Friday, April 27, 2012

அருளாய் அறம் வளர்த்த நாயகியே (திருவையாறு)--1


(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

விடியலெழு செஞ்சுடரே மேதினியைக் காப்பவளே
வடிவழகி வெவ்வினைகள் வாட்டுமிடர்த் தீர்த்தருளாய்
பொடியணியும் மதியன் தன் பொற்புடைய கற்பகமே
அடியவர்கட் கருந்துணையே அறம்வளர்த்த நாயகியே....1

நையாத வாழ்வுதனை நலிந்தோர்க்கு நல்கிடுவாய்
பையாட ரவத்தானின் பங்குறையும் சங்கரியே
பொய்யாது அருள்வையே புனற்பொன்னிக் கரைதன்னில்
ஐயாறு மகிழ்ந்துறையும் அறம்வளர்த்த நாயகியே....2

பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் உள்ளத்தில் தித்திக்கும் நாமமம்மா!
சோகத்தைத் தருமூழாம் தீவினையைத் தீருமம்மா!
ஆகத்தைப் பிரியாத அறம்வளர்த்த நாயகியே....3

பாகு+அத்தை= பாகு அதனை.

உருளுகிற புவிதன்னில் உயிரனைத்தும் காப்பவளே
சுருளுடைய கருங்குழலி சுந்தரனின் பங்கினளே
வெருளவரு வினைத்துன்பம் விட்டேகச் செய்திடுவாய்
அருளமுதை அளிக்கின்ற அறம்வளர்த்த நாயகியே....4

அஞ்சுகம்சேர் தோளுடையாய் அருளரசி கயல்கண்ணி
பஞ்சுநிகர் பூங்கழலைப் பற்றவினை ஓடிடுமே
தஞ்சமென உனையடைந்தோம் சஞ்சலங்கள் தீர்த்தருளாய்
அஞ்சனவேல் விழியுடையாய் அறம்வளர்த்த நாயகியே....5

Saturday, April 14, 2012

பழனத்தரன் பாதம் பணி (திருப்பழனம்) --2

6)
ஒலியென்றனை தாளந்தனில் இசைவாளவள் காந்தன்
பொலிவொன்றிய ஒளிவீசிடும் திருவாகிடும் உருவன்
நலிவின்றிட அடியாரிடர் தீர்க்கும்தயை நிதியாய்ப்
பலிகொள்பவன் பழனத்தரன் பாதம்பணி மனமே.

அனை=அன்னை,இடைக்குறை
பொலிவு+ஒன்றிய=பொலிவொன்றிய
7)
சுடரேந்திடும் நுதல்கண்ணினன் முழவோடதிர் துடிசெய்
நடையேந்திடும் திருவாடலில் அடியார்க்கருள் செய்வான்
சடையேந்திய மலர்கொன்றையில் மிளிர்வான்கரம் மழுவாட்
படையேந்திய பழனத்தரன் பாதம்பணி மனமே.
8)
சேர்க்கும்நெறி கூட்டும்அடி யவர்க்கேஉயர் அன்பை
வார்க்கும்விழி நுதலோன்கழல் தொழவேவினை மாயும்
போர்த்தவ்வெழில் வனத்தில்கடும் தவமேசெய கணையை
பார்த்தற்கருள் பழனத்தரன் பாதம்பணி மனமே.
9)
மண்ணாகிடும் யாக்கைக்கொரு நலம்சேர்வழி சொல்வேன்
பெண்ணோரிடம் கொண்டானவன் கழலேதுணை என்றே
"கண்ணா!கறைக் கண்டா!எமக் கருள்வாய்!"என வேண்டிப்
பண்ணார்பொழில் பழனத்தரன் பாதம்பணி மனமே.
10)
தீங்கற்றிடும் உயர்வாழ்வினைத் தருவான்கழல் நாடி
ஓங்கித்திகழ் அழலோன் திருப் புகழ்பாடிட அருளும்
பூங்கொத்துகள் உதிர்ந்தேபுனல் ஆடும்கவின் பொன்னி
பாங்கர்த்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே.

Sunday, April 8, 2012

பழனத்தரன் பாதம் பணி!(திருப்பழனம்) --1

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - என்ற வாய்பாடு)

1)
துயிலும்நிதம் விழிப்பும்தொடர் நிலையாகிடும் உலகில்
மயலில்வரும் இடர்நீங்கவும் துதிசெய்திட அருள்வான்
மயிலும்நடம் இடும்பூம்பொழில் தனில்பாடிடும் குயில்கள்
பயிலும்திருப் பழனத்தரன் பாதம்பணி மனமே.
2)
வாடும்படி மிகுதுன்பினைத் தரும்வெவ்வினை தீர
ஆடும்பதம் நாளும்பணி பவர்க்கேயருள் செய்வான்
மூடும்புனல் மலராலெழிற் மிகச்சூழ்ந்திட வண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே.
3)
புத்தித்தடம் விலகித்தடு மாறும்நிலை மாறும்
சித்தத்தெளி வினுக்கோர்வழி புகல்வேனது கேளாய்
தித்தித்திடும் திருப்பேருடை சுத்தத்தவன் போற்றி
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே.
4)
ஓலத்திரை கடல்சூழ்ந்திடும் புவிமீதுறு வாழ்வில்
காலத்திடர் செயும்வெவ்வினை தீர்க்கும்தயை கொண்டான்
சூலப்படை உடையான் தன(து)அடியார்களின் துணையாய்ப்
பாலித்தருள் பழனத்தரன் பாதம்பணி மனமே.
5)
அலையும்மனம் அடங்கும்வழி மொழிவேனது கேளாய்
தலையில்பிறை சூடும்சிவன் கழல்போற்றிட அருள்வான்
உலவும்வளி தவழ்பூம்பொழில் மணம்வீசிடும் கொடிகள்
பலவும்திகழ் பரனத்தரன் பாதம்பணி மனமே.

Monday, April 2, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) --5

9)
பரியும் தயையின் திறத்தை அன்பர் பாடி வணங்கும்தாள்
திரியும் நிலையில் பலியைத் தேரத் தினமும் அலையும்தாள்
விரியும் வெளியில் நடனம் ஆடி விந்தை புரியும்தாள்
அரியும் அயனும் அடைதற் கரிய ஆரூர் அரன் தாளே.
10)
தையல் உமையை இடது பங்கில் தாங்கி அருள்வான் தாள்
கையில் சூலம் மழுதீ யோடு கலைமான் உடையான் தாள்
மெய்யில் நீறு பூசும் அடியார் வேண்டித் தொழும்நற்றாள்
ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன் தாளே.