Monday, June 25, 2012

ஊன்றாப்பு (Uentrop)

Kamakshi temple in Hamm-Uentrop in Germany (http://kamadchiampal.com/index.php?Itemid=191)

(கலிவிருத்தம்? 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")
(சம்பந்தரின் இப்பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்றவாய்பாடு.


இலக்கணக் குறிப்புகள்:
ன்+த = 'ன்ற' என்று திரியும்.
ல்+ம = 'ன்ம' என்று திரியும்.


வான்த வழ்வெண் மதியன் செஞ்சடையன்
கான்த .னில்செங் கனலில் நட்டமிடும்
கோன்தன் கழலை கும்பிட் டன்பினில்சேர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....1


கூன்பி றையுடன் குதித்துப் பாய்நதியும்
தான்றன் சிரசில் தரித்த செய்யவனை
நான்ம றையும் நாடும் புண்ணியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....2


தேன்றாங் கலர்கள் திகழ அணிவானை
தோன்றாத் துணையாய்த் துதிப்போர்க் கருள்வானை
ஊன்றாங் குயிரில் ஒளியாய் இருப்பானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....3

வான்போல் பொழியும் வண்மை கொண்டவனை
ஆன்மேல் அமரும் ஐயனை எழில்மேவ
மூன்றாய்த் திகழும் முக்கட் சோதியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....4


தேன்வார்க் கும்பா செவியேற் கின்றானை
நான்காம் மறைகள் நவிலும் கழலானை
நோன்றார் மனத்தில் நுவலஞ் செழுத்தானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....5

Monday, June 18, 2012

திருப்பரங் குன்றம்--2

மரகத நிற உமை கேள்வன் 
...மறைபுகழ் செய்யவன் தானும் 
அரவுடன் கரிஉரி மேவும் 
...அழலுடை அங்கையி .னானும் 
சிரமதில் மிளிர்ந்திடு திங்கள் 
...செழுமலர்க் கொன்றையி னானும் 
திரையினில் மீன்பிடிப் பானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....6


சிரமொரு பத்துடை யானின் 
...திறல்தனை அடர்த்திடு வானும் 
மரநிழல் கீழமர் மோன 
...வடிவினில் திகழ்குரு வாகி 
வரமளித் துயர்நிலை கூட்டும் 
...மலைமகள் பங்குடையானும் 
சிரமலி மாலையி னானும் 
... திருப்பரங் குன்றமர்ந் தானே....7

விரவிடு மணப்புகை யோடு 
...விதவித நறுமலர் சூட்டிப் 
பரவிடு பத்தரைக் காக்கும் 
...பதமலர் தனையுடை யானும் 
இரவினில் எரியிடு கானில் 
...எழில்நடம் செயும்தனி யானும் 
திரைவிடம் சேர்மிடற் றானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....8

உரியதொர் சிவனடி யாரென்(று) 
...ஒப்பிட வஞ்சக மாகச் 
சுரிதனை வீசிடும் போதும் 
...தொழும்சிவ பத்தருக் கன்பன் 
விரிசடை நுதல்விழி யானும் 
...விடைதனில் அமர்ந்தருள் வானும் 
திரியரண் மூன்றெரித் தானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....9 

முந்தையன் பின்னவன் என்றும் 
...மூலவன் முதலவன் றானும் 
சந்திரன் வானதி பாம்பைத் 
...தலையினில் சூடிடு வானும் 
சந்ததம் பத்தியொ டெண்ணும் 
...தகவுடை யருக்கருள் வானும் 
செந்தழல் மேனியி னானும் 
...  திருப்பரங் குன்றமர்ந் தானே....10 
 
 

Sunday, June 17, 2012

திருப்பரங்குன்றம் --1

  
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு) 


அரியுடன் அயனறி யாத 
...அடிமுடி தனைஉடை யானும் 
எரிகடத் திடைநடம் ஆடி 
...இடுபலிக் கேஅலை வானும் 
பரிவொட ருள்பொழிந் தேநம் 
...பழவினை தீர்த்திடு வானும் 
திரிதரு எயிலெரித் தானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....1


 நுரையிடைக் குமிழிய தாக 
...நொடித்திடும் இயல்புடை வாழ்வில் 
குரைகழல் நடமிடு தாளைக் 
...கும்பிட வந்தருள் வானும் 
தரையுள உயிர்களைத் தாங்கித் 
...தழைத்திடச் செய்திடு வானும் 
சிரமதில் பிறையுடை யானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....2

வழுமலி உலகியல் வாழ்வில் 
...மாண்புறு நிலைபெற எண்ணித் 
தொழுதிடு அடியவர்த் துன்பைத் 
...துடைத்துநல் வழியமைப் பானும் 
விழுகதிர் போல்நிறத் தானும் 
...விரிசடை மேல்நதி சூடி 
செழுமண மலரணி வானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....3

கீறணி பிறையுடை யானும் 
...கிலிதரு வினைதுடைப் பானும் 
வீற ணி போர்விடை யானும் 
...விண்ணவர் தம்பெரு மானும் 
கூ றணி உமைஇடத் தானும் 
...குதியலை நதியுடை யானும் 
சீறர வம்புனை வானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே ....4

வில்லலர் கணைமதன் வீழ 
...விழித்திடு சினமுடை யானும் 
கல்லலர் என்றிட ஏற்கும் 
...கருணைசெய் மனமுடை யானும் 
சொல்லற நலிவுறும் போதும் 
...துணையென முன்வரு வானும் 
தில்லையில் ஆடலி னானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....5  

  

Wednesday, June 6, 2012

தாராசுரம்--2

ஆலம்கறை கண்டன்கழல் அணிவாரவர் தொண்டை
காலம்நிலைத் திடச்செய்புகழ் காணத்தரும் சிற்பம்
ஞாலம்தனில் செப்பும்தளி தாராசுரம் சென்று
சூலன்றனைத் தொழுவார்களைத் தொடராவினை தானே....6

எல்லாமவன் அருளாகிடும் என்றேநினைத் தன்பால்
சொல்லாலுயர் செயலால்விழுத் தொண்டாற்றியர் உய்வை
கல்லாலொரு கதைசொல்தளி தாராசுரம் சென்று
வல்லான்கழல் தொழுவார்களை மருவாவினை தானே....7

தாயாயொரு பெண்ணுக்கருள் தந்தானவற் கன்பால்
ஓயாதவன் பணியேசெயும் உறுநர்தம துய்வை
தேயாஒளிச் சிலைசொல்தளி தாராசுரம் தன்னில்
சேயான்கழல் தொழுவார்களைத் தொடராவினை தானே....8

எரிபொங்கழல் அருவானவன் இருவர்தொழ அருள்வான்
விரிசெஞ்சடை ஈசன்கழல் விழைதொண்டரின் உய்வை
சரிதஞ்சொலும் சிற்பத்தளி தாராபுரம் மேய
பரியும்பரன் பாதம்தொழப் பற்றாவினை தானே....9

கொண்டல்தவழ் இமயத்தரன் குளிர்பூங்கழல் சூடி
மண்டன்பினில் பணிசெய்தவர் மறையாப்புகழ் வாழ்வைக்
கண்டின்புறச் சாற்றும்தளி தாராசுரம் மேய
அண்டன்கழல் அடைவார்தமை அடையாவினை தானே....10
 

Tuesday, June 5, 2012

தாராசுரம்--1

கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு

சொல்லும்தமிழ் மறைப்பாட்டினில் சுடரும்பர  சிவனார்க்(கு)
அல்லும்பகல் பணிசெய்துயர் அரசாள்பவர் வாழ்வைக்
கல்லில்சொலும் தாராசுரம் காணப்பெறும் பேறாய்
செல்வன்கழல் தொழுவார்களைச் சேராவினை தானே....1

சொற்சித்திர மறையோதிடும் துய்யோர்களின் வாழ்வை
நற்பக்குவ பத்திசெயும் நலமாம்கதை யாகக்
கற்சித்திரம் மொழியும்தளி தாராசுரத் தேவை
அற்சித்திடும் அடியார்களை அடையாவினை தானே....2

அண்ணித்தவன் தாள்போற்றிடும் அன்பால்நெகிழ் பத்திப்
பண்ணிற்றுதி செய்தேவினை படவென்றவர் கதைகள்
மண்ணிற்றிகழ் கலையார்தளி தாராசுரத் தானை
எண்ணிப்பணி அடியார்களை எய்தாவினை தானே.....3

அண்ணித்தவன்= அணுகி அருள்செய்த ஈசன்

கோணில்விரி வானில்மினும் உடுவாயுளன் தாளைப்
பூணும்சிர முடைத்தொண்டரின் பொற்பில்திகழ் வாழ்வைக்
காணும்சுவர் சிற்பத்தளி தாராசுரத் தானை
பேணும்குணம் உடையார்களைப் பிடியாவினை தானே....4

கோண்=அணுவிலும் நுண்மைத்து

வெளியில்நட மிடுவான்கழல் விரைமென்மலர் தூவி
தெளிபத்தியில் தொண்டாற்றிய திடசித்தரின் உய்வை
உளிசொல்கதை சிற்பத்தளி தாராசுரத் தானை
அளியும்மனத் தொடுவாழ்த்திடில் அடையாவினை தானே....5