Thursday, April 8, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே!--- 6,7,8.

தும்பிக்கை யானின் தம்பி
...சூர்வென்றான் குருவாய்க் கொண்டாய்!
நம்பிக்கை ஒளியாய்க் காப்பாய்!
...நஞ்சுண்டா! பணிந்தேன் உன்னை!
வம்பிற்கும் வீணே நாளும்
...வாதிற்கும் கழிந்த தந்தோ!
கும்பிட்டு வாழ்வேன் ஐயா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

சுற்றிவரும் வினையில் சிக்கி
...சோர்வெனுமோர் பிணியில் நொந்து
உற்றதுயர் மிகவும் வாட்ட
...உன்னடியின் அருமை கண்டேன்!
நற்றவசேக் கிழாரும் அன்பால்
...நம்பனுனக்(கு) எடுத்த கோவில்
கொற்றமிக விளங்கத் தோன்றும்
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

நீறாலே பொலியும் ஈசா!
...நெஞ்சார நினைந்துப் பாடி
மாறாத பக்தி யோடு
...வாழ்நாளும் செல்ல வேண்டும்!
பேறாகப் பெறுப வற்றுள்
...பேறாமுன் அருளே!உன்பேர்
கூறாஅந் நேரம் காப்பாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

No comments: