Wednesday, September 23, 2009

ஈசன் அருள்!

பனிக்கின்ற கண்ணாய் படர்கின்ற நீராய்
இனிக்கின்ற தேனாய் இசைக்கின்ற பாவாய்
நினைக்கின்ற வானாய் நிறைந்துள்ள ஈசன்
தனக்கன்பு செய்தால் தயங்காத ருள்வான்

Monday, September 14, 2009

நீலகண்டனை ஏத்து மனமே



நல்லிசை பாடல் நாளும் சிவநாமம் சொல்லும்
...நமவாதை யாவு மழியும்
தொல்வினை யாலே தோன்றும் துயரான தென்றும்
...தொலைந்தோடும் ஈச நருளால்
கல்லெனும் போதும் பூவாய் அணிந்தாளும் நம்பன்
...கதியாகி அன்பில் அணைவான்
வல்லியை வாமம் கொண்ட மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!



மடலவிழ் பூவில் கோத்த அழகான மாலை
...மணமோடு தோளில் அசைய,
சுடலையின் நீறு பூசி நமையாளும் ஐயன்
...துணயாகி நாளும் அருள்வான்!
நடமிடு கோலம் காணும் அடியாரின் அன்பன்
...நலமாகும் வாழ்வு தருவான்!
மடமயி லாளின் பங்கன் மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!

Wednesday, September 2, 2009

காலை நேரக் கவிதை!

காலை நேரக் கவிதையினைக்
...காகம் தினமும் படிக்கிறது!
சோலை மணக்கும் புதுமலரால்!
...தோன்றும் விடியல் கதிரொளியால்!
பாலைப் பொழியும் பசுவினம்தான்!
...பரிவாய் அருளும் இயற்கையைப்பார்!
வேலைத் துவங்க எழுந்திடுவாய்!
...வீடும் நாடும் நலமாகும்!

'தய்ய தானன.. தனதான'

வைய வாழ்வினை.. மிகநாடி
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்வ தேஉன.. தருளாகும்!
தைய லாளுமை.. இடமாகி
...சைவ மாதிரு.. மறையோதும்
துய்ய நேசிவ.. பரமேச!
...சொல்லு வேனுன.. தெழிலாடல்!