Wednesday, September 4, 2013

திருக்கருகாவூர் - 1(2)

பிட்டு விற்கும் பெரியள் துணையானான்
சுட்ட நீற்றில் துலங்க அருள்செய்வான்
மொட்ட விழ்பூம் பொழில்சூழ் கருகாவூர்
சிட்டன் தாள்சேர் மனமே திருவாமே....6

பெரியள்=வயதில் பெரியவள்(வந்தி)

காட்டில் தீயில் கதித்தே நடம்செய்வான்
வாட்டும் துன்பில் வருவான் துணையாக
மாட்டின் மீதூர் மலையன் கருகாவூர்
நாட்ட மாகித் தொழுதால் நலமாமே....7

கோல கங்கை குளிர்வெண் மதிசூடி
பாலன் கொண்ட பசிக்காய் அமுதீந்த
நீல கண்டன் நிதியார் கருகாவூர்
சூலன் பாதம் தொழுவார் துயர்போமே....8

மானேய் கண்ணி மடவாள் உமைகேள்வன்
ஊனார் ஓடோ(டு) உணவுக் கலைவானின்
தேனார் பூங்கா திகழும் கருகாவூர்
போனாற் பொல்லா வினைகள் பொடியாமே....9

 பாய்தண் கங்கை படர்செஞ் சடையேற்றான்
தூய்நற் றாளைத் தொழுவார்க் கருள்செய்வான்
காய்நெல் காணும் வயல்சூழ் கருகாவூர்
போய்முன் வீழிற் பொல்லா வினைபோமே....10
தூய்=தூய.