல் தருவினையைத் தாண்டி உயர்வுறச்
சேவமர் செல்வனருள் தேடுமென் நெஞ்சமே
நா வல் அடியர் நயமுறப் போற்றிடும்
தேவன் சிராப்பள்ளி சேர்.....5

தாவல் = வருத்தம்
சே + அமர் = சேவமர் ( உடம்படு மெய் 'வ்' வந்து சேவமர் என்றாகியது )

Tuesday, October 26, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 5


(தானனா தானன..தந்த தான-- 5)

வாரிமீ தாடுது..ரும்ப தாக
...வாடுவோர் நாடிடும்..அஞ்சல் ஈவாய்
சாரியாய் ஊழ்துயர்.. தந்த போதுன்
...தாளதே நானுணர்.. சிந்தை யாவாய்
கோரியே மாதவள்.. வந்தி நாடும்
...கூலியா ளாகுவை..சுந்த ரேசா
ஆரியா ஆதர..வென்று மானாய்
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.

Sunday, October 24, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 4

(தானனா தானன.. தந்த தான--4)

ஓடுமே தீவினை யஞ்சி யேதான்
...ஓதுமோர் ஆதியு .னன்ப தாலே
பாடுவோ ராயிர முன்ற னாமம்
...பாகுசேர் தேனத னின்ப மாமே
தோடுடை யாயுனை அன்று நாவால்
...சூடுபா மாலைசெய் விஞ்சை என்னே
ஆடுவாய் வானெழில் மிஞ்சு மாடல்
...ஆலவாய் மேவிய எம்பி ரானே.

Saturday, October 23, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 3

(தானனா தானன.. தந்த தான)

மாறலா தாடிடு .. மன்று ளானே
...மாசிலா மாமணி.. யென்று மானாய்க்
கூறதாய் மாதுமை..தங்கு மீசன்
...கோலமார் சோதியி.. .லின்பு சேரும்
பேறதாய் ஆகுமு.. .னன்பி .னாலே
...பீடதே யாகிடும்.. தஞ்ச மீவாய்
ஆறலை வேணிய.. சுந்த ரேசா
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

மாறு=ஒப்புமை.

Thursday, October 21, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 2

(தானனா தானன .. தந்ததான--2)

மோனமாய் ஆலமர்.. கின்ற தேவே
...மோகமோ டாறையும்.. வென்றி டேனோ?
கூனலாய் வான்மதி.. கங்கை சூடும்
...கோதிலா வேணிய..னென்று வேத
கானமாய் ஓதிடும்.. அன்பர் நேசா
...காவலாய் ஆதர மென்று தாயும்
ஆனவா மாதுமை.. பங்க .னாகி
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆதரம்=அன்பு, உபசாரம்
மோகமோ டாறையும்= மோக, காம, லோப, குரோத, மத, மாச்சர்யம்.

Tuesday, October 19, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே !

(தானனா தானன .. தந்ததான)

பூரணா நீறணி..கின்ற ஈசா
...போதமே நானறி..கின்றிலேனே
பாரமார் ஊழ்தரு.. துன்பு மாயும்
..பாதமே நாடுயர்.. சிந்தை ஈவாய்
காரணா தீயெரி.. கின்ற ஈமம்
...காதலோ டாடிடு.. மன்ற மாகும்
ஆரமாய் மார்பிசை..கொன்றை யோடே
...ஆலவாய் மேவிய..எம்பி ரானே.

Saturday, October 9, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--5


சுழலுறு வாழ்விதில் தொடர்கிற
நிழலென வினையதும் நேர்பட
உழலுதல் இன்றியென் றுய்வனோ?
கழலருள் கச்சியே கம்பனே....9.

தலமுளான் இளநிலா சடையினான்
குலைவிலா அன்பிலே கொலுவுளான்
வலமுளான் அருளினை வழங்குவான்
கலையினான் கச்சியே கம்பனே....10.

Thursday, October 7, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--4

இமிழ்த்திடு கழல்களின் எழில்நடம்
தமிழ்த்திரு மறைகளும் சாற்றுமுன்
உமித்துணை நினைவிலேன்; உற்றவா
கமித்தருள் கச்சியே கம்பனே....7.

இமிழ்த்தல்=ஒலித்தல்.
உமி=நெல்லின் உமி(சிறிதளவு என்னும் பொருளில்)

சிரத்துடை பிறையனே!திரியுமுப்
புரத்தையும் எரிசெயும் புண்ணியா!
துரத்திடும் தொல்வினை தொலைத்தருள்
கரத்தினாய் கச்சியே கம்பனே!...8.

Tuesday, October 5, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--3

நிதிதனை நினைந்துழல் நிலையினில்
அதிபதி உனதருள் அறிகிலேன்;
விதிதரும் விளைவினை வெல்கிற
கதியருள் கச்சியே கம்பனே....5.

வழித்துயர் மிகுந்தயிவ் வாழ்வினில்
விழித்துழல் வேனுனை வேண்டினேன்
பழித்திட வருகிறப் பாழ்வினை
கழித்தருள் கச்சியே கம்பனே....6.

Sunday, October 3, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--2

மண்டிடும் வினைதனில் வாடியும்
கொண்டிடும் அன்பினில் கோரியே
தண்டமிழ்ப் பாமலர் சாற்றினேன்
கண்டருள் கச்சியே கம்பனே....3.

கோருதல்=வேண்டுதல்.

தண்ணுமை துடிதரும் தண்ணொலிப்
பண்ணுடன் ஆடிடும் பாதனே
பெண்ணுமை பதியருள் பேறளி
கண்ணுதல் கச்சியே கம்பனே....4.

தண்ணுமை=மத்தளம்.

Saturday, October 2, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--1

வஞ்சி விருத்தம்.
-------------
'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.


நீர்த்திரை பனித்திட நெகிழ்வுடன்
நாத்தழும் பேறிட நானுனை
ஏத்திடு மாறறி யேனெனை
காத்தருள் கச்சியே கம்பனே....1.

நைவினை துயர்தரும் நாளுமே
எய்திடும் புகலினை எண்ணியே
துய்மலர் மாலைகள் சூட்டினேன்
கைகொடு கச்சியே கம்பனே.... 2

Saturday, September 25, 2010

எண்ணியது எய்தலாம்!--10


துளியவன் நினைவுகொண் டாலும்
...தொடர்வினைத் தீர்த்திடும் ஈசன்
தளியமை அடியரின் உள்ளம்
...தங்கிடும் அரனுமை நாதன்
ஒளிவெளி நீர்புவி காற்றாய்
...உயிர்களைக் காத்திடும் பெம்மான்
எளியனின் தாள்நினை அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Thursday, September 23, 2010

எண்ணியது எய்தலாம்!--9

விரிசடை மேவிடும் கொன்றை
...வெண்மலர் தும்பையும் சூடி
கரியதன் தோலுடை யாகக்
...கண்கவர் நீறணி கோலன்
அரிஅயன் தொழும்தழல் ஆனான்
...அளவிலா அருள்தரும் வள்ளல்
எரிசுடு கானரன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Wednesday, September 22, 2010

எண்ணியது எய்தலாம்!--8

காய்ந்திடு சினமெழக் காலன்
...கலங்கிடச் சிறுவனைக் காத்தான்
ஓய்ந்துடல் வீழ்ந்திடும் போதில்
...உறுதுணை எனவரும் ஐயன்
பாய்ந்திடு நதிசடை ஏற்றான்
...பவமதைத் தூர்த்தருள் பார்வை
ஏய்ந்தவன் தாள்தொழும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Friday, September 17, 2010

எண்ணியது எய்தலாம்!--7

துன்புடன் இன்பமும் சூழ்ந்தே
...தொடரிரு வினைதரு வாழ்வில்
மன்பதை உலகினை காக்கும்
...வரமெனும் அஞ்செழுத்(து) ஓதி,
"என்பரம் என்கதி நீயே!"
...என்றிட அருளினைக் காட்டும்
இன்பனை வழிபடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே.

Thursday, September 16, 2010

எண்ணியது எய்தலாம்! --6

தெழிதரும் முழவொடு பம்பை
...திகழுறு விரிசடை யோடே
எழிலுடை நுதல்விழி யானின்
...இணையிலா நடமிடு பாதம்
அழிவினில் ஆழ்த்திடும் ஊழை
...அண்டிடா(து) அருள்தரும்;விண்ணின்
இழிநதி சடையனின் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

தெழி=ஒலி.

