Wednesday, March 31, 2010

என்னால் முடியும்!

என்னால் முடியு மென உறுதியுடன் முயன்றிடுவாய்!
...ஏறுமுகம் நிச்சயம்!
சொன்னால் முடிவதில்லை செயலாற்ற முனையவரும்
...சோதனையை வென்றிடு!
முன்னால் பெரியவர்கள் சொல்லிவைத்த அனுபவங்கள்
...முற்றிலும்தான் உண்மையே!
பொன்னாய்ப் புடமிடவே பொற்பாகும் உயர்வினிலே
...போற்றிடவே வாழ்ந்திடு!

(சந்தவசந்தக் குழுமத்தில் சில வருடங்கள்
முன் இட்டது.கொஞ்சம் சரிசெய்து இட்டுள்ளேன்)

Friday, March 26, 2010

இறையே!எழிலே!

கழையும் தருவும் மழையும் கடலும் பொழிலும் இறையுன் எழிலார்க்கும்!
கழலின் கழலும் சுழல முழவ மதிரும் நடனம் விழிஈர்க்கும்!
குழையும் அசையும் தழையும் சடையும் இழைய இலங்கும் அழகோனே
உழையும் துடியும் அழலும் விளங்கு மழுவும் உடைய குழகோனே!

Tuesday, March 23, 2010

மங்கா ஒளியே!

(ஒன்று,மூன்று,ஐந்து, சீரெதுகைகள்.
அடியீற்றில் இயைபு வரத் தொடுத்தல்.)

கங்கா தரனே வெங்கா டுடையாய்!மங்கா ஒளியே!அருவானாய்
துங்கா! உமையாள் பங்கா! பவமே தங்கா தருளும் குருவானாய்!
பொங்கார் கழலின் சங்கார் ஒலியின் சங்கீ தநடம் உனதாகும்!
சங்கா ரசிவா! எங்கோ! உனது சிங்கா சனமென் மனமாகும்!

Sunday, March 21, 2010

கோதிலானைப் பாடுவோம்!

6தேமா+கூவிளம்.

ஆதி யாய நாதி யான
...சோதி யானை நாடுவோம்!
நீதி வாழ பூதி தந்த
...கோதி லானைப் பாடுவோம்!
பாதி யான மாதின் நேயன்
...சோதித் தாளும் மெய்யனாம்!
வாதி டாமல் ஓதி யென்றும்
...போதிப் பாரின் ஐயனாம்!

Thursday, March 18, 2010

வண்ணப் பாடல்!--- 2.

'தந்தனாத் தானத்..தனதான'

பிஞ்சகாத் தேடற்.. கரியோனே!
...பித்தனாய்ப் பாடற்.. கெளியோனே!
நஞ்சமாய்க் காணக் களமானாய்!
...நம்புவார்க் காகத்..துணையாவாய்!
வஞ்சமீக் கூரத்..தருமாயை
...மண்டிவாட் டாதக் கழலோனே!
தஞ்சமாய்த் தாளைப்..பணிவோரின்
...சங்கமாய்ச் சேரற்.. கருளாயே!

Sunday, March 7, 2010

வண்ணப் பாடல்!

'தனதானத்..தனதான'

விடையேறிக்..கனிவோடு
...வினையோடப்..புரிவாயே!
சடையோடுப்..பொலிவாகும்
...தவமோனக்..குருநாதா!
மடைவாளைப்..பயிரோடும்
...வளமானத்..திருவூரா!
கடையேனுக்..கருளாயோ
...கடவூரில்..பெருமானே!