Sunday, April 20, 2014

என் பணி அரன் துதி!

 
என்றென்றும் அரன் பணியில் !



 

திருமதி  T.V.தங்கமணி 

 

தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014



------------------------------------------------------------------------------------------------------
காரைக்கா லம்மையெனக் கனிந்தபக்தை  இவர்போல
யாரைக்காண் போம்இனிநாம்? அனுதினமும் கண்ணுதலான்
சீரைத்தம் செய்யுள்வழி செப்பியவந்த அன்னையைத்தன்
ஊரைத்தான் காண்பிக்க உளம்கொண்டான் ஐயனுமே.

.. அனந்த் -   28-3-2014

------------------------------------------------------------------------------------------------------

எங்குமணி யாகவரா ஏறுமரன் கடல்நஞ்சம்
தங்குமணி கண்டத்தன் தண்மதியைத் தலைவைத்தான்
தங்கமணி என்றுசொல்லத் தக்கவர்செந் தமிழ்பாடு
தங்கமணி மாமியைத்தன் தாள்நிழலில் வைத்தானே.

... வி. சுப்பிரமணியன்  28-3-2014

--------------------------------------------------------------------------------------------------------
வயதினைக் கருதிடாமல்
வாலிபப் பருவத்தார்போல்
முயற்சியைப் பெற்றிருந்தார்
முனைப்புடன் யாப்பைக் கற்றே
அயர்ச்சியே இன்றி இங்கே
யாத்தனர் கவிதை, அன்னார்
இயக்கமோர் எடுத்துக் காட்டாய்
இளைஞர்கட்  கிருந்த துண்மை!

இலக்கி யத்தில் ஊறியதால்
இளமை பெற்ற தங்கமணி
கலங்க டிக்கும் நோய்களையும்
கலங்க டித்த பேராளார்
நிலைத்த  புகழைப் பெற்றுள்ளார்
நெஞ்சில் என்றும் பாசத்தை
இலக்காய்க் கொண்ட கவிஞருக்கு
எங்கள் இதய அஞ்சலிகள்.

... இலந்தை
--------------------------------------------------------------------------------------------------------


அம்மையார்  தங்கமணி  ஆண்டவன்  அருளால் அன்னான்
செம்மைசேர்  நாமம்பாடித்   திருவடி யடைந்தசேதி
எம்மையும்  அதிரச்செய்தே  ஏக்கத்தை  உருவாக்கிற்றே
இம்மையில்  தவத்தைச் செய்த  இனியநம் அம்மைக்கிங்கே ,
தம்மைநே ரில்லா அந்தத்  தலைவன்தண் னருளைப் பெய்தே
அம்மையில் அம்மைபாட அருகமர்ந்  திணித்து கேட்டே 
மும்மையும்  புகழில் ஏற்றி   முறையருள்  புரிக இன்றே!
நம்மைநாம் தேற்றிக் கொள்ளும் நன்மனம்  நல்கிநிற்க!
 
... புலவர் இராமமூர்த்தி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவ நினைவுடனேயே இருந்தவர்.

பிரதோஷ கால நேரத்திலேயே அவரைச் சிவன் தன்னடிக்கீழ் அமர்த்தியமையை என்னென்று சொல்லுவது! அவர் பக்தியை எப்படி மெச்சுவது?

அவருடைய உறுதியில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் நமக்கு அருளும் படி அவரை வேண்டுகிறேன்.

என்றும் எமதுள்ளத்தில் இருந்து எம்மை வழி நடத்த வேண்டுகிறேன்.

