Tuesday, January 31, 2012

திருவேடகம்!--3

ஆரா இன்னமுதே அழ லாயொளிர் செம்மலையே
காரார் மேகமெனக் கனி வாகும் அருள்மழையே
தாரார் தோளுடையாய் தருக் கீழமர் சற்குருவே
சீரார் கின்றபதி திரு ஏடக மேயவனே....5

பையார் நச்சரவைப் பரி வாக அணிபவனை
மையார் கண்ணியுமை மண வாளனை மாதவனைக்
கையால் தூமலர்பொற் கழல் தூவியெம் அங்கணனே
செய்யா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....6

Monday, January 30, 2012

திருவேடகம்! --2

எந்தாய் உன்நிழலில் எமை வைத்தருள் ஈந்திடுவாய்
கந்தார் பூவலங்கல் கமழ் தோளுடை கண்ணுதலே
சந்தார் தேவாரத் தமிழ் மாந்திடும் தற்பரனே
செந்தீ மேனியனே திரு ஏடக மேயவனே....3

சந்தார்=இசை நிறைந்த
கந்தார்= நறுமணம்நிறைந்த

பேரா யானவனை பிறை சூடியை போற்றிசெயச்
சேரா வல்வினைகள் தெறித் தோடிடச் செய்திடுவான்
காரார் மாமிடறா கழல் தந்தருள் கண்ணுதலே
தீரா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....4

பேராய் ஆனவன்= நாமரூபன்.

Saturday, January 28, 2012

திருவேடகம்!---- 1

திருவேடகம்
---------------------
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
(மா + கூவிளங்காய் + நிரை + கூவிளம்-கூவிளங்காய் / தேமா-கருவிளங்காய்)
அடியின் முதற்சீர் நெடிலில் முடியும்;
மூன்றாவதாக வரும் நிரைச்சீரில் நெடில் இராது;
4-5 சீர்களிடை வெண்டளை பயிலும்;
அடியின் ஈற்றுச் சீரின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வரும்.
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")
குறிப்பு: பின்வரும் பாடல்களுள் சில ஈசனை முன்னிலையிலும், சில படர்க்கையிலும்
பாடுவன.
(சிவசிவா நன்றி!)


தேவா தீஞ்சுடரே சிவ சுந்தரத் தெள்ளமுதே
நோவா கின்றவினை நொறுங் கச்செயு நுண்மையனே
ஓவா துன் துணையே உறத் தந்தருள் ஒண்பொருளே
சேவார் வெல்கொடியாய் திரு ஏடக மேயவனே....1

மூவா முன்னவனே முழு தாகிய மூலவனே
காவா என்றவுடன் கனிந் தேயருள் செய்திடவே
மாவாம் சேவமர்ந்து மலைப் பெண்ணுடன் வந்தருள்வாய்
தேவா சிற்பரனே திரு ஏடக மேயவனே....2

Tuesday, January 24, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி!-- 5

'கூவிடுஇன் குரலினிலே குயிலே!' என்று
...குயில்பத்துப் பாட்டிசைக்கும் குழகன் தன்னை
பாவடியில் தாண்டகம்சொற் பதங்கள் ஆடும்
...பாங்கினிலே நடனம்செய் பரனை போற்றிப்
பூஅடியில் தூவியன்பர் பூசை செய்தே
...புங்கவனின் அஞ்செழுத்தைப் பொலிய ஓதிச்
சேவடியால் கூற்றுதைத்துச் சிறியன் காத்தச்
...சிராப்பள்ளி சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....9

தீங்கன்னல் இன்சுவைசேர் சீரார் நாமம்
...சிந்திக்கும் அன்புக்குள் சிக்கு வானை
ஆங்கன்று மழலைக்காய் அம்மை யோடே
...அமுதீந்துப் பசிதீர்த்தே அருள்செய் தானை
தாங்கொண்ணா வல்வினைசெய் சஞ்ச லத்தைச்
...சாடியென்றும் தயைசெய்துத் தாங்கு வானைத்
தீங்கில்லா நிலையருளும் செல்வன் தன்னைச்
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....10

தேம்,தீம்=இனிமை
தீம்+கன்னல்=தீங்கன்னல்
ஆங்கு+அன்று= ஆங்கன்று

Friday, January 20, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி!--4

கூடிவந்த அன்பரெலாம் கோவில் கொண்ட
...கூத்தன்தாள் அடைக்கலமாய்க் கொள்வார் தம்மை
நாடிவந்த வினைதன்னை நலியச் செய்யும்
...நற்றவனை உலகினையே நடத்து வானை
வாடிநொந்து பார்த்திருக்கும் மகளை எண்ணி
...வருவெள்ளப் பெருக்கதனால் வாரா தாய்க்காய்த்
தேடிவந்து தாயுமானத் தெய்வ மான
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....7

நேத்திரங்கொள் நுதலானை நேயன் தன்னை
...நீலமணி மிடற்றானை நிதமும் போற்றிப்
பாத்திரமாய் அவனுக்குப் பத்தி பண்ணிப்
...பற்றிடும்தாள் கதியென்றே பரவு மன்பில்
பூத்திரள்கை நிறைந்திடவே பூசித் தேத்தும்
...புண்ணியம்செய் அடியாரின் புனிதத் தேவைத்
தீத்திரள்போல் மேனியனைத் திருநீற் றானைச்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....8

பாத்திரம்= தகுதி என்னும் பொருளில்.

Wednesday, January 18, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி!--- 3

சந்தமுறு திருமறையில் தமிழா .னானை
...சஞ்சலங்கள் தீர்ப்பவனை தனிய ளான
வந்தியவள் கூலியாக வந்த போது
...மன்னன்கைத் தடிவீச வலிகொண் டானை
சுந்தரரின் தோழனெனத் தூதா .னானை
....தொண்டருளம் கண்டருளும் துய்யத் தேவை
சிந்தையினில் நின்றவனைத் திருநீற் றானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....5

ஓங்கழலாய் உயர்ந்தொளிரும் ஒருவன் தன்னை
...உற்றிடுமோர் துணைவனென உள்கு வாரைத்
தாங்குகிற அருள்நிதியைத் தம்பி ரானைச்
...சந்ததமும் அன்பருளம் தங்கு வானைப்
பூங்கழலன் திருநடனம் போற்று கின்ற
...புண்ணியராம் அடியார்க்குப் புகலாய் நின்று
தேங்குமன்பில் நிறைவானை சேயூர் வானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....6


உள்கு=நினை.

Monday, January 16, 2012

சிராப்பள்ளிச்சிவன் தன்னைச்சிந்தி!-- 2

வான்தங்கு முகிலினம்பெய் மழையா னானை
...வண்மைமிகு தயையினிலே வாழ்விப் பானைக்
கான்தங்குத் தீயாடும் கழலன் தன்னைக்
...கண்டுவக்கும் அடியார்க்குக் கண்ணா னானை
ஊன்தங்கு முயிர்தன்னில் உயிர்ப்பா னானை
...உற்றிடுமோர் புகலாக உதவு வானைத்
தேன்தங்கு கொன்றையுடன் திங்கள் சூடும்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....3

பூவைஉமா தேவியினைப் புடைவைத் தானைப்
....பொன்னவனை அங்கணனைப் பூசிப் போரின்
நோவையிலா தருள்செய்யும் நுதல்கண் ணானின்
....நூறுபத்து பெயரினையே நுவன்று போற்றும்
நாவையலால் வெறிதரற்றும் நாவை வேண்டா
...நயனுடைய அடியாரின் நாதன் தன்னை
சேவையெலாம் எளியர்க்காய்ச் செய்தல் வேட்கும்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....4

Saturday, January 14, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி (திருச்சிராப்பள்ளி)

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
----------------------------------------------------------------------
ஆராத பேரின்ப அருளா .னானை
...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை
சீராரும் பிறைமேவும் சென்னி யானை
...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை
வாராத செல்வமென வருகின் றானை
...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை
தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1

நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை
மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை
...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை
தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை
...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2

நேயவன்=மிக்க அன்புடையவன்.
மேயவன்=விரும்பியவன்.

Wednesday, January 4, 2012

திருமழபாடி!-- 4

நலமே விளைவாய் .. அடைநெஞ்சே
...நடுவாய் விதையாய் .. இறைநேசம்
நிலைபே றுடையான் ..நினைவாகின்
....நிறைவாய் இனிதாய் .. வருவானே
தலையோ டதிலே .. பலிதேர்வான்
....தழலாய் மலையாய் .. அருளீசன்
அலைகா விரிபாய் .. மழபாடி
....அகலா துறைமா .. மணிதானே....7

நறைசேர் மணமோ.. டலர்பூவை
...நவமாய் சரமாய் அணிவானே
கறைசேர் மிடறோன் .. பிறைசூடி
...கழலே சரணாய் .. அடைவாரின்
குறையே கிடவே .. வருமீசன்
...குணமா நிதியாம் .. குருநாதன்
அறைஆர் புனல்பாய்.. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....8

நறை=தேன் என்னும் பொருளில்.

Monday, January 2, 2012

திருக்காளத்தி!-- 5

வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி
ஆத ரம்பெறும் அன்பில் ஏத்திட
ஏத மென்பதும் இல்லையே....9

ஆடு வான்திரு ஆடல் தீயெரி
காடு ளானுறை காளத்தி
நாடி நற்றுணை நாளும் வேண்டிட
ஓடி வெவ்வினை ஓயுமே....10