Monday, October 31, 2011

தாயுமானவனே !--1

(அறுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)


முந்து வெவ்வினை இடரை மோதியே பொடிபடச் செய்வான்
சிந்தை இன்புற அடியர் செந்தமிழ்ப் பாடலை விழையும்
அந்தி வண்ணனின் அன்பன் ஆளுடை யார்க்குசெம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே...1

* திருவாவடுதுறையில் தந்தையாரின் வேள்விக்கெனச் சம்பந்தர் வேண்டி 'இடரினும்
தளரினும்' என்ற பதிகம் பாடி ஆயிரம்பொன் பெற்றதைச் சுட்டியது.

தேசன் வெவ்வினைத் துயரும் தீர்ந்திட மெய்யருள் புரிவான்
ஓசை தந்தநா யகியாள் உமையவள் பங்குடை யானின்
நேசர் தம்பசி தீர நிதம்படி பிள்ளையா ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா .னவனே....2


பஞ்சம் ஏற்பட்டபோது திருவீழிமிழலையில் அடியவர்கள் பசிதீர்க்கவேண்டி
அப்பருக்கும் சம்பந்தருக்கும் சிவன் படிக்காசு அளித்ததைச் சுட்டியது.

பிள்ளையார்= ஆளுடை பிள்ளையார்,சம்பந்தர்.

Thursday, October 27, 2011

திருமழபாடி

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"
-----------------------------------------------

வலைமீ தினிலே.. படுமீனாய்
...வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...1

துளிவான் நிலவோ..டலையாறும்
...சுருளார் சடைமேல்.. அணியாகி
வெளியே சிவனா.. டிடுமேடை
...விரையார் கழலோன்..நடமாகும்
தளியே அடியார்.. மனமாகும்
...தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன்
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....2

Wednesday, October 26, 2011

மனம் போன போக்கில்!--5

புகலற் கேலா வினைசெய் துன்பப் புயலுழல் வாய்மனமே
சகலத் திற்கும் காரண .னானத் தற்பரன் அருள்தருவான்
நகசத் தோலை உடையாய் அணிவான் நறுமலர் மாலைகள்சேர்
அகலத் தையன் அகலா திருப்பான் அகன்றிடும் ஆரிருளே...9

நகசம்=யானை.
அகலம்=மார்பு.

உருளும் சகட வாழ்வில் நிலைக்கும் உத்தி அறிமனமே
மருளில் ஆழ்த்தும் பொருளி லாத மலக்கினை நீக்குபவன்
சுருளும் சடையில் பிறையும் நதியும் சூடித் திகழ்பவனாம்
ஒருவன் அன்பின் உருவன் நாமம் ஓதில் அறுவினையே...10

Sunday, October 23, 2011

மனம் போன போக்கில்!--4

இருள ளித்து மருளில் சேர்க்கும் இழிவினை நீக்கியென்றும்
அருள ளிக்கும் பார்வை தன்னில் அபயம் தருமிறைவன்
பொருள ளிக்கும் வாழ்க்கை என்றால் பூரணன் போற்றியவன்
இரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே...7

கனைத்த ழைக்கும் கன்றைப் பரிவாய்க் காத்திடும் தாய்ப்பசுபோல்
நினைத்த ழைக்கும் அன்பர் தமக்கு நிமலன் அருளிருக்கும்
வனத்தில் அன்று பார்த்தன் தனக்கு வரமெனப் பாசுபதம்
தனைக்கொ டுத்த ஈச .னாரைச் சார வருசுகமே...8

Sunday, October 16, 2011

மனம் போன போக்கில் --3

எருதின் மீத மர்ந்தே ஈசன் எழிலாய் வலம்வருவான்
அருவ மாக இருவர் தேட அழலாய் அருள்பவனாம்
உருவ னாக அன்பர் உளத்தில் உறையும் பரசிவனாம்
பொருது வினையைப் போக்கும் அரனைப் போற்றி மகிழ்மனமே....5

இகழும் நிலையில் வைக்கும் வினைசெய் இடரது தீர்ந்திடவே
முகிழும் அன்பில் பத்தி மலர மூலனை எண் மனமே
நிகழும் யாவும் நலமே யாக நின்மலன் தாளிணையைத்
தகழி ஏற்றி மலர்கள் தூவிச் சாற்ற வரும்திருவே....6

Thursday, October 13, 2011

மனம் போன போக்கில்...2

நஞ்சை உண்ட நீல கண்டன் நம்பன் கழலிணையை
விஞ்சும் அன்பில் தஞ்சம் என்றே வேண்டின் உதவிடுவான்
கொஞ்சு செஞ்ச தங்கை பாதம் கொண்டோன் தண்ணருளால்
எஞ்சல் இன்றி வினைகள் ஓடி இன்பம் நிலைத்திடுமே....3

உலைசெய் துன்பம் கொள்ளாய் நெஞ்சே உய்வை வேண்டுதியேல்
சிலைஎய் வேளை கோபம் தோன்ற சிரித்து விழித்தவனாம்
மலையன், கானில் ஆடும் கூத்தன் மழுவாட் படையுடையான்
கலையொன் றேந்தி கழலி ணையைக் கருது தினந்தொறுமே....4

உலை=சஞ்சலம்,சிலை=வில்.