 - sankara dass
--------------------------------------------------------------------------------------------------------------

blog related contact email id: akilacsr2715@gmail.com / ramasamis@yahoo.co.in

Wednesday, November 27, 2013

தேன்மலர் மாலைகள் தோளினில் சூடித் --திகழ்ந்திடும் அம்பல வாணன் பங்கில்
கூன்பிறை நெற்றியள் கொண்டான் --கும்பிடு வாருளம் நிற்பான்
தான் தனி யாய்சுடு கான் தனில் ஆடும்-- தாண்டவன் விண்ணதித் துங்க கங்கை
பான்மதி ஆர்சடை மீது -- பாம்பணி எம்பெரு மானே....7

ஆடி மகிழ்ந்திடும் தில்லையின் கோனை -- அண்டிய பேர்க்கிலை துன்பம் வாழ்வில்
நாடி நல்லருள் செய்வான் -- நம்பிடும் அன்பரின் நேயன்
சூடி டும்பிறை மிளிர்சடை கொண்ட -- துய்யபொற் பாதனின் ஊராம் வண்டு
பாடி  சோலை சூழும் -- பாம்பணி நன்னகர் தானே. ..8


அங்கையில் ஊனார் தலைக்கலன்  ஆக -- ஐயம் ஏற்றிடச் சென்று தேர்வான்
செங்கனல்  கானினில் ஆடும் -- சேவடிப் போற்றுவார்க் கன்பன்
அங்கணன் தாள்முடிக் கண்டிட ஒண்ணா(து) -- அன்றயன் மால்முனர் தீயாய் நின்றான்
பங்கொரு மாதமர் கின்ற -- பாம்பணி எம்பெரு மானே....9

காய்சின வேங்கையின் ஈருரி கொண்ட -- கண்ணுதல் வேளெரி செய்த ழித்தான்
தூய்மதி சூடிய தேசன் -- தொண்டர் மனத்துள் நிற்பான்
வாய்மொழி நான்மறை ஓதிடும் எம்மான் -- வார்சடை யான்பதி சேல் துள்ளிப்
பாய்புனல் சேர்வயல் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....10
 

Saturday, October 26, 2013

பாம்பணி--திருப்பாதாளீச்சரம் ---பாமணி --3

அம்பல மாடும் குரைகழல் பாதன் -- அன்பரை ஆட்கொளும் மெய்யன் ஐயன்
வெம்புலி தோலுடை யாக-- விண்ணதி கொன்றையை சூடும்
சம்புவி .னஞ்சக் கரமுரைப் பாரைத்-- தாங்கிடு வான்பதி வண்டு மொய்க்கும்
பைம்பொழில் சூழ்ந்தழ காரும் .. பாம்பணி நன்னகர் தானே....4

உச்சியில் வெண்மதிக் கண்ணியைச் சூடும்-- ஒப்பிலி யானவன் செய்யன் ஐயன்
நச்சை அமுதாய் உண்ட-- நம்பன் அடியவர் அன்பன்
பச்சை நிறத்துமை யாளவள் காந்தன் --பற்றிடு வார்க்குறு தாள ளிக்கும்
பச்ச முடைப்பரன் எந்தை  -- பாம்பணி எம்பெரு மானே....5

வெயிலினில் வீசுமென் மாருதம் போல -- வெவ்வினைத் துன்பதை தீர்க்கும் அன்பில்
அயிலுடை சூலம் ஏந்தி--அன்பர்க் கருள்செயும் வள்ளல்
மயிலன சாயல் எழிலுமை பங்கன் -- மானுடை கையன் ஊர தென்பார்
பயிர்வளர் செய்புடை சூழும் -- பாம்பணி எம்பெரு மானே....6


Saturday, October 19, 2013

பாம்பணி - திருப்பாதாளீச்சரம்--பாமணி(இக்கால வழக்கில் )

தண்ணிறை வெண்பனி சூழ்மலை மன்னன் -- சஞ்சலம் தந்திடும் துன்ப றுக்கும்
பெண்ணுமை பங்கினன் வேளை-- தீயெரி யாகிடச் செற்றான்
பண்ணிய மோடிசை வாய்நடம் செய்யும்--பார்வதி நாயகன் தன்னூர் வண்டு
பண்ணிசை ஆர்பொழில் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....2

ஆலமர் செல்வனை 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும் ஆட லன்றோ
ஆல மருந்திவிண் ணோரைக்  --காத்த கறைநிறை கண்டன்
கோல நிலவுடன் பாயலை கங்கை--கொன்றையும் பாங்குடன் உச்சி  சூடி
பாலன நீறுமெய் பூசும்-- பாம்பணி எம்பெரு மானே....3

