Wednesday, June 22, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

கற்றைசடை நெற்றிவிழி பெற்றதொரு தேவை
பற்றிவிடும் பத்தியினில் இற்றுவிழும் தீமை
குற்றமலி வெற்றுரையைத் துச்சமெனத் தள்ளு
உற்றதுணை யாவர்திரு ஒற்றியுறை கோனே....6

பொத்தியபைங் கூம்பவிழும் பூமலர்கள் தூவி
நித்தியம்செய் பூசனையில் நிர்மலனாய் நிற்பான்
சத்தமிடு செஞ்சதங்கை தந்த இசைக்(கு) ஆடும்
உத்தமநி ருத்தனவன் ஒற்றியுறை கோனே....7

துப்புமவன் உய்ப்பதற்கு வைப்புமவன் என்றே
செப்பரிய முக்கணனை சொற்பதிக மேத்தும்
முப்புரமும் வெப்பெரிசெய் அப்பனவன் ஏதும்
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே....8

வெப்பு=வெப்பம்.

கண்ணுதிரம் பொங்கவவன் கண்ணினையே அப்பி
எண்ணரிய மேன்மைகொளும் திண்ணனவன் தெய்வம்
விண்ணவரின் நற்றுணைவன் வேதனவன் நஞ்சை
உண்டருளும் அண்டனவன் ஒற்றியுறை கோனே....9

கல்லைமலர் ஆகவணி கண்ணுதலை வேண்டி
'எல்லையென ஏதுமிலா இன்னருளே!காவாய்!
தொல்லைவினை தீர்த்திடுக!'என்றவனைக் கெஞ்ச
ஒல்லைவினை தீர்த்தருளும் ஒற்றியுறை கோனே....10.

Sunday, June 19, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

தானதன தானதன தானதன தானா" என்ற சந்தத்தில்


கண்டமணி நஞ்சுதிகழ் கண்ணுதலை வேண்டி
செண்டுமலர் சூட்டியவன் சேவடியைப் போற்றும்
தொண்டருளளக் கோவிலுறை தூயஒளி யானான்
ஒண்டமிழ்கள் கொண்டுதொழும் ஒற்றிநகர் ஆமே...1

வேதமென தீம்பதிகம் மெய்யடியர் ஓத
நாதமொடு பூங்கழல்கள் நர்த்தனங்கள் ஆட
கோதறுவெண் கூன்பிறையில் கோலமுறு சீலன்
ஓதமலி கின்றதிரு ஒற்றியுறை கோனே...2

தாழியுள என்பினையும் தந்தருளும் பெண்ணாய்
காழியுறை ஆளுடயார் கண்டுகொண்ட தெய்வம்
சூழிடரும் அகலவருள் தோன்றவரும் ஐயன்
ஊழிமுதல் ஆடுமிறை ஒற்றியுறை கோனே....3

முன்னவனும் பின்னவனும் மூலமுதல வன் தான்
இன்னமுத மென்னநஞ்சை ஏந்தியுண்ட வள்ளல்
என்னதுயர் நொந்துறினும் இன்னருளில் உய்ப்பான்
உன்னுமடி யார்க்கருளும் ஒற்றியுறை கோனே....4

சூதுறையும் தீமையழி தூயமலர்த் தாளை
யாதுமவன் என்றடையின் அன்பருளம் ஆள்வான்
போதுமலர் பைம்பொழிலில் பூமதுவை நாடி
ஊதுகிற வண்டுமிகும் ஒற்றியுறை கோனே....5

Thursday, June 16, 2011

கழுமலம் அடைநெஞ்சே (சீர்காழி)

தினமரன் புகழ்பாடி திருவருள் தனைநாடி
மனமொழி செயல்மேவி வழிபட அடைநெஞ்சே
சினமுறு நகையாலே திரிபுரம் எரிசெய்தான்
கனவிடை உடையானூர் கழுமல நகர்தானே....6

எனதென உளவென்றும் இறையவன் அருளொன்றே
தினமொரு முறையாகில் சிவனைஎண் வினைதீரும்
மனதவன் வசமாகும் வழிபெற அடைநெஞ்சே
கனலுமிழ் விழியானூர் கழுமல நகர்தானே....7

புதிர்தனில் விடைதேடும் புரிதலில் புவிவாழ்வில்
எதிர்வரு வினைசெய்யும் இடர்கெட அடைநெஞ்சே
சதிர்தனில் உலகுய்யத் தனிநடம் புரிகின்ற
கதிர்மதி அணிவானூர் கழுமல நகர்தானே...8

தொலைதரு வினைமாய்ந்துத் துகளென அருள்வானின்
சொலமிக சுவைநாமம் துணையென அடைநெஞ்சே
பலவகை மலர்சூடும் பணியினை இடைமீதில்
கலைதரி பெருமானூர் கழுமல நர்தானே....9

தொல்லை=தொலை இடைக்குறை.

இணர்மலர் மதிசூடும் எழில்சுடர் சடையோனை
தணலுறு எரிகானில் தனிநடம் புரிவானை
துணையென இமையோரின் துயர்கெட மதில்மூன்றை
கணைகொடு சுடுவானூர் கழுமல நகர்தானே....10