Tuesday, October 11, 2011

'மனம் போன போக்கில்'--1

(அறுசீர் விருத்தம்-4 மா +'மா-கருவிளங்காய்/விளம்-கூவிளங்காய்'-வாய்பாடு.
-------------------------------------------------------------------------
சுடரும் முக்கண் தெய்வ மான சுந்தரன் தம்மடியார்
படரும் அன்பில் பண்ணார் பாடல் பைந்தமிழ் ஆரமிட்டார்
இடையில் கச்சாய் பாம்பும் வெம்மா ஈருரி மேனிதனில்
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யலுண்டே....1

பெய்யும் மாரி யாக வந்தே பேரருள் செய்திடுவான்
தையல் பங்கன் தஞ்சம் வேண்டின் தன்னையே தந்திடுவான்
மெய்யி தென்றே மாய மலக்கில் வீழ்ந்திடு மாந்தரைப்போல்
தொய்ய வேண்டா முக்கட் செல்வன் துணையடி போற்றுநெஞ்சே....2

Sunday, October 9, 2011

என்பணிஅரன்துதி!-- 5

கொழுந்து வெற்றிலைக் கூட்டுடன் விருந்துணக் கோருவை என்னாவே
விழுந்து போம்படி வினையற அறிகிலை விளம்புநான் என்னாவேன்
விழுங்கு நஞ்சதும் விண்ணமு தாயயன் விட்டுணு தாம்தேட
எழுந்த சோதிஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....9

வெற்றிலைக்கூட்டு=சுண்ணாம்பு,பாக்கு,இத்யாதி.
விளம்பு=சொல்லு.

கூழை என்னவே குறைமலி மொழியினைக் கூறிடும் என்னாவே
பாழை யாய்மயல் படரற உரைத்திலை பகர்திநான் என்னாவேன்
மாழைப் பொன்னவன் மாசிலா மணியவன் மறையவன் என்றென்றும்
ஏழை பங்கினன் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....10

படர்=துன்பம்.,கூழை=புத்திக்குறைவு,
பாழை=மாயை,மயல்=மயக்கம்.

Saturday, October 8, 2011

என்பணி அரன்துதி!--4

பறப்பில் தேடுவை பணந்தனை பரிவினை பகர்கிலை என்னாவே
திறப்பி தென்னவே சிவனடி நினைந்திலை செப்புநான் என்னாவேன்
பிறப்பில் லாதவன் பிணிபவந் தொலைப்பவன் பெண்ணுமை பங்கேற்றான்
இறப்பில் லாதவெம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....7

பறப்பு=துரிதம்.
திறப்பு=திறவுகோல்.

வசையும் திட்டுமாய் வார்த்தையில் சுடுமொழி வழங்குவை என்னாவே
பசையென் றூழ்வினை பற்றறும் வழியிலை பகர்வைநான் என்னாவேன்
தசமென் றேசிரம் தாங்குமி லங்கைகோன் அழுதுமே கானம்செய்
இசையைக் கேட்டஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....8

Wednesday, October 5, 2011

என்பணிஅரன்துதி!--3

பண்ணி யச்சுவை பலவகை உண்டெனப் பகர்ந்திடும் என்னாவே
எண்ணி டாவினை இடரற அறிகிலை இசைத்திடு என்னாவேன்
வெண்ணி லாத்துளி மின்னொளிர் செஞ்சடை விமலனை அன்போடே
எண்ணில் நாமமும் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....5

பண்ணியம்=பலகாரம்,
இசை=உரை.

ஒன்று நன்றையும் ஓர்கிலை உய்வழி உரைத்திலை என்னாவே
தொன்று செய்வினை தொடரற மொழிகிலை சொல்லுநான் என்னாவேன்
அன்று தில்லையில் ஆடிய பாதமே அடியரின் பற்றாகும்
என்றும் உள்ளமெய் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....6

Monday, October 3, 2011

என்பணி அரன்துதி!--2

அடமும், பேதுடை அறிவிலாப் புன்மொழி அறைகுவை என்னாவே
தொடரும் வல்வினை தொலைவழி அறிகிலை சொல்லுநான் என்னாவேன்
விடமும் உண்ணுவான் விண்ணவர் துணையவன் வெண்ணிறப் போரேறாம்
இடபம் ஏறிறை ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....3


அடம்=பிடிவாதம்
பேது=துன்பம்.

கடுக டுப்பொடு கருணையில் லாவசை கழறிடும் என்னாவே
கொடுவி னைத்துயர் குறையவொன் றுரைத்திலை கூறுநான் என்னாவேன்
சுடுமி ருட்கடம் சூழெரி நடசிவன் தொடர்முடைக் கையேந்தி
இடுப லிக்கலை இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....4

கடம்=காடு.