 அடி 1-இல் - " 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும்..... "

( சுகலமுனிவர் வளர்த்த (காமதேனு) பசுவானது சிவலிங்கத்தின்மீது
அபிடேகமாகப்பாலைப்பொழிந்தது. முனிவர் தனக்குப் பால் குறைந்து விடுமே என்று
 பசுவைக் கோபித்து அடித்தார்.அந்தப் பசு வருந்தி,வழிபட்டதால்
 தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போல சிவலிங்கத்தை முட்டி ஓடி
 பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது.இறைவன் காட்சிதந்து பசுவை உயிர்ப்பித்தார்.
பசு முட்டியதால் மூலத்திருமேனியில் மூன்று வடுக்களோடு காட்சிதருகிறார்.0

Thursday, October 17, 2013

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)
=================================================
  (சம்பந்தர் தேவாரம் - 1.39.1 – திருவேட்களம்.
'அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க'

குறிப்பு: பாம்பணி - பாம்பணி என்ற ஊர். (அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருப்பாதாளீச்சரம்). 'பாம்பை அணியும்' என்றும் பொருள்கொள்ளலாம்.




தானன  தானன தானன  தான ... தானன  தானன  தான தான (1&3)

தானன தானன தான ... தானன தானன தான  (2&4)
அடி (1&3)--விளம் கூவிளம் கூவிளம் தேமா/ கூவிளம் கூவிளம் தேமா தேமா /

அரையடி -1எ /3எ :4சீர்கள்.---வெண்டளை விரவிவரும்.
அரையடி 1பி /3பி :4சீர்கள்.--அவற்றுள் முதல்மூன்று சீர்களிடை வெண்டளை விரவும்.
இவ்வரையடியில் 1பி &3பி யில் 3ஆம் சீர் குறிலில் முடியும்.
4ஆம் சீர் குறிலில் தொடங்கும்,3+4 சீர்கள் =  கூவிளங்காய் ஆகும்.
அடி 2&4 -- விளம் கூவிளம் தேமா/ விளம் கூவிளம் தேமா.
                    அரையடி 2எ/4எ :3சீர்கள் - வெண்டளை விரவும் 
                     அரையடி 2பி /4பி : 3சீர்கள் -- வெண்டளை விரவும்.
(அரையடிக்குள்  விளம் வரும் இடத்தில்  தேமா,புளிமா, கருவிளம் 
இவற்றுள் ஒன்றும் வரலாம். அப்படி வரின்  மற்ற சீர்களும் மாறி வெண்டளை பயிலும்.

 கோரிடு மன்பரின் துன்புகள் தீர்க்கும்-- குஞ்சர ஈருரி ஏற்ற மைந்தன்
காரொடு நேர்கறை கண்டன் -- கங்கையை சூடிய செம்மல்
சீரொடு நன்றையும் செய்திடும் சீலன் -- செங்கழ லானருள் தன்னை நண்ணி
பாரொடு  விண்பணிந் தேத்தும் --பாம்பணி எம்பெரு மாளே....1
 

Wednesday, September 4, 2013

திருக்கருகாவூர் - 1(2)

பிட்டு விற்கும் பெரியள் துணையானான்
சுட்ட நீற்றில் துலங்க அருள்செய்வான்
மொட்ட விழ்பூம் பொழில்சூழ் கருகாவூர்
சிட்டன் தாள்சேர் மனமே திருவாமே....6

பெரியள்=வயதில் பெரியவள்(வந்தி)

காட்டில் தீயில் கதித்தே நடம்செய்வான்
வாட்டும் துன்பில் வருவான் துணையாக
மாட்டின் மீதூர் மலையன் கருகாவூர்
நாட்ட மாகித் தொழுதால் நலமாமே....7

கோல கங்கை குளிர்வெண் மதிசூடி
பாலன் கொண்ட பசிக்காய் அமுதீந்த
நீல கண்டன் நிதியார் கருகாவூர்
சூலன் பாதம் தொழுவார் துயர்போமே....8

மானேய் கண்ணி மடவாள் உமைகேள்வன்
ஊனார் ஓடோ(டு) உணவுக் கலைவானின்
தேனார் பூங்கா திகழும் கருகாவூர்
போனாற் பொல்லா வினைகள் பொடியாமே....9

 பாய்தண் கங்கை படர்செஞ் சடையேற்றான்
தூய்நற் றாளைத் தொழுவார்க் கருள்செய்வான்
காய்நெல் காணும் வயல்சூழ் கருகாவூர்
போய்முன் வீழிற் பொல்லா வினைபோமே....10
தூய்=தூய.