Wednesday, September 15, 2010

எண்ணியது எய்தலாம்!--5

பெரும்பவத் துயரினை மாய்க்கும்
...பிஞ்ஞகன் அருளினை வேண்டி
விரும்பிடும் அடியரைக் காக்கும்
...விகிர்தனின் அருமையென் சொல்ல?
சுரும்புகள் ஆர்த்தெழும் சோலை
...சூழ்தளி மேவிடும் நாதன்
இருங்கழல் பற்றிடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

சுரும்பு=வண்டு

Monday, September 13, 2010

எண்ணியது எய்தலாம் !--4

நிறைவினை அளித்திடும் தாளை
...நிலையெனும் அடியரின் மெய்யன்
கறையுறு கண்டமும் கொண்டான்
...கரமதில் மான்மழு ஏந்திக்
குறையினைத் தீர்த்துயிர் காக்கும்
...குணநிதி மங்கையொர் பாகன்
இறையவன் புகழ்சொலும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Sunday, September 12, 2010

எண்ணியது எய்தலாம்!--3

சுடலையில் நடமிடு பாதம்
...தூதென சுந்தரர்க்(கு) ஏகும்
கடலெழு விடத்தையும் ஏற்கும்
...கருணையில் அமுதெனக் கொள்வான்
குடமிடு சாம்பலும் மங்கைக்
...கோலமாம் படியருள் செய்வான்
இடபனாய் அருள்பவன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Saturday, September 11, 2010

எண்ணியது எய்தலாம்! --2

நீற்றினில் துலங்குவெண் மேனி
...நிலவுடன் சடையினில் கங்கை
ஆற்றினைக் கொண்டவன் தன்னை
...அப்பனென் றடியவர் அன்பால்
போற்றிடும் பாடலுக் கென்றே
...புரிந்திடும் ஆடலைச் செய்யும்
ஏற்றனின் அருள்திறம் கொள்வார்
...எண்ணிய(து) எய்துவர் தாமே!

Friday, September 10, 2010

எண்ணியது எய்தலாம்!

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)

சிந்தையில் பரமனின் அன்பைத்
...தேக்கிநெக் குருகிடச் செய்யும்
செந்தமிழ் வாசகத் தேனில்
...திகழ்மணி வாசகர் உய்ந்தார்!
அந்தமொன் றென்றிலா ஈசன்
...அருளினை வேண்டிடு வார்கள்
எந்தவொர் ஐயமும் இன்றி
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....1

Sunday, September 5, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--10


பதத்தை மனத்தில் பதித்துப் பாடல்
...படைத்து அருளை நினைக்கும் அன்பர்க்(கு)
இதத்தை அளித்துக் காக்கும் ஐயன்
...இதயம் தன்னைக் குடிலாய்க் கொள்வான்
விதத்தில் வேட மேற்று ஆளும்
...விகிர்தன் எமனை பக்த னுக்காய்
உதைத்துக் கருணை செய்த ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Saturday, September 4, 2010

ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே!--9

மயலில் மூழ்கி இறையை எண்ணார்
...மயர்வைப் போக்கும் குருவாய் வந்தே
துயரில் ஆழ்த்தும் ஊழை வெல்லும்
...துணிவைத் தந்தே அருளும் தெய்வம்
நயனம் நுதலில் உடைய ஈசன்
...நதியும் மதியும் உமையும் கொண்டான்
உயரும் தழலாய் ஓங்கி நிற்பான்
...ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே.

Friday, September 3, 2010

ஓணகாந்தன் தளிசேர்நெஞ்சே!--8


விலையில் லாத இறையன் பேதான்
...வினையைப் போக்கும் இன்பம் சேர்க்கும்
வலையில் சிக்கும் மீனைப் போல
...வலிய மாயை தன்னில் வீழா
நிலையைத் தந்துய் விக்கும் வள்ளல்
...நினைந்து நாளும் துதித்துப் போற்றின்
உலைவை தீர்க்கும் உமையாள் பங்கன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

உலைவு=சஞ்சலம்.

Thursday, September 2, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!--7


சுமக்கும் பார மல்ல யாக்கை
...துணைவன் உறையும் அன்புக் கோவில்!
அமைக்கும் மேடை தன்னில் நம்மை
...ஆட்டு விக்கும் ஆடல் மன்னன்!
இமைக்கும் கண்ணின் ஒளியாய்க் காக்கும்
...இமயத் தலைவன் ஈடொன் றில்லான்!
உமைக்கன் பிலிடம் தந்தான் மேவும்
...ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே.

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--6

கோதும் பழியும் கூட்டும் வாழ்வில்
...குறியாய் பொருளென் றொன்றே கொள்வாய்
ஏதுன் இலக்கு? சொல்வேன் கேளாய்
...ஏதம் செய்யும் துன்ப வெள்ளம்
மோதும் பவமாம் ஆழி வற்றும்
...முக்கண் பரமன் பாதம் பற்றி,
ஓதும் நாவ லூரர் அன்பன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

கோது =குற்றம்
ஏதம்=துன்பம்

Wednesday, September 1, 2010

ஓணகாந்தன் தளிசேர்நெஞ்சே!--5

படையாய் வருத்தும் ஊழை வெல்லும்
...பாதை யொன்றைச் சொல்வேன்! அன்பைக்
கொடையாய் அருளும் ஐயன் பாதம்
...குறித்தே மலர்பூ மாலைச் சாற்றி
விடையா! விமலா! என்றே போற்றின்
...வினையைத் தீர்க்கும் மங்கை வாமம்
உடையான் நாவ லூரர் அன்பன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Thursday, August 26, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!-- 4

விரியும் சடையில் கொன்றை தும்பை
...விண்நீர் கங்கை மதியும் சூடி
கரியின் தோலை உடையாய் ஏற்கும்
...கடவுள் தானாய் அடிமை கொண்ட
பரிவின் திறத்தை நாவ லூரர்
...பதிகத் தாலே போற்றி செய்தே
உரிய அன்பில் கண்டு கொண்ட
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Tuesday, August 24, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! --3

மண்டை யோட்டில் பலியைத் தேரும்
...மங்கை பங்கன் வேடம் ஏற்றிக்
கொண்ட அன்பில் கூடும் உணர்வில்
...கும்பிட் டிறைவன் தாளை எண்ணும்
தொண்ட ரென்றும் தமிழ்த்தேன் பூவாய்த்
...தொடுத்த பாக்கள் வரமாய்த் தோன்றி
உண்ட ருளென்னும் எம்மான் ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!

Monday, August 23, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!--2

சுற்ற மென்றும் சொந்த மென்றும்
...சூழும் பந்தம் காடு மட்டும்
நற்ற வன் தாள் பற்றிக் கொண்டால்
...நன்மை என்றும் வந்து சேரும்
பெற்றம் ஏறும் பெம்மான் போற்றின்
...பேறாம் உய்வை அருளும் அன்பில்
உற்ற புகல்தந் தாளும் ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Sunday, August 22, 2010

திருஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--1

எண்சீர் விருத்தம் - '8 மா' வாய்பாடு.
1௫ சீர்களில் மோனை.


தலமும் புகழும் இசைக்கும் அன்பர்
...சகல உயிரின் உய்வை எண்ணி
மலரும் புகைகொள் தூபம் கொண்டு
...மனதும் நெகிழப் போற்றி னாரே!
விலகும் வினையும் தூசைப் போல
...விடையோன் அருள்வான்!ஓமென் றோதும்
ஒலியில் நிறைவாய் நிற்கும் வேதன்
...ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!

Sunday, August 15, 2010

சிவனைதுதி மனமே!--10

வெய்யவல் வினையில் நைவதென் நிதமும்
...வென்றிடும் வழியை நன்கறிந் திடுவாய்;
துய்மலர் அலங்கல் கைதொழு (து)இடவே
...துன்பமும் விலகும் இன்பமும் மலரும்
பெய்கழல் பணிந்தால் எய்ப்பது மறையும்
...பிஞ்ஞக னவனின் அஞ்செழுத் தைநினை
மெய்தனில் இடங்கொள் மைவிழி உமையின்
...வெண்மதி சடையன் நண்ணிடு மனமே.

எய்ப்பு=தளர்வு

சிவனைத்துதி மனமே!--9

தரிசென வாழ்ந்து மரித்திட லாமோ?
...சகமிதில் வாழும் தகவினைக் கேளாய்;
எரிதவழ் கானில் புரிநட மேற்றும்
...இறையடி யார்கள் மறையெனப் பாக்கள்
வரிசையில் தேனார் பரிசினில் தந்த
...வகையினை ஓர்ந்தே அகமகிழ் வோடு
சொரியருள் தேவைப் பரிவுடன் எண்ணி
...துதிபுகழ்ப் பாடி கதிநினை நெஞ்சே.

தரிசு= உபயோகமில்லாத நிலம்

Saturday, August 14, 2010

சிவனைத்துதி மனமே!--8

புனைசடை தன்னில் புனைமலர் சூடி
...புடையுமை பங்கன் நடமதைச் செய்யும்
கனைகழல் வேண்டின் வினைதனை மாய்க்கும்
...கருணைசெய் தெய்வம் குருவவன் போற்று!
தினையள வேனும் நினைபவர்க் கும்தன்
...திருவருள் தன்னைத் தருமவன் அன்பில்
நனைபவர் தாமே தனமுடைச் செல்வர்?
...நலம்தரும் நாமம் வலம்தரும் நெஞ்சே.


புனைமலர் = புன்னைமலர் (இடைக்குறை)

Friday, August 13, 2010

சிவனைத்துதி மனமே! --7

குந்தகம் செய்யும் பந்தமாம் கட்டில்
...கொண்டிடு துன்பம் மண்டிடும் வேளை
இந்தினைச் சூடும் செந்தழ லோன் தாள்
...எண்ணிடத் தீரப் பண்ணிடு வானே!
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற
...ஒப்பிலாத் தேவைத் துப்பெனக் கொள்வாய்!
சுந்தரன் நஞ்சக் கந்தரன் தன்னைச்
...சுற்றமென் றேற்றிப் பற்றிடு நெஞ்சே!

துப்பு=பற்றுக்கோடு.

முந்திடு அன்பால் இந்தனம் விற்ற = இசைவாணன் பாணபத்திரனுக்காய் விறகு விற்பவனாய் வந்து, சிவபெருமான் அருளியது.

Thursday, August 12, 2010

சிவனைத்துதி மனமே!--6

சுட்டெரி ஒளிவீழ் விட்டிலின் நிலையில்
...துக்கமாம் மயலில் சிக்கிடும் மனமே!
கட்டெனும் வினையில் பட்டுழல் வதுமேன்?
...காத்திடு மிறைவன் பார்த்தருள் புரிவான்!
கொட்டிடு முழவில் தட்டிடும் துடியில்
...கூத்தனின் நடனம் சேர்த்திடும் இதமே!
மொட்டவிழ் மலர்கள் இட்டவன் பதத்தை
...முன்னிட தருவான் இன்னருள் தனையே.

முன்னுதல்=கருதுதல்

Monday, August 9, 2010

சிவனைத்துதி மனமே!-- 5

கன்றினுக் கெனவே மன்றினில் நியாயம்
...காத்திடு மனுவைக் காத்திடும் இறைவன்
கொன்றையம் மலரை பொன்முடி அணிந்து
...கொண்டிடும் தயையில் தொண்டனுக் கருள்வான்
ஒன்றவன் தழலாய் நின்றவன் உமையின்
...உற்றவன் மதனைச் செற்றவன் பதத்தை
நன்றென மனதில் என்றுமே நினைத்து
...நஞ்சுடை மிடறன் நெஞ்சுறு மனமே!

Saturday, August 7, 2010

சிவனைத்துதி மனமே!-- 4

உணர்வினில் பக்தி மணமது வீசும்
...உயர்வுறு பாடல் மயர்வறச் செய்யும்
தணலுருக் கொண்டான் கணங்களின் ஈசன்!
...தவவுரு மேவும் சிவகுரு போற்றி
இணைகழல் பற்றித் துணையவன் என்றால்
...இகமதில் நாளும் புகல்தரும் வள்ளல்
இணர்மலர் மாலை கொணர்ந்தவன் மார்பில்
...இலங்கிடச் சூட்டி நலம்பெறு நெஞ்சே.

மயர்வு=அஞ்ஞானம்.
இணர்=பூ,பூங்கொத்து

Friday, August 6, 2010

சிவனைத்துதி மனமே! --3

சிரமதில் கங்கை கரமதில் ஓடு
...திகழ்ந்திடு சாம்பல் உகந்திடு மேனி
சரமெனக் கொன்றை உரகமும் சூடி
...சவமெரி காட்டில் நவமுற ஆடும்
பரமனின் தாளை சரதமென் றெண்ணு!
...பவமதில் சூழும் அவமதைப் போக்கும்!
அரனவன் நாமம் வரமென வேற்றும்
...அடியவர் அன்பன் வடிவுறு நெஞ்சே.

Thursday, August 5, 2010

சிவனைத்துதி மனமே!-- 2

பதவியும் பேரும் சதமென லாமோ?
...பரமனின் அன்பே நிரந்தர மாகும்!
நுதலுடைக் கண்ணன் விதமவன் நாமம்
...நுவலுவர் என்றும் நவையினை வெல்வார்!
இதமதைச் சேர்க்கும் பதமதை எண்ணின்
...இயமனைச் சாடும்;பயமதைப் போக்கும்!
இதயமும் கோவில் உதயமாய்த் தோன்றும்
...இணையடி ஆகும் புணைநவில் நெஞ்சே!

Wednesday, August 4, 2010

சிவனைத் துதி மனமே!--1

(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்தது. அரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)
"கருவிளம் தேமா கருவிளம் தேமா

...கருவிளம் தேமா கருவிளம் புளிமா"

நிதியவன் நெஞ்சில் வதிபவன் என்றும்
...நெகிழ்வுறு அன்பில் திகழ்ந்திடு மனமே!
சுதிநிறை பண்ணில் துதியிசை தன்னில்
...சுகமுறு அன்பர் அகமதில் வருவான்!
கதியவன் என்று பதிகமும் சொல்லிக்
...கழலிணைப் பற்றின் பழவினை தீரும்!
புதியவன், கங்கை நதி,மதி சூடி
...புகழினை ஓது! இகமதில் நிறைவே!

Sunday, August 1, 2010

திருப் பாதிரிப்புலியூர்-- 5


மின்னலெனும் வாழ்வுதனில் வினைவிளைக்கும் தீங்கழிப்பான்
உன்னவருள் புரிந்தடியார் உள்ளமுறை சோதியவன்
துன்னலர்தாம் நாவரசைத் துள்ளுதிரை இட்டாலும்
பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே ...9

வேதத்துள் ஒளிர்பவனாம் வினைதன்னைத் தீர்ப்பவனாம்
நாதத்தின் உருவுடையோன் நலம்தருதாள் நினைவிலப்பர்
ஏதத்தை புரிஅமணர் எறிதிரையிட் டாலுமரன்
பாதத்தைப் போற்றியடை பாதிரிப் புலியூரே ...10

Friday, July 30, 2010

திருப்பாதிரிப்புலியூர்! -- 4

பனிபடரும் வெள்ளிமலை பணியவரும் தெய்வமவன்
நனிசுடுவெவ் வினையகல நலமருளும் துணைவனவன்
இனிதறியா அமண்தீயர் எறிதிரையிட் டாலுமப்பர்
புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே....7.

புகைகொண்ட எரிகானில் பொற்கழலன் நடனமதில்
அகலாத அன்புகொள்ளும் அடியவரின் அருளாளன்
பகைகொண்டார் நாவரசைப் பாழியிட்டும் அஞ்செழுத்தைப்
 புகலென்றே கரையேறு பாதிரிப் புலியூரே....8.

பாழி=கடல்.

Wednesday, July 28, 2010

திருப் பாதிரிப்புலியூர் -- 3


துணியாகும் பிறைதன்னை சுடர்மேவும் சடைசூடும்
மணிநீல மிடறுடையான் மனத்திருத்தும் ஆயிரமாம்
அணியான நாமமதற்(கு) அன்புடைய நாவரசர்
பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே....5

கணைவீசு மதனைத்தன் கண்ணுதலால் செற்றவர்க்கு
அணையாத அன்புகொண்டால் அருள்கின்ற ஈசனவன்
அணைகின்ற இறையன்பால் ஆழ்கல்லும் அப்பர்க்குப்
புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே....6

Tuesday, July 27, 2010

திருப் பாதிரிப் புலியூர்! --2


வான்பிறையும் கங்கையையும் வார்சடையில் அணிந்தவனாம்
மீன்விழியாள் உமைமகிழும் வெண்ணீற்றன் ஈமயெரி
கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடைப் பாதிரிப் புலியூரே....3

தொடர்வினைகள் தருதுயரைத் தொலைந்தோடச் செய்திடுவான்
சுடரொளிரும் நுதல்விழியன் சோதியெனும் அருள்பெருக்கில்
அடைவிக்கும் அரன்பேர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
படகாகி அவரடைந்த பாதிரிப் புலியூரே....4

திருப்பாதிரிப்புலியூர் --1


(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

சரமாகப் பாய்கின்ற சகலவினைத் தொடரறுக்கும்
வரமாகத் திகழ்கின்ற வல்லவனின் அஞ்செழுத்தைத்
திரமாகும் கதியாகச் சிந்தைகொளும் நாவரசர்
பரனேற்றிக் கரையேறு பாதிரிப் புலியூரே....1

வாடியுளம் வெம்பவரும் வல்வினைகள் பொடியாகத்
தேடிவரும் அருளாளன் சீருரைக்கும் நாமமதைச்
சூடிமகிழ் சிந்தைகொளும் துய்யடியார் நாவரசர்
பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே....2

Sunday, July 4, 2010

அம்மானை!


