Saturday, May 30, 2009

முருகனைப் பாடுவோம்!

மலைதொறும் உறைபவன் மறைதொழும் கடம்பனை
...மாலின் செல்வ மருகோனைப் பாடுவோம்!
கலைமதிச் சடையனின் கதிர்நுதல் விழியருள்
...கந்தன் செவ்வேள் முருகோனைப் பாடுவோம்!
தொலைதரு வினைகளின் தொடரினைக் களைந்திடச்
...சுற்றும் வெல்வேல் கரத்தானைப் பாடுவோம்!
நிலைபெறும் அருளினில் நிறைவினைத் தருகென
...நெஞ்சில் நிற்கும் பெருமாளைப் பாடுவோம்!

Wednesday, May 27, 2009

பெம்மானே!அருள்வாய்!

ஆட்டிவைக்கும் ஆடவல்லோய்!ஆடுகின்றாய்!உன்னருளில்
கூட்டுவித்தத் தொண்டருள்ளம் கொண்டாடப்--பாட்டுவித்துக்
கேட்டுவக்கும் பெம்மானே! கேடனைத்தும் நீங்கநலம்
காட்டுவித்தால் பாருய்யும் காண்.

Wednesday, May 13, 2009

தாயன்பு!

துறவிகளும் அன்பாய்த் தொழுதிடுவர் தாயை;
கறவையினம் காத்தவனைக் கட்டும்-- திறமுடையத்
தாயன்பிற்(கு) கெல்லையுண்டோ? சக்தியுரு வாகிடுவாள்
கோயிலுறைத் தெய்வமெனக் கூறு.

கறவையினம் காத்தவன்=கோபாலன்
கட்டும் தாயன்பு=யசோதையின் அன்புக் கட்டுக்கு