 

Thursday, August 29, 2013

திருக்கருகாவூர் - 1

(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு)(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")

மண்ணாய் விண்ணீர் வளிதீ எனவானான்
கண்ணால் அன்பைக் கனிவாய் அருளீசன்
தண்ணார் கங்கை சடையன் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே....1

தார்கொள் தோளில் தவழும் அரவேற்பான்
பேர்சொல் பத்தர் பிணிசெய் துயரோட்டும்
சீர்கொள் தாளன் திகழும் கருகாவூர்
சேர்க நெஞ்சமே சிதையும் வினைதானே....2

கோதே விஞ்சும் குணங்கொள் அடியேனுக்(கு)
ஆதா ரம்பூங் கழலே எனவேண்டி
மாதோர் பங்கன் வதியும் கருகாவூர்
நீ தீ தோட நினையாய் மடநெஞ்சே....3
கோது=குற்றம்.

நித்தன் ஆலின் நிழலில் அமர்போதன்
பத்தர் தம்மின் பரமன் கருகாவூர்
முத்தன் பூந்தாள் முடியில் தரிப்பார்க்கே
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே....4

அங்கம் நீற்றில் அழகாய்த் துதைந்தானின்
துங்க செந்தாள் தொழுவார்க் கருளீசன்
திங்கள்  சூடித் திகழும் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே....5


Sunday, August 18, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--5

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு
பொடியார் மேனி புளகிக்க
...புடைசூழ் அடியார்க் கருளீசன்
கடிமா மதில்மூன் றெரிசெய்த
...கழலன் மேவி உறைகோவில்
அடியார் பலரும் வந்தேத்தும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....9

பிணியாய் வினைசெய் இடர்தீர்க்கும்
...பெம்மான் நின்ற ஊரர்தான்
பணிவாய் மனத்துள் அமைத்ததளி
...பரிவாய் அமர்ந்தே அருளியவன்
துணியாய்ப் பிறையை முடிகொண்டான்
...தொண்டர் துணைவன் உறைகோவில்
அணியார் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....10

Thursday, August 15, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--4

எந்த துன்பம் வந்திடினும்
...எந்தை நாமம் சிந்திப்பார்
முந்து வினையும் நீங்கிடவே
...மூழ்கு சுழலாம் பவம்விடுப்பான்
சந்த இசைப்பாத் தமிழ்மாந்தும்
...தழலன் மேவி உறைகோவில்
அந்தண் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....7

படையும்  அழலும் கரம்கொண்டான்
...பதமாய் ஆடல் புரிந்திடுவான்
விடையில் ஊர்ந்தே வந்திடுவான்
...விரும்பும் அடியார் துயர்தீர்ப்பான்
சடையன் மேவி அமர்கோவில்
...தவழும் காரார் மேகமெலாம்
அடையும் சோலை நிறைந்திருக்கும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....8

Monday, August 12, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--3

காடும் மலையும் வான்வெளியும்
...கழலன் ஆடும் களமாகும்
ஈடு வேறொன் றில்லாத
...இறைவன் அடியார் நீரிலிட்ட
ஏடும் எதிர்க்க அருள்வான்வீற்
...றிருக்கும் கோவில் தென்காற்றில்
ஆடும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....5

 தசையைச் சுடுகான் தழலாடும்
...தனியன் மங்கை பங்குடையான்
விசமும் அமுதாய் விண்ணவர்க்காய்
...விரும்பி உண்ட ஈசனவன்
வசமும் ஆவான் அன்பினுக்கே
...மேவும் கோவில் வளிதவழ
அசையும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....6