கனல்கரத்தான் தீப்பறக்கும் கண்விழியான் வெந்தழலான்
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் அம்மானை!
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் ஆமாயின்
மனங்கொண்ட அன்பர் மலையாரோ அம்மானை!
முனம்வந்து ஆல்நிழல்கீழ் மோனமுற்றார் அம்மானை!

Saturday, July 3, 2010

முயற்சி!

துயிலா மனமொடு பயணம் செய்திடத்
...தொலைவாய் சென்றிடலாம்!
துயராம் தளர்வினை வென்றால் கிடைத்திடும்
...தொடராய் நன்மைகளே!
உயிராம் உணர்வினில் உதிக்கும் கருத்தினில்
...உயர்வாய் கவிபடைப்போம்!
அயரா முயற்சியில் வாய்க்கும் இலக்குமே
...அடைதல் கூடுமன்றோ?


(சந்தவசந்தக் குழுமத்தில் பயிற்சிக்காக முன்பு இட்ட
அறுசீர்விருத்தம்.)

Monday, June 21, 2010

கடவூர் அடைநெஞ்சே!--5


புரியா மயலாம் மயக்கங்கள்
இரியக் கருதில் அடைநெஞ்சே!
கரிகா டுடையான் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே....9

கரிகாடு =சுடுகாடு

கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருமின் அருள்தங்கும்
கவசத் தலமாம் கடவூரே!....10

அவசம்=வசமின்மை, பரவசம்

Saturday, June 19, 2010

கடவூர் அடை நெஞ்சே!--4



புணையாய் வருமே புகல்நெஞ்சே!
துணையா ருமிலா தவந்திக்குப்
பிணையா ளெனவே அருள்செய்யக்
கணைதொட் டவனூர் கடவூரே....7

கணை=மண்வெட்டி.


நிரலாய் வினைசெய் துயர்சொல்லத்
தரமன் றெனநீ அடைநெஞ்சே!
அரனார் அவுணன் விறல்தீர்த்து
கரவாள் தருவார் கடவூரே....8

Thursday, June 17, 2010

கடவூர் அடைநெஞ்சே!--3


புவிவாழ் வெனுமோர் பவமூழ்கித்
தவியா வழியாம் அடைநெஞ்சே!
சவிசேர் நவியன் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே....5

சவி=ஒளி,அழகு.
நவியம்=புதுமை,புதியது.


நிலையா உடலென் றறிவோடு
நலமே கொளநீ நவில்நெஞ்சே
அலைசேர் நதியன் அரவேதான்
கலமா உடையான் கடவூரே....6

கலம்=ஆபரணம்,அணிகலம்

Tuesday, June 15, 2010

கடவூர் அடைநெஞ்சே!-- 2


கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா யுலையா(து) அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அருள்செய்த
கருமா உரியான் கடவூரே.... 3

உலை=அலைதல்.

தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்
கலையா மனமாய் மணதூபக்
கலயர் பணிசெய் கடவூரே....4

அலம்=துன்பம்

Sunday, June 13, 2010

கடவூர் அடை நெஞ்சே!---1


(வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)

குறைசேர் மனதுள் குமையாமல்
நிறைவே அடைய நினைநெஞ்சே!
பிறையேர் சடையன் பெருநிதியன்
கறைசேர் மிடறன் கடவூரே.....1

குமைதல்=வருந்துதல்
ஏர்=மிக்க அழகு.


இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!
மருமா மலர்சூழ் பொழில்மேவும்
கருமா மிடறன் கடவூரே.....2

Tuesday, June 8, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! --10


வீசுமோர் தென்றலாய் வெம்மையில் தோன்றுவார்
பூசுவார் நீற்றினைப் பூணுவார் நாகமே
தேசுசேர் மேனியார் சீர்கழல் தாளிணைப்
பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.

Sunday, June 6, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! --9

அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடந் தந்திடும் தாகமா சாகரத்
திங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.


தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்.

Saturday, June 5, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! - -௮.

தேகமே ஆலயம் தெய்வமும் நெஞ்சினுள்
ஏகனாய் மூலனாய் ஈசனாய்க் காப்பவர்
பாகமாய்த் தேவியைப் பட்சமாய் வைத்தவர்
நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.

பட்சம்=அன்பு

Friday, June 4, 2010

தாள்தொழாய் நெஞ்சமே! -- 7

வேசமோ டாடலை மேவிடும் நாயகா!
பூசலார் உள்ளமே பொற்புறும் கோவிலாய்ப்
பூசனை நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்
நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.

Thursday, June 3, 2010

தாள்தொழாய் நெஞ்சமே! -- 6

காண்டுடன் வீசிடும் காலனின் பாசமும்
மூண்டெழும் பக்தியின் முன்னரென் செய்திடும்?
தூண்டிலின் மீனெனத் துன்புறா தின்புறத்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.

காண்டு=கோபம்.
பாசம்= கயிறு வடிவான ஆயுத வகை.

Wednesday, June 2, 2010

தாள் தொழாய் நெஞ்சமே!--- 5

தொல்லையைக் கூட்டிடும் சோதனை யாவுமே
இல்லையென் றோட்டுமே எம்பிரான் தண்ணருள்
தில்லையின் கூத்தனார் செம்மலர் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.

Tuesday, June 1, 2010

தாள் தொழாய் நெஞ்சமே -- 4

புன்புலால் யாக்கையைப் போற்றியேக் கொண்டதென்?
துன்பமே;நெஞ்சமே!"சோதியே!சங்கரா!
என்பதே மாலையாய் ஏற்றவா!நின்மலா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.

Monday, May 31, 2010

தாள்தொழாய் நெஞ்சமே -- 3

வாய்சொலும் பேர்புகழ் மல்குநீர்ப் பொங்கிடத்
தூய்மலர் மாலையில் தோன்றிடும் சோதியர்
தாய்தரும் நேசமாய்த் தண்ணருள் செய்பவர்
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.

Saturday, May 29, 2010

தாள்தொழாய் நெஞ்சமே --2

ஏற்றினில் வந்துமே இன்னருள் செய்பவன்
ஊற்றெழும் பக்தியால் உற்றிடும் சுத்தனாம்
பேற்றினும் பேறவன் பெற்றியைப் பேசுதல்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.

Friday, May 28, 2010

தாள்தொழாய் நெஞ்சமே --1

(இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு.
அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது.


சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்"
சிவசிவாவிற்கு என் நன்றி!)


சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதில் சிந்தையாய்த் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கின்புசெய் பேரினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!

நாவினுக் கின்புசெய் பேரினான்= நாவினுக்குச் சொல்ல(ச் சொல்ல) இன்பம் தரும் பேரை உடையவன்.

Wednesday, May 26, 2010

தஞ்சைப் பெருங்கோவில் --5


அழலார் நுதல்கண்ணால் அனங்கன் தனைச்செற்றான்
கழலை முடிதன்னைக் காணா இருவர்க்கும்
தழலாய் நிமிர்ந்தானின் தஞ்சைப் பெருங்கோவில்
தொழலே வினைதீர்ந்து சுகிக்கும் வழியாமே.

தவமே உருவாகத் தருஆல் நிழல்கீழே
சிவமாய் அமர்மோனத் திருவாய் அருளீசன்
தவள விடையேறி தஞ்சைப் பெருங்கோவில்
எவர்போற் றினும்வேண்டும் எல்லாம் பெறுவாரே.

Sunday, May 23, 2010

தஞ்சைப் பெருங்கோவில் --4


புங்கன்; அடியார்கள் போற்றும் அருளாளன்;
கங்கை நதியோடு கனக நிறக்கொன்றைத்
தங்கும் சடையானின் தஞ்சைப் பெருங்கோவில்
உங்கை குவித்தேத்தின் உறுநோய் அடையாவே.

புங்கன்=தூயவன்.

மலையன்; அருள்செய்யும் மன்னன்; சிரமீது
அலையும் நதிசூடி ஆடல் புரிகின்றத்
தலைவன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
தலையால் தொழுவார்கள் தவியார் தரைமீதே.

Wednesday, May 19, 2010

தஞ்சைப் பெருங்கோவில் -- 3


நிழலும் தரைவீழா நீள நெடுங்கோவில்
விழையும் அடியார்க்கு வேண அருள்செய்யும்
தழலன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
நிழலை அடைநெஞ்சே! நெருங்கா வினைதானே....5

நிழல்=சாயை

//நிழல் எனில் பல பொருள்கள்.
நிழல் - தானம்; புகலிடம்;
பல பாடல்களில் நீழல் எனவும் வரும்.
திருவடித் தலம், திருவடி நிழல்,,,,//(மிக்க நன்றி!சிவா!)


வரித்தான் கரித்தோலை; மங்கை யொருபாகன்
சரித்தான் மனக்கோவில் தத்தும் நதிகுஞ்சி
தரித்தான் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
கரத்தால் தொழுவாரைக் காலன் அணுகானே.....6

சரித்தல்=வசித்தல்
வரித்தல்=உடுத்துதல்
குஞ்சி=தலை,உச்சி மயிர்.

Monday, May 17, 2010

தஞ்சைப் பெருங்கோயில் --2

வெம்பும் உளமோடு வீணில் அலையாதே
இம்பர் அடியாரின் ஈசன் உமைநேசன்
சம்பு உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
நம்பி அடைநெஞ்சே நாளும் வருமின்பே.

மையல் எனுமோக மாய வலைவீழ்ந்து
பைய அழியற்க! பாதி மதிசூடி
தையல் ஒருகூறன் தஞ்சைப் பெருங்கோவில்
ஐயன் அடிபோற்றி அல்லல் அறுநெஞ்சே.

Friday, May 14, 2010

தஞ்சைப் பெருங்கோயில் !

("மா மாங்காய் மா மாங்காய்" - என்ற வாய்பாடு)

(சிவசிவாவின் பின்னிரண்டடிக்கு, நான் முன்னிரண்டு அடி எழுதுகிறேன். சிவசிவாவுக்கு என் நன்றி.)


ஓதை மிகுபாரில் உய்யும் வழிதேடும்
வாதை யினிவேண்டா மன்றில் நடமாடும்
தாதை உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
பாதை அறிநெஞ்சே! பற்றா வினைதானே.....1

ஓதை=ஆரவாரம்
வாதை=துன்பம்.


மதிக்கும் திருமேவும் மன்னர் தமதன்பால்
செதுக்கி உயிரூட்டும் சிற்பக் கலையோங்கப்
பதிக்குப் பணிசெய்த தஞ்சைப் பெருங்கோவில்
துதிக்கும் அடியாரைத் தொடரா துயர்தானே.....2

Wednesday, May 12, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்--- 10

முதுவழி யதுமுயர் தவநெறி முறையினில் இறைவனை அடைவது
பொதுவழி நெகிழுறு அடியவர் புகலென இறைதொழு நவவழி
இதுவழி சிவமதன் திருவினை இகமதில் எளிதினில் அடைகிற
மதுவழி மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

நவ வழி:
ஒன்பது வித பக்தி:
1.ஸ்ரவணம் 2.கீர்த்தனம் 3.ஸ்மரணம் 4.பாதசேவனம்
5.அர்ச்சனம் 6.வந்தனம் 7.தாஸ்யம் 8.ஸக்யம் 9.ஆத்ம நிவேதனம்.

Monday, May 10, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்-- 9

கருவினில் துளியென வளருடல் கடைசியில் முதுமையில் உதிர்வுறும்
வருகிற அரிதெனும் பிறவியும் மறையவ்ன் அருளினில் பொருளுறும்
முருகெனு அழகினில் நிறைவுறு முழுமுதல் குருபரன் நிறமுறு
மருமிகு மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Sunday, May 9, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்-- 8

குறியினை யுறமன உறுதியில் குணமெனும் கருணையும் புரிபவன்
வறியவ ளிறைபணி தமதெனு மனமொடு அடிபடு சிவனவன்
முறியொடு மணமது தடையுற முறையொடு அடிமையும் கொளுமிறை
மறியொடு கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


குறி=இலக்கு
வறியவள்=வந்தி.வந்திக்குக் கூலி ஆளாய்வந்தத்
திருவிளையாடல்.
இறைபணி=அரசாணை
முறி=பத்திரம்.(திருமணத்தைநிறுத்தி
சுந்தரரை அடிமைகொண்டது.)

Saturday, May 8, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 7

பொதிமிகு சுமையென வருவினை பொடிபட இணையடி அருளுவன்
சுதியொடு எழுமிசை இனிதுறு சுகமென உணர்வதில் நிறைபவன்
புதிரொடு புதிரினில் விடையெனும் புரிதலை அளி இறை குளிருறு
மதிதவழ் சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Thursday, May 6, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் -- 6

பதமிடு நடமதில் மனமதும் பரவச நிலையினில் மகிழுறும்
இதமுடன் மவுனமும் உணர்வினில் இசைவுற அளிசெயும் குருபரன்
சதமெனும் அவனருள் நினைபவர் தமதிறை எழிலுடன் மிளிர்கிற
மதகரி உரியணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Wednesday, May 5, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் ---5

முழுமுத லிறைவனை அகமதில் முறையுடன் நெகிழுள மொடுதொழும்
குழுவினில் இணையவும் அருளுறு குருவடி பணியவும் புரிபவன்
உழுவையி னுரியுடை யுடனொரு உரகமு இடையணி குழகனின்
மழுவமர் கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Tuesday, May 4, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 4

பிழையையும் குணமெனும் பெருநிதி யவனடி சிரமதில் அணிகுவம்
இழையணி பணியுடன் இணர்மலர் தொடையலில் இசைவுடன் ஒளிர்பவன்
விழைகிற அடியவர் விதமுற நடமிடு பரமனின் அலைநதி
மழைபொழி சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Monday, May 3, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 3

பழவினை யதிலுழல் விழலெனும் பயனறு பிறவியின் தளையற
அழலுட னுழைதிகழ் கரமுடன் அபயமு மளிதயை மிகுபவன்
தழலுறு சுடலைவெண் பொடியணி சடையவன் இடமுறை உமையுடன்
மழவிடை மிசைவரும் அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

உழை=மான்

Sunday, May 2, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 2

துணிபிறை யணிசடை யினில்நதி துலங்கிட வருநம திறைவனும்
அணிசெயும் நுதல்விழி யதிலுறு அழகினில் திகழ்ந்திட வருபவன்
தணியுறும் பனிமலை யுறைசிவன் சதியுமை அருள்பெறு பவர்தொழு
மணியொளிர் மிடறுடை அரனகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

தணி=குளிர்ச்சி.

மயிலையை அடைபவர் மகிழ்வர்

விலையிலை யெனுமுயர் வழிசெல விதிதரும் இடரதும் விலகிட
வலையெனும் பிணிசெயும் பவமதன் மயலிருள் தொலைவுற அருள்பவன்
கலைமதி நதிசடை மலர்பதம் கருதிட வருபவன் இடமதில்
மலைமகள் இணையரன் உறைநகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

Tuesday, April 27, 2010

ஆலவாய் அண்ணல் ---5

விந்தை யான விரிசடை கொண்டவன்
அந்த மில்நடம் ஆடிடும் தாண்டவன்
சுந்த ரேசனாய்த் தோன்றி அருள்பவன்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

நாவி னுக்கிதம் நல்குமஞ் சட்சரத்
தேவி னைத்தெளிந் தேத்தும் அடியவர்
பாவி னுக்குப் பரிந்தருள் செய்பவன்
சேவில் ஏறும் திருஆல வாயனே!

ஆலவாய் அண்ணல் --4

இந்த னம்சிர மேற்றே இசைத்தமிழ்
சந்த தம்வெலத் தந்தருள் செய்தவன்
சிந்தை மேவிடு செஞ்சடை ஈசனாம்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

இந்தனம்=விறகு(விறகுவெட்டியாய் பாணபத்திரனுக்கருள்செய்தது)
வெல்ல =வெல(இடைக்குறை)

ஓயா அன்பினில் உன்னிட நிற்பவர்
நோயாம் வல்வினை நூக்கிடும் அங்கணர்
"நேயா! வந்தருள் நின்மலா!"என்றிடத்
தாயாய்க் காப்பவர் ஆலவாய்த் தந்தையே!

நூக்குதல்= தள்ளுதல்.

Friday, April 23, 2010

ஆலவாய் அண்ணல்! -- 3



விரியும் வானில் மிதந்திடும் கோள்களை
உரிய பாதை ஒழுங்கில் சுழன்றிடப்
புரியும் அந்தமில் புண்ணியச் சோதியர்
அரிவை பாகர் எம் ஆலவாய் அண்ணலே!

தந்த இன்னலைத் தாங்கிடும் பக்தியில்
நந்தன் தில்லையின் நாதனைக் கண்டனன்
அந்த மொன்றிலா அன்பினுக்(கு) ஆட்படும்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

Saturday, April 17, 2010

ஆலவாய் அண்ணல் -- 2

நீண்ட பாதையில் நீளிருள் சூழ்ந்திட
வேண்டும் நல்லொளி மேவுமோ? நெஞ்சமே!
தாண்ட வப்பதம் தந்திடும், வானதி
பூண்ட ஆலவாய் அண்ணலைப் போற்றவே!

மூல மானவன் மோ(து)அலை கங்கையைக்
கோல மாகக் குளிர்சடை ஏற்றவன்
ஓல மேயிட உய்வை அளிப்பவன்
ஆல வாய் அமர் கண்ணுதல் அண்ணலே!

Friday, April 16, 2010

ஆலவாய் அண்ணல் -- 1

ஆலவாய் அண்ணல் (திருஆலவாய் - மதுரை)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
முதல் சீர் 'மா'. இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும். 2௩௪ சீர்களுக்கிடையில் வெண்டளை பயின்று வரும்.
நேர் அசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்துகள். நிரை அசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்துகள்.)


சிவ சிவாவுக்கு என் மனமுவந்த நன்றி!


நீறு பூசு நிமலன் விரிசடை
வீறு மேவிடு விண்ணதி யோடொரு
கீறு வெண்பிறைக் கீற்றனின் தாள்தொழப்
பேறு கூட்டும் பிரான் ஆல வாயனே!

எடுத்த பொற்பதம் ஏந்தெழில் ஆடலை
மடுத்த அன்பரும் வாழ்த்தி மகிழ்வுடன்
தொடுத்த பாமலர் சூடியே இன்னருள்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே!

Sunday, April 11, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 10




இருவினையில் உழந்து வாடி
...இன்னலுறல் தகுமோ ஐயா!
உருகியுனை நினைந்து போற்றும்
...உள்ளமதை எனதாய்க் கேட்டேன்!
கருவயிற்றில் சுமந்த பெண்ணைக்
...காத்திடவே தாயாய் வந்தாய்!
குருமையெனும் குணங்கொள் மெய்யா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குருமை=பெருமை.

Saturday, April 10, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! ---9

பொய்ம்மைமிகு உலக வாழ்வில்
...புன்மைநிலை நீங்க உன்றன்
மெய்ம்மையுணர் மதுர நாமம்
...மேவிநிதம் பாடி வந்தேன்!
உய்வதற்குன் மலர்த்தாள் தன்னை
...உள்ளமதில் பற்றி நின்றேன்!
கொய்ம்மலர்சூழ்ந் திலங்கும் தேவே!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Thursday, April 8, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே!--- 6,7,8.

தும்பிக்கை யானின் தம்பி
...சூர்வென்றான் குருவாய்க் கொண்டாய்!
நம்பிக்கை ஒளியாய்க் காப்பாய்!
...நஞ்சுண்டா! பணிந்தேன் உன்னை!
வம்பிற்கும் வீணே நாளும்
...வாதிற்கும் கழிந்த தந்தோ!
கும்பிட்டு வாழ்வேன் ஐயா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

சுற்றிவரும் வினையில் சிக்கி
...சோர்வெனுமோர் பிணியில் நொந்து
உற்றதுயர் மிகவும் வாட்ட
...உன்னடியின் அருமை கண்டேன்!
நற்றவசேக் கிழாரும் அன்பால்
...நம்பனுனக்(கு) எடுத்த கோவில்
கொற்றமிக விளங்கத் தோன்றும்
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

நீறாலே பொலியும் ஈசா!
...நெஞ்சார நினைந்துப் பாடி
மாறாத பக்தி யோடு
...வாழ்நாளும் செல்ல வேண்டும்!
பேறாகப் பெறுப வற்றுள்
...பேறாமுன் அருளே!உன்பேர்
கூறாஅந் நேரம் காப்பாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Tuesday, April 6, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 5

செண்டான மலரில் கட்டி
...சீராகத் தொடையல் தந்தேன்!
விண்டோத முடியா நாதா!
...வேதங்கள் பணியும் பாதா!
தண்டோடு துவளும் மேனி
...தள்ளாடும் அந்நாள் காலன்
கொண்டோட, என்முன் நிற்பாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 4

தஞ்சமென அடியார் கூடிச்
...சங்கரனாம் உன்னைப் பாடப்
பிஞ்சுமதி நதியைச் சூடிப்
...பிஞ்ஞகனாய் நடிக்கும் ஈசா!
நெஞ்சமதில் நினைந்து நாளும்
...நின்னருளை நயந்தேன் ஐயா!
குஞ்சிரிப்பில் கருணை காட்டும்
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Sunday, April 4, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! -- 3

வறுமையினில் நிதியாய் வந்தாய்!
...வரமென உன் அபயம் கேட்டேன்!
சிறுமதியன் எனது கீழாம்
...சிறுமைகளை நீக்கி ஆள்வாய்!
நறுமலரில் தொடுத்த மாலை
...நயமுறவே இலங்கு மார்பா!
குறுநகையில் மிளிரும் ஈசா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குன்றத்தூர் அமர்ந்த கோவே! -- 2

தெளிவில்லா உள்ளம் கொண்டே
...செயலொன்றும் அறியேன் காப்பாய்!
துளியாம்வெண் மதியைச் சூடிச்
...சுடர்மேவும் தழலோய்! வானாய்
வெளியாகி புவியாய் காற்றாய்
...விரிந்தெங்கும் இலங்கும் தேவே!
குளிர்கங்கை சடையில் ஏற்றாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Saturday, April 3, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே!

துடிகொண்ட இசையில் சேர்ந்து
...சுழல்கின்ற கழலோய்!கூத்தா! !
முடிகொண்ட கங்கை யோடு
...முதிராத பிறையும் சூடி
பொடிகொண்ட மேனி யென்றும்
...பொலிவாகும் அரனே! உள்ளம்
குடிகொண்டு காக்கும் ஐயா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

Wednesday, March 31, 2010

என்னால் முடியும்!

என்னால் முடியு மென உறுதியுடன் முயன்றிடுவாய்!
...ஏறுமுகம் நிச்சயம்!
சொன்னால் முடிவதில்லை செயலாற்ற முனையவரும்
...சோதனையை வென்றிடு!
முன்னால் பெரியவர்கள் சொல்லிவைத்த அனுபவங்கள்
...முற்றிலும்தான் உண்மையே!
பொன்னாய்ப் புடமிடவே பொற்பாகும் உயர்வினிலே
...போற்றிடவே வாழ்ந்திடு!

(சந்தவசந்தக் குழுமத்தில் சில வருடங்கள்
முன் இட்டது.கொஞ்சம் சரிசெய்து இட்டுள்ளேன்)

Friday, March 26, 2010

இறையே!எழிலே!

கழையும் தருவும் மழையும் கடலும் பொழிலும் இறையுன் எழிலார்க்கும்!
கழலின் கழலும் சுழல முழவ மதிரும் நடனம் விழிஈர்க்கும்!
குழையும் அசையும் தழையும் சடையும் இழைய இலங்கும் அழகோனே
உழையும் துடியும் அழலும் விளங்கு மழுவும் உடைய குழகோனே!

Tuesday, March 23, 2010

மங்கா ஒளியே!

(ஒன்று,மூன்று,ஐந்து, சீரெதுகைகள்.
அடியீற்றில் இயைபு வரத் தொடுத்தல்.)

கங்கா தரனே வெங்கா டுடையாய்!மங்கா ஒளியே!அருவானாய்
துங்கா! உமையாள் பங்கா! பவமே தங்கா தருளும் குருவானாய்!
பொங்கார் கழலின் சங்கார் ஒலியின் சங்கீ தநடம் உனதாகும்!
சங்கா ரசிவா! எங்கோ! உனது சிங்கா சனமென் மனமாகும்!

Sunday, March 21, 2010

கோதிலானைப் பாடுவோம்!

6தேமா+கூவிளம்.

ஆதி யாய நாதி யான
...சோதி யானை நாடுவோம்!
நீதி வாழ பூதி தந்த
...கோதி லானைப் பாடுவோம்!
பாதி யான மாதின் நேயன்
...சோதித் தாளும் மெய்யனாம்!
வாதி டாமல் ஓதி யென்றும்
...போதிப் பாரின் ஐயனாம்!

Thursday, March 18, 2010

வண்ணப் பாடல்!--- 2.

'தந்தனாத் தானத்..தனதான'

பிஞ்சகாத் தேடற்.. கரியோனே!
...பித்தனாய்ப் பாடற்.. கெளியோனே!
நஞ்சமாய்க் காணக் களமானாய்!
...நம்புவார்க் காகத்..துணையாவாய்!
வஞ்சமீக் கூரத்..தருமாயை
...மண்டிவாட் டாதக் கழலோனே!
தஞ்சமாய்த் தாளைப்..பணிவோரின்
...சங்கமாய்ச் சேரற்.. கருளாயே!

Sunday, March 7, 2010

வண்ணப் பாடல்!

'தனதானத்..தனதான'

விடையேறிக்..கனிவோடு
...வினையோடப்..புரிவாயே!
சடையோடுப்..பொலிவாகும்
...தவமோனக்..குருநாதா!
மடைவாளைப்..பயிரோடும்
...வளமானத்..திருவூரா!
கடையேனுக்..கருளாயோ
...கடவூரில்..பெருமானே!

Thursday, February 25, 2010

ஆரூர் அடை நெஞ்சே!-- 5.



பொங்கழல் வண்ணனைப் புண்ணிய மூர்த்தியைச்
சங்கரி பங்கனைச் சாற்றுக நெஞ்சமே!
வெங்கடல் ஆம்துயர் வற்றிடச் செய்கிற
அங்கணன்மே(வு) ஆரூர் அடை.

துணியாம் பிறையினைச் சூடும் சடையன்
மணியார் மிடறன் வணங்கிடு நெஞ்சே!
பிணியாம் பவமழிக்கும் பெம்மானாம் கங்கை
அணிஅரன்மே(வு) ஆரூர் அடை.

Tuesday, February 23, 2010

ஆரூர் அடை நெஞ்சே! --4.



கண்ணில் உதிரம் கசிந்திடக் கண்டுதன்
கண்ணை இடந்திறைக்குக் கண்ணப்பும் அன்புமனத்
திண்ணற்குத் தன்னுடனே சேர்ந்திருக்க இன்னருள்செய்
அண்ணல்மே(வு) ஆரூர் அடை.

உளிஒலிக் கற்றளி உள்ளத்துள் செய்துக்
களியுறுந் தொண்டரைக் காத்தவன்காண் நெஞ்சே!
ஒளிர்கழல் கூத்தில் உலப்பிலா இன்பம்
அளிஅரன்மே(வு) ஆரூர் அடை.

உலப்பிலா=அழிவிலா

Saturday, February 20, 2010

ஆருர் அடை நெஞ்சே!--3

எமனைச் சினத்துடன் எற்றி யுதைத்தோன்
கமல மலர்ப்பதம் காத்திடும் நெஞ்சே!
சுமையென்பார் தீவினை சுட்டிடும் நேசன்
அமலன்மே(வு) ஆரூர் அடை.

கொய்யும் மலர்கொடு கும்பிடும் நெஞ்சமே!
பைய உறுவினைப் பையுளும் நீக்குவன்;
துய்யன்சீர் வன்றொண்டர் சுந்தரர் பாடிடும்
ஐயன்மே(வு) ஆரூர் அடை.


பையுள்=துன்பம்

Wednesday, February 17, 2010

ஆரூர் அடை நெஞ்சே!-- 2.

மின்னல் நிகராம் மிடியுடை வாழ்விதில்
பொன்னில் புனைகழல் பூம்பதம் உன்னுக!
தன்னன்பால் யாவும் தடுத்தருள் செய்கிற
அன்பன்மே(வு) ஆரூர் அடை.

சித்தம் தெளிவாக்கும் செம்மை மருந்தவன்
சுத்தி வருவினைச் சுற்றறச் செய்பவன்
நித்தம் அருளால் நிறைந்திடும் என்னெஞ்சே!
அத்தன்மே(வு) ஆரூர் அடை.

Sunday, February 14, 2010

ஆரூர் அடை நெஞ்சே!

வலையில் பிணிக்கும் மயலுறு வாழ்வில்
நிலையைக் கருதிடும் நெஞ்சே!விலையில்
கலைச்சுடர் கூத்தன் கருணை புரிவான்
அலைச்சடையன் ஆருர் அடை.

சுழலும் சகடச் சுழற்சியில் சிக்கி
உழலும் வினையை ஒழிப்பான்!தழலன்
கழல்வண்ணத் தண்ணளிக் காத்திடும் நெஞ்சே!
அழல்வண்ணன் ஆரூர் அடை.

Thursday, February 11, 2010

திருவடிநிழல் துணையதே !

விடையுடையவன் வியனுறுவிரி சடையுடையவன் மறிமழுப்
படையுடையவன் மயலதும்நைய வயமருள்பவன் மறையறை
நடையுடையவன் அடியரிதயம் இடமுடையவன் ஒளிமலர்த்
தொடையலணியும் நயமுடையவன் திருவடிநிழல் துணையதே !


வயம்=வெற்றி
நயம்=அனுகூலம் செய்பவன்,கண்ணோட்டமுடையவன்

Wednesday, February 10, 2010

திருமுறை தினம் உரை!

முனிசனமுறு சமனநிலையும் அவன்செயலென அறிகுவை
நனிகனிமனந் தனில்புனைஅடி யவர்திருமுறை தினமுரை
பனிமலைஅரன் சனனமரண வினைபொடிசெயும் கதியவன்
புனிதமவனின் பதமெனுமலர் இணைதனைதுதி அருள்வனே.

Monday, February 8, 2010

கழல் அருளுமே!

தணலுருவினன் குணங்குறியிலன் அணைந்தருள்செயும் சிவனவன்
கணமவனுரு உணர்வதிலுறு துணைதருமுயர் மணியவன்
பிணமெரிநிண மணசுடலையில் இணையிலிநடம் புரிகுவன்
ரணமிகுஇரு வினைமுரணழி இணைகழல்பிணை அருளுமே!

Saturday, February 6, 2010

அடியவர் விழைவரே!

சுடர்விழிநுதல் கரமதில்மறி மழுப்படையழல் துலங்கிட
மிடல்மிகுகொடு புலியதளுடை இடைதவழ்பட அரவமும்
படர்சடைமுடி விடமிடறுடன் துடிஉடுக்கையும் ஒலி பட
தொடரடியவர் பொடியணிபவன் நடமிடுபதம் விழைவரே!

திருநடம் நினைமினே!

சுதியிதம்செயும் இசைதவழ்ந்திடும் துதிபதிகமும் இனிதுற
நிதியெனும்தயை மிகுந்தருளினில் விதிசிதைந்திடத் தொலைத்திடும்
கதியதுதரும் பதம்பதிந்திடும் மனதளமதும் நிறைவுறும்
மதிநதியணி திகழ்விரிசடை பதிதிருநடம் நினைம்மினே!

Tuesday, February 2, 2010

கருணையின் வடிவே!




கருணையின் வடிவாய்க் கனியும் தாய்முன்
...கரம்தவழ் குழந்தை யாகினேன்
அருளொளிக் குளிராய் அணைக்கும் பார்வை
...அளித்திடும் இதத்தைக் காண்கிறேன்!
தருமுயர் அபயம் சதமாய்ச் சாற்றும்
...தயைநிறை கரங்கள் தோன்றுதே!
திருவடி யிணையில் திளைக்கும் உள்ளம்
...சிவையெனும் உமையைப் போற்றுதே!


(சில வருடங்களுக்கு முன் சந்தவசந்தத்தில் நான் எழுதியது)

(கருவிளம் மா மா தேமா
கருவிளம் மா கூவிளம்)
(1-- 3-- 5 மோனை)

Monday, February 1, 2010

இறைவனேஅருள்செய்வான்!

குவைநிதிவளர் கவினிளமையும் சுவைதருவதும் எதுவரை?
இவைஅவையென தினம்வருந்திடும் விதம்திரிவதில் பயனிலை!
சிவையவள்பதி சிவகுருதவ நிலைநினைவுகொள்! மயலறும்!
நவையுறுபவ வினையழிவழி வகையருள்செயும் இறைவனே!

Sunday, January 31, 2010

முறைசெயும் நம திறைவனே!

குறைபிறைஉறை விரிசடையொளிர் நறைமலர்ச்சரம் அணிபவன்
மறையறைகழல் தொழும்சிறுவனுக் கருளமறலி உதைத்தவன்!
கறைமிடறுடை நடமிடுசிவன் உறுநரினுளம் நிறைபவன்!
சிறைஉறுபவ வினையறும்படி முறைசெயும்நம திறைவனே!


சிறை=தளை
உறுநர்=அடியார்

Friday, January 29, 2010

சிலம்பொலிகழல் பணிவமே!

(கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளம்)

அலைகடலிலும் புலர்விடிவிலும் அலர்மலரிலும் உறைபவன்
கலைநிலவெழில் பொலிஅலைநதி துலங்கிடவருள் இறையவன்
நிலைகுலைவுற மயலிருள்வினை தொலைந்திடவரு கதிரவன்
சிலையழகுமை உளமிலங்குவன் சிலம்பொலிகழல் பணிவமே!


விடிவு= விடியல்

Saturday, January 23, 2010

மதிசூடி துதிபாடி! - 4



பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சுகமும் துயரும் இருவினையாய்த்
...தொடரும் பந்தத் தளைகளறத்
திகழும் உனது நிழல்தருமே
...செறிந்த பக்தி நெறிதனையே!
இகமும் பரமும் உனைநினைக்கும்
...இதமாம் பதமே அளித்தருள்வாய்!
புகழும் புகலும் தரும்பரமா!
...பூலா வனத்துப் பெருமானே!

சுதியில் இசைந்த இசைவடிவே!
...சுயம்பு லிங்கேஸ் வரஹரனே!
மதுவின் இனிப்பில் சுவைவருமோ?
...மதுரம் தருமுன் அஞ்செழுத்தே!
எதுவும் வசமுன் அருள்நிழலில்
...இகமாய்ப் பரமாய்த் திகழ்பவனே!
பொதுவில் நடனம் புரிந்தருளும்
...பூலா வனத்துப் பெருமானே!

மதிசூடி துதிபாடி! - 3

பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சிரத்தில் கங்கை மதியணிந்து
...திகழும் மார்பில் சரமிலங்க
கரத்தில் மழுமான் அழலுடனே
...கனகச் சபையில் நடமிடுவாய்!
வரத்தை அருளும் தயையுருவே!
...மனத்துள் நிறைவைத் தருநிதியே!
புரத்துள் உயிராய் விளங்கிடுவாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

(புரம்=உடல் என்ற பொருளில்.)

பாவாய்ப் பண்ணாய் அடியவரும்
...பணிந்து செய்தத் திருமறையை
நாவால் சொல்ல மனமுருகி
...நலமே அளிக்கும் எனதிறைவா!
காவாய் என்றே இறைஞ்சிடுமுன்
...கருணைக் கடலாய் அருள்தருவாய்!
பூவார் பொழில்சூழ் திருத்தலமாம்
...பூலாவனத்துப் பெருமானே!

மதிசூடி துதிபாடி! - 2

பூலா வனத்துப் பெருமானே!
--------------------------

கல்லார் கற்றார் எவரிடத்தும்
...கருணை பொழியும் அருநிதியே!
இல்லா இடமென் பதுமிலையே
...ஈசா! எங்கும் நிறைந்திருப்பாய்!
சொல்லாய் ஒலியாய்த் திகழுமுனைத்
...துதித்தே கேட்பேன் உனதடிக்கீழ்ப்
புல்லாய்ப் பிறக்கும் வரமருள்வாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

பித்தன் நீயென் றுரைத்தவரைப்
..பேணிக் காத்த திறம்சொலவோ?
சித்தம் நிறைவாய் உனதருளில்
...சித்தித் திருக்க அருளுவையோ?
கத்தும் குயில்கள் இசைபொழியும்
...கமழும் வண்ணப் பொழிலுனக்காய்ப்
புத்தம் புதுப்பூச் சொரிந்திலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

Sunday, January 17, 2010

மதிசூடி துதிபாடி! - 1

பூலா வனத்து பெருமானே!
-------------------------


ஆதி அந்தம் எதுவுமில்லை
...அரனே! அரவ மணிந்தவனே!
சோதி அழலாய் ஒளிர்பவனே!
...தூய அன்புக்(கு) உருகிடுவாய்
ஓதித் துதிக்கும் மறைகளுமே
...உன்னை முழுதாய் அறிந்ததில்லை!
பூதி யடைந்தோர் தனியிறைவா!
...பூலா வனத்துப் பெருமானே!

கண்ணின் மணியாய் ஒளிர்பவனாம்
...கனிவாய் அருளைத் தருபவனாம்
எண்ணித் துதிப்போர்ப் பரவசத்தில்
...இசைந்தே இருக்கும் இறைவனவன்!
மண்ணில் நிகழும் துயரனைத்தும்
...மாற்றி நலமே விளைவிக்கும்
புண்ணி யஞ்சூழ் மலர்க்கழலோன்
...பூலா வனத்துப் பெருமானே!

தெய்வத் தருவின் நிழலினிலே
...சிவனாய்த் தோன்றும் அருளுருவே!
வெய்ய வினையாம் பவமறுக்கும்
...விமலா உனையே தொழுதிடுவேன்!
ஐய! நின் தாள் அடியவரை
...அணைத்துக் காக்கும் அடைக்கலமாம்!
பொய்கை யுடன்பூம் பொழிலிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

அன்னே! அழியா அருளமுதே!
...அன்பே சிவமாய்த் திகழுருவே!
மன்னே! மணியே! மயலழிக்கும்
...மறையே! பொருளே! புகலடைந்தேன்!
என்னே! உன்றன் எழில்நடனம்
...இறைவா! எண்ணிக் களித்திருப்பேன்!
பொன்னே! நிதியே! கவினிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

Tuesday, January 12, 2010

ஏன்?

(நவம்பர்,2007,சந்தவசந்தக் கவியரங்கம்'ஏன்?'என்னும் தலைப்பில்
நான் எழுதியது)

'ஏன்'எனும் சொல்லில்தான் எத்தனை வீச்சுகள்!
தானதில் முன்நின்று தரும்ரசங்கள் எத்தனையோ!

பள்ளிகொண்ட பெருமானைப் பாடலிலே கவிராயர்
துள்ளிவரும் வெள்ளமெனத் தொடுத்தகவி ஏனில்தான்!

சுந்தராம்பாள் தேனிசையில் சுழன்றுவரும் என்ன என்ன?
கந்தனவன் ஆண்டியுரு கண்டுருகும் நிலையிலன்றோ?

ஏனென்ற கேள்விதனை இளமழலை கேட்கையிலே
தேனென்ற சுவை இனிக்கும் செவிநிறைக்கும் பரவசமாய்!

எதிர்பார்க்கும் ஆய்வுகளில் 'ஏன்'களால் வளர்ச்சியுறும்
எதிர்பாரா ஈகையியினில் 'ஏன்'களே உயர்வுபெறும்!

தத்துவ விசாரங்கள் சந்தேகம் எழுகின்ற
வித்துவ மேதமையில் விரிந்துயர்ந்த அறிவியலில்

சத்துவத் தவநெறியில் சழக்கிடும் வாதமதில்
நித்தியக் காட்சியினில் நெகிழ்மன சாட்சியினில்

கோபத்தின் வேகத்தில் குமுறுகின்ற துக்கத்தில்
தாபத்தில் தீர்க்கவொணாச் சதிபுரியும் விதியதனில்

இளமையின் நாதத்தில் எழுகின்ற கீதத்தில்
விளைகின்ற மனலயத்தில் தெறித்துவிழும் 'ஏன்'களே!

விளக்கிடும் இயற்கையில் விரைந்துசுழல் பருவங்களில்
உளத்தினில் எப்போதும் ஊடுருவும் 'ஏன்'தானே?

பயத்தினில் இயற்கையைப் பணிந்தவன் மனத்தில்'ஏன்'
வியந்திடப் புகுந்துடன் மிஞ்சிடவே சாதித்தான்!

இயற்கையின் நியதியில் இறைநீதிப் பேரிடரைச்
செயற்கரிய அறிவியலால் தவிர்க்கமுயல் சாதனங்கள்!

புதுமைக்கு மறுப்பில்லை புகுந்திருக்கும் உலகமயம்
எதுவரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியவில்லை!

நவயுகத்தில் வருகின்ற நாகரிக நடைமுறைகள்
தவபலமாம் பண்பாட்டை தாக்காமல் இருந்திடட்டும்!

Monday, January 11, 2010

செஞ்சடை ஈசா!

செஞ்சடை ஈசா! எந்தாய்!
சஞ்சல மாகிய பவமிகு தளையற உன்றன்
அஞ்சலெ னக்கரு ளென்றே
தஞ்சம தேயளி மலரிணை சாற்றிடு மனமே!

பவம் = பிறப்பு

Wednesday, January 6, 2010

சிவன் பூங்கழல் !


விதிவழி வலியது மருளாய்!
பதிசிவ னதுபூங் கழலடி பரவிடு மனமே!
நதிமதி யணிவார் சடையன்
சதிஉமை யொடுதரு நடமிது சததம் நிறைவே!

('கந்த பத்யம்'எனும் அமைப்பில் இப்பாடல் அமைந்தது. சிவசிவாவுக்கு நன்றி)