Sunday, January 17, 2010

மதிசூடி துதிபாடி! - 1

பூலா வனத்து பெருமானே!
-------------------------


ஆதி அந்தம் எதுவுமில்லை
...அரனே! அரவ மணிந்தவனே!
சோதி அழலாய் ஒளிர்பவனே!
...தூய அன்புக்(கு) உருகிடுவாய்
ஓதித் துதிக்கும் மறைகளுமே
...உன்னை முழுதாய் அறிந்ததில்லை!
பூதி யடைந்தோர் தனியிறைவா!
...பூலா வனத்துப் பெருமானே!

கண்ணின் மணியாய் ஒளிர்பவனாம்
...கனிவாய் அருளைத் தருபவனாம்
எண்ணித் துதிப்போர்ப் பரவசத்தில்
...இசைந்தே இருக்கும் இறைவனவன்!
மண்ணில் நிகழும் துயரனைத்தும்
...மாற்றி நலமே விளைவிக்கும்
புண்ணி யஞ்சூழ் மலர்க்கழலோன்
...பூலா வனத்துப் பெருமானே!

தெய்வத் தருவின் நிழலினிலே
...சிவனாய்த் தோன்றும் அருளுருவே!
வெய்ய வினையாம் பவமறுக்கும்
...விமலா உனையே தொழுதிடுவேன்!
ஐய! நின் தாள் அடியவரை
...அணைத்துக் காக்கும் அடைக்கலமாம்!
பொய்கை யுடன்பூம் பொழிலிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

அன்னே! அழியா அருளமுதே!
...அன்பே சிவமாய்த் திகழுருவே!
மன்னே! மணியே! மயலழிக்கும்
...மறையே! பொருளே! புகலடைந்தேன்!
என்னே! உன்றன் எழில்நடனம்
...இறைவா! எண்ணிக் களித்திருப்பேன்!
பொன்னே! நிதியே! கவினிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

No comments: