Monday, February 25, 2013

திருவதிகை வீரட்டானம்--- 2


சஞ்சலங்கள் தருகின்ற வினையிடரைத் தாங்குகின்ற சக்தி வேண்டி
கஞ்சமலர்த் தாள்பற்றிப் பணிந்தேத்தும் அன்பர்க்கே அருள்செய் கின்ற
நஞ்சையணி கண்டமுடன் விண்ணதியும் வான்பிறையும் நயந்த ணிந்த
செஞ்சடையான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 6

வெட்டவெளி தன்னில்சுழல் கோளையெல்லாம் இயக்குகின்ற விமலன் மோன
நிட்டையினில் மறைபொருளை கல்லால்கீழ் சீடர்க்கு போதிப் பானின்
நட்டமிடு செங்கழலில் சாற்றுகின்ற பாமாலை நயந்தேற் கின்ற
சிட்டனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 7

பலவாகும் விளையாடல் விழைவோடு புரிவானை பத்தி யாக
இலையோடு மலர்தூவும் அடியாரின் இடர்யாவும் தீர்த்த ழித்துக்
கலனோடு மழுதீவாட் படையேற்றான் புரமூன்றும் கரியாய் செய்த 
சிலையேந்தி திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 8

புகழ்பொலியும் அருளுரைக்கும் நாவரசர் தமிழ்பாடல் புரிந்து வப்பான்
நிகழ்வதவன் செயலாக நினைவாரின் சித்தமதில் நிற்கு மீசன்
இகழ்வினில்மெய் அன்பர்க்குத் துணையாகக் காக்கின்ற இறைவன் திங்கள்
திகழ்முடியன் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே.... 9

புரிந்து= விரும்பி.

வெய்யழலாய் ஓங்கியோனை அயன்மாலாம்  இருவர்தொழும் விமலன் தானும்
பையரவும் வெண்பிறையும் கங்கையோடு செஞ்சடையில் சூடு கின்ற
தையலுமை பங்குடையான் நாவரசர் பாவலங்கல் தரித்து வந்த
செய்யனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 10
 

Thursday, February 21, 2013

திருவதிகை வீரட்டானம்--- 1

  (அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு.
1-5
சீர்களில் மோனை.)

சிவநெறிசேர்ந் துய்யவெண்ணும் தமக்கைமனம் மகிழவந்த செம்மல் செய்யும்
கவலைதரு வினையகலும் செந்தமிழ்த்தேன் பாவலங்கல் கனிவாய் ஏற்கும்
உவகையினில் அருள்பொழியும் தெய்வமவன் திருநடம்செய் ஒண்தாள் போற்றி
சிவனுறையும் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....1

அல்லெனவும் பகலெனவும் பாராது திலகவதி அரனை வேண்ட
நல்வழியை நாவரசர்க்  கருள்செய்து ஆட்கொண்ட நம்பன் மன்றில்
பல்லியமும் முழங்கிடவே ஆடல்செய்வான் கழல்பணியும் பத்தர்க் கன்பன்
செல்வனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....2

அம்மையுடன் ஆடிடுவான் கழல்பற்றித் தமக்கையிறை அருளை வேண்ட
நம்மையனும் இளவலுக்கு  சூலைதந்தாட் கொண்டவர்க்கு நன்று செய்ய
மம்மரறு பாவலங்கல் சூட்டிமகிழ் வாகீசர் வணங்கும் தேசார்
செம்மலுறு திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....3

 பேரவனுக்(கு) ஆயிரமாய்க் கொண்டிலங்கும் பிறைசூடிப் பெம்மான் செய்யச்
சீரடியை போற்றிமகிழ் நாவரசர் தேவாரப் பண்ணிசையை செவியேற் கின்ற
பூரணன் தன் நுதல்விழியால் முப்புரத்தை எரியாக்கிப் பொடி செய்த
தீரனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....4

சேவமரும் அங்கணன் தன் அடியாரைக் காத்திடவே தேடி வந்து  
நோவவரும் வினைதீர்ப்பான் முப்புரத்தை எரிசெய்யும் நுதல்கண் ணன்
பாவடியில் நிறைந்திருக்கும் ஈசனவன் எளியோர்க்கருள் செல்வ னான
தேவனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....5

Thursday, February 14, 2013

திருக்கண்டியூர்-- 5

 உரிய வன்யமன் வந்திட
...உடலை விட்டுயிர் ஏகுமுன்
வரிய தள்தனை ஆடையாய்
...வரித்து மேனியில் ஏற்றவன்
திரியு முப்புரம் தீயெழ
...சிரித்த வன்விடத் தால்களம்
கரிய வன்பதி கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....9

மங்க லாகிடும் பார்வையும்
...மறலி வந்திடு முன்னமே
வெங்க டம்தனில் ஆடுவான்
...விரிந்த தாழ்சடை கொண்டவன்
செங்கழல் மறை போற்றிடும்
...திங்கள் கொன்றை பாம்புடன்
கங்கை சூடரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....10

திருக்கண்டியூர்-- 4

 வெய்ய ழல்சுடு காட்டினில்
...வெந்து சாம்பலென் றாகுமுன்
தைய லாளுமை பங்கனின்
...தாளி ணைத்துணைவேண்டியே
மெய்யன் உண்பலித் தேறிட
...வேதன் வெண்டலை ஓடுடைக்
கையன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....7

கொண்டு வந்ததென்? போகையில்
...கொண்டு செல்வதென்? என்பதைக்
கண்டு மெய்யினைத் தேர்ந்திட
...கங்கை யான்கழல் சூடியும்
மண்டும் பேரருள் போற்றியை
...மகிழ்ந்து ஏற்பவன் நஞ்சையுண்
கண்டன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....8


Sunday, February 10, 2013

திருக்கண்டியூர் --- 3

நோதல் சேர்பிணி மூப்பினில்
...நொந்து பேசொணாப் போதினில்
பாத கன்யமன் வீசிடும்
...பாச மோடுயிர் ஏகுமுன்
நாதன் வெண்டலை யிற்பலி
...நாடி நல்லிசை மாந்திடும்
காதன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....5

 கண்ணி லாதவன் வீசிடும்
...கால பாசமும் அண்டுமுன்
வெண்ணி லாத்துளி விண்ணதி
...வேணி சூடிய  செய்யவன்
புண்ணி யக்கழல் பற்றிடின்
...பொங்கும் அன்பினை நெற்றிசேர்
கண்னில் காட்டரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....6

கண்ணிலாதவன்=அந்தகன்.(இயமன்).
இரக்கமில்லாதவன் என்னும் பொருளில்.

Wednesday, February 6, 2013

திருக்கண்டியூர் -- 2

வேளை வந்திட அந்தகன்
...வீசும் பாசமும் அண்டுமுன்
கோளை வானொளிர் மீனினைக்
...குறித்த பாதையில் ஓட்டுவான்
தாளை பற்றிடும் சிந்தையாய்த்
...தஞ்சம் வேண்டிடக் காப்பவன்
காளை வாகனன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....3

வேட்டுப் பேணிய யாக்கையை
    ...விட்டு யிர்செலு முன்னமே
  ஆட்டுக் காலெடுத் தாடிடும்
   ...ஐயன் உண்பலி தேடுவான்
 சூட்டும் கொன்றையும் தாழ்சடை
    ...மேவியொ ளிர்ந்திடும் ஓர்விழி
 காட்டும் நெற்றியன் கண்டியூர்
   ...கருதி உய்ம்மட நெஞ்சமே....4

Monday, February 4, 2013

திருக்கண்டியூர்--- 1


(அறுசீர்விருத்தம். 'மா கூவிளம் கூவிளம்' என்ற அரையடி வாய்பாடு.)

நோவி னாலுயிர் வாடிட
...நொந்து சொந்தமும் கூடுமுன்
நாவி னித்திடும் பேரனை
...நம்பி போற்றிடும் பத்தியில்
வாவி சூழ்கமழ் பூம்பொழில்
...மஞ்சு லாவிடும் வானுயர்
கோவி லானுறைக் கண்டியூர்க்
...குறுகி உய்ம்மட  நெஞ்சமே.

குறுகி=அணுகி.



நிந்தை பட்டுழல் மூப்பினில்
...நெருங்கும் காலனைக் காணுமுன்
எந்தை ஈசனார் பொற்கழல்
...ஏத்தி போற்றிகள் சொல்லிட
முந்தை ஊழையும் தீர்ப்பவன்
...மொய்க்கும் வண்டுசூழ் பூமலி
கந்த மார்பொழிற் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே.