Sunday, December 25, 2011

திருக்காளத்தி!--4

மங்கை யாளுமை மன்னன் செஞ்சடை
கங்கை யானுறை காளத்தி
இங்கி தம்பெற எண்ணி ஏத்திட
எங்கு மேநிறை இன்பமே....7

நைய வேபலி நாடும் கப்பரை
கையி .னானுறை காளத்தி
மெய்யில் நீறினை மேவி ஏத்திட
மையல் செய்வினை மாயுமே....8

Monday, December 19, 2011

திருக்காளத்தி!--3

ஐய னேயெனின் அஞ்சல் தந்திடும்
கையி னானுறை காளத்தி
பைய வேஇசை பாடிப் போற்றுதல்
செய்ய வல்வினை தீருமே....5

நாட்ட மோடருள் நல்கி உய்வழி
காட்டு வானுறை காளத்தி
வேட்டு மின்னிசை மேவ ஏத்திட
வாட்டு மூழ்வினை மாயுமே....6

Friday, December 9, 2011

திருக்காளத்தி!-- 2

விண்ணு லாவெயில் மூன்றும் தீப்படு
கண்ணி னானுறை காளத்தி
நண்ணி நற்றமிழ் நாளும் போற்றிடத்
திண்ண மாய்வினை தீருமே....3

விண்+உலாவு+எயில்=விண்ணுலாவெயில்

விண்ணி லாதிகழ் வேணி சேர்மலர்க்
கண்ணி யானுறை காளத்தி
அண்ணு வாருறு அன்பில் போற்றிட
மண்ணி னார்வினை மாயுமே....4

அண்ணுதல்= நெருங்குதல்.

Wednesday, December 7, 2011

திருக்காளத்தி-- 1

'தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்.
ஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.

பிச்ச னேயெனும் அன்புக் காட்படும்
அச்சன் மேவிய காளத்தி
மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே....1

சுட்ட நீறணி சோமன் கீளுடைக்
கட்டு வானுறை காளத்தி
நிட்டை யாய்த்தொழும் நெஞ்சி னார்த்துயர்
விட்டு மேனிலை மேவுமே....2

Monday, December 5, 2011

திருமழபாடி!-- 3

வண்ணவிருத்தம்
-----------------
"தனனா தனனா .. தனதான"
"வரதா மணிநீ ...... யெனவோரில்" - திருப்புகழ் - பழநி.

தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

Sunday, December 4, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 5

ஓடி செல்வம் சேர்த்திடும்
....உள்ளம் அமைதி கொள்ளுமோ?
வாடி நோகும் வாழ்வினில்
....வரமா யினிக்கும் பேரதே
கூடி இசைந்து பத்தியால்
....கூத்த! உன் தாள் சரணென
நாடி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....9

அவமே தருதீ வினையற
....அன்பர் நாடித் துதிசெய
தவமே உருவாய் அமர்ந்தவன்
....தயையாய் புகலை அளிப்பவன்
'புவனா தார நாதனே
....புனிதா பழமை யானவா
நவனே!' என்பார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....10

Thursday, December 1, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 4

உச்சி மீது வெண்பிறை
....உரகம் கங்கை ஏற்றவா
பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா
மெச்சி யோதும் பாடலை
....விரும்பும் உன்னைச் சரணென
நச்சி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....7

வியக்க வைக்கும் ஆடலில்
....விண்ணும் மண்ணும் இன்புறப்
பயக்கும் உன்றன் கருணையை
....பாடிப் பாடி அன்பொடு
தயக்கம் இன்றி உன்னடி
....சரணம் ஐயா என்றுமே
நயக்கும் அடியார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....8

Wednesday, November 30, 2011

நஞ்சன்கூடு கண்டனே!-- 3

கீதா குரவர் திருமுறை
...கேட்டு மகிழ்ந்து நடமிடு
பாதா நதியும் மதியுடன்
... பாம்பும் அணிந்த தயைநிறை
போதா ஆலின் கீழமர்
...புனிதா நீயே எம்துணை
நாதா என்பார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே....5

விதியாய் வினையாய் வாட்டியே
....மிரள வைக்கும் துன்பறக்
கதியாய் கழலைப் பற்றியே
....கந்த மலர்கள் தூவியும்
துதியாய் இசையாய் ஆனவா
....தூயா பிறைசேர் சென்னிமேல்
நதியாய் என்பார்க் கருள்செயும்
....நஞ்சன் கூடு கண்டனே....6

Tuesday, November 29, 2011

நஞ்சங் கூடு கண்டனே!-- 2

பொற்றா ளமதில் ஒலியவள்
...புடையில் பங்காய் ஏற்றவ!
பெற்றார் எனிலுன் அன்பினைப்
...பெற்றார் தாமே புண்ணியர்?
மற்றா ருளரிங் குற்றவர்
...மறைகள் ஓதி இன்புறும்
நற்றாள் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே!....3

குவியும் மலரில் கோத்திடும்
...கோல மாலை சூட்டியே
பவள வண்ணா என்றுனைப்
...பாடி நாளும் வணங்கினேன்
துவியென் றிரண்டாம் வினைதனை
...தூர ஓட்டிக் காவென
நவிலும் அன்பர்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே....4

Sunday, November 27, 2011

நஞ்சன்கூடு கண்டனே!

நஞ்சனகூடு (nanjangud)
மைசூரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் நஞ்சனகூடு என்ற தலம் உள்ளது.
தினமலர்த் தளத்தில் தகவல்களையும் படங்களையும் காணலாம்:

http://temple.dinamalar.com/New.php?id=135
நஞ்சங் கூடு கண்டனே (Nanjangud (Kannada ನಂಜನಗೂಡು)

பம்பை உடுக்கை தாளமாய்ப்
...படர்தீ கானில் ஆடிடும்
நம்பன் உனது தாளினை
...நறும்பூத் தூவி சாற்றியே
செம்பொன் மேனி வண்ணனே
...தெம்பு சேர்க்கும் நாமமே
நம்பி .னாருக் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...1

கோளும் தினமும் நன்றுறக்
...கூத்தன் உனையே எண்ணியும்
நீளும் பவமாம் தொடரற
...நிறைவாய்ப் பணியும் அன்புடன்
கேளும் துணையும் நீயெனும்
...கீர்த்தி மிகுதாள் சரணென
நாளும் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...2

Monday, November 21, 2011

திருமழபாடி!--2

பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3

பணி=பாம்பு,பொடி=சாம்பல்.
மதவேள்= செருக்குள்ள மன்மதன்.

செடியா யடர்தீ .. வினையாலே
...தெளிவே துமிலா .. துழல்வாரும்
நொடியே அரனா.. மமதோதில்
...நுதலார் விழியோன் .. புகலாவான்
துடியா ரிடையா .. ளுமைநாதன்
...துணையா யிணைதாள் .. தருமீசன்
அடியார் திரளூர் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....4

Sunday, November 20, 2011

திருக்கோடிகா!--5

ஈடும் இணையென்றும் இல்லா இறையோனைப்
பாடும் இசையாலே பரவி அடைநெஞ்சே
ஆடும் நடராசன் அலர்தாள் சிரம்சூடிக்
கூடும் அடியார்சேர் கோடி காவையே...9

மத்தா யுழல்வேனை வாட்டும் வினைதீர
அத்தா எனையாளென் றணுகி அடைநெஞ்சே
முத்தா டிடுமாப்போல் முரன்றே அளிபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே...10

Thursday, November 17, 2011

திருக்கோடி கா!--4.

நீறு திகழ்மெய்யன் நீல மணிகண்டன்
ஆறு தலையோனென் றறைந்தே அடைநெஞ்சே
ஊறும் மதுநாடி ஒலிசெய் மலர்வண்டாய்
கூறும் அடியார்சேர் கோடி காவையே...7

தலையில் சுடர்கொன்றை தண்ணார் நதியேந்தும்
மலையன் மறையோன் தாள் வணங்கி அடைநெஞ்சே
அலைசெய் மருதம்சூழ் அணியார் பசும்பொற்பூங்
குலைகள் மலி சோலைக் கோடி காவையே...8

மருதம்=மந்தமாருதம், தென்றல்

Monday, November 14, 2011

திருக் கோடிகா!-- 3

மொக்காய் மலராகி முதிர்ந்து வருமன்பில்
சிக்கா திருப்பானோ தேடி அடைநெஞ்சே
மிக்கார் அளிகூடி மிழற்றும் மலர்ச்சோலை
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே....5

பாதி மதியானின் பாத மலர்தன்னை
ஓதி துதிபாடி உருகி அடைநெஞ்சே
சோதி யவன்பேரைச் சொல்லி வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே....6

Saturday, November 12, 2011

திருக் கோடிகா! -- 2

வெளிர்தண் பொடிபூசும் விடையூர் பெருமானை
மிளிர்கண் ணுதலானை வேண்டி அடைநெஞ்சே
அளிசெம் மலர்மேவி ஆர்க்கும் பசுஞ்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே...3

அளி=வண்டு.

இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் தாள் இறைஞ்சி அடைநெஞ்சே
பொங்கார் சிறைவண்டு போதில் இசைபாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே...4

போது=மலர்.

Thursday, November 10, 2011

திருக் கோடிகா!

"மா புளிமாங்காய் மா புளிமாங்காய்" - வாய்பாடு.
புளிமாங்காய்ச்சீர் வரும் இடத்தில் சில சமயம் கூவிளமும் வரலாம்.
==============================================================


புயலென் றிடர்தன்னைப் போக்கும் பிறைசூடி
பெயலில் உலகுய்க்கும்; பேறாய் அடைநெஞ்சே
கயல்கள் குதித்தோடும் கால்வாய் வழிந்தோடும்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே...1

பெயல்=மழை.

பாலன் தனக்காகப் பரிந்தே உதைசெய்து
காலன் தனைச்செற்ற காலன் அடைநெஞ்சே
காலை பொழுதாகக் கானக் குயில்பாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே...2

Monday, November 7, 2011

தாயுமானவனே!-- 5

கங்கை கொன்றையை அணிவான் கறைமிளிர் மிடறுடை ஈசன்
மங்கை பங்கினன் ஆடல் வல்லவன் உறுதுணை யாவான்
திங்கள் வாடிய நாளில் திருவடி தொழஅவன் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா .னவனே....9

தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு முடியில் அணிந்தார்.

கருவி .னில்வளர் பிறவிக் கடலினைக் கடந்திடச் செய்வான்
அருவம் ஆகவும் உருவம் ஆகவும் உயிர்களைக் காத்திடும் ஈசன்
தருவின் கீழமர் குருவாய்த் தண்டமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா .னவனே....10

திருமணம் செய்ய விரும்பிய 'தருமி' என்னும் வறிய அந்தண பிரமசாரிக்கு அவன்
பொற்குவை பெறக், 'கொங்கு தேர் வாழ்க்கை' என்ற பாடலை அளித்ததைச்
சுட்டியது. திருவிளையாடற்புராணம்
'தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்'.

Friday, November 4, 2011

தாயுமானவனே! !--4

துக்க மின்பமென் றிரண்டு சுழல்வினை தனிலுழல் மாந்தர்
முக்க ணன்திருப் பெயரை முன்னிட அருள்தரும் அண்ணல்
தக்க நன்விழி மலரைச் சாற்றிட இடந்திடும் அன்பில்
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே....7

திருவீழிமிழலையில் சக்கராயுதம் வேண்டித் திருமால் தினம் ஆயிரம்
தாமரைமலர்களைக் கொண்டு பூசித்துவரும்போது ஒருநாள் ஒரு மலர் குறையத் தன் கண்
ஒன்றை இடந்து மலராக இட்டு வழிபட்டுச் சிவனருள் பெற்றதைச் சுட்டியது.

திரையும் சேர்பிணி மூப்பில் சிவன்பெயர் குழறிடச் சொலினும்
குரைசெய் செங்கழல் கூத்தன் குழைந்திட வந்தருள் செய்வான்
வரையை கெல்லுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டு
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே....8

கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை நசுக்கிப் பின் அவன் இசைபாடித்
துதிக்கவும் அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாசம் என்ற வாளையும் அருளியதைச்
சுட்டியது.

Wednesday, November 2, 2011

தாயுமானவனே!- 3

ஓங்கு செந்தழல் உருவன் உயிர்களுக் குற்றவன் எம்மான்
தேங்கு மன்பினில் ஊழின் தீங்கினைத் தீர்த்தருள் செய்வன்
வீங்கு தென்றலாம் குளிர்தாள் வேண்டியே பாடிடும் அப்பர்
தாங்கும் கல்லுமொர் புணையாய்த் தந்தநம் தாயுமா னவனே....5

திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிச் சமணர்கள் கடலுள் ஆழ்த்தியபோது, சிவன்
அருளால் அக்கல்லே ஓர் தெப்பம் போல் மிதந்து அவர் கரைசேர்ந்ததைச் சுட்டியது.

கூடல் நன்னகர் ஆளும் குழகனின் விதவித மான
ஆடல் கண்டுளம் மகிழும் அன்பினள் அடிதொழ மாலை
போட முந்திட நெகிழும் புடைவையால் மனம்தடு மாறும்
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே....6

திருப்பனந்தாளில் தாடகை என்ற பெண் பூசிக்கும்போது மாலை அணிவிக்கவரும்போது
அவள் ஆடையும் நெகிழ, அவள் முழங்கைகளால் ஆடையை அழுத்திப்பற்றிக்கொள்ள,
இலிங்கத்திருமேனியைச்
சாய்த்து இறைவன் அம்மாலையை ஏற்றுக்கொண்டான். இந்நிகழ்ச்சியைச் சுட்டியது.

புடைவையும் நெகிழ்வுற - அவள் மனம் நெகிழ்ந்தது மட்டுமன்றி அவள் அணிந்த ஆடையும்
நெகிழ்ந்தது என்பதைப் புலப்படுத்தும் பிரயோகம்;

நெகிழ்தல் - குழைதல்; இளகுதல்; நழுவுதல் (To slip off, as a garment);

Tuesday, November 1, 2011

தாயுமானவனே!--2

துண்டு வெண்மதி கங்கை சூடிடும் செஞ்சடை அண்ணல்
செண்டு நாண்மலர்த் தொடையல் திகழுறு எழில்மிகு தோளன்
பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே....3

* கண்ணில்லாத தண்டியடிகள் திருவாரூரில் குளத்தில் திருப்பணி செய்வதற்கு
இடையூறு செய்த சமணர்கள் எல்லாரும் கண்ணிழந்து அஞ்சும்படியும்
தண்டியடிகளுக்குப் பார்வை கொடுத்தும் திருவருள் புரிந்த நிகழ்ச்சியைச்
சுட்டியது.
தண்டியார் - தண்டி அடிகள்; (அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; பிறவிக்குருடராக
இருந்தவர்);

உண்ட வன்தயை என்றே உருகியே துதித்திடும் பத்தி
மண்டும் அன்பரின் தமிழ்ப்பா மாலைகள் சூடிடும் ஐயன்
தண்டு வீசிட வாளாய்த் தந்தையின் தாளற வீழ்த்தும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே....4

சிவபூசைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமர்க்குச்
சண்டேசுர பதவி அருளியதைச் சுட்டியது.

Monday, October 31, 2011

தாயுமானவனே !--1

(அறுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)


முந்து வெவ்வினை இடரை மோதியே பொடிபடச் செய்வான்
சிந்தை இன்புற அடியர் செந்தமிழ்ப் பாடலை விழையும்
அந்தி வண்ணனின் அன்பன் ஆளுடை யார்க்குசெம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே...1

* திருவாவடுதுறையில் தந்தையாரின் வேள்விக்கெனச் சம்பந்தர் வேண்டி 'இடரினும்
தளரினும்' என்ற பதிகம் பாடி ஆயிரம்பொன் பெற்றதைச் சுட்டியது.

தேசன் வெவ்வினைத் துயரும் தீர்ந்திட மெய்யருள் புரிவான்
ஓசை தந்தநா யகியாள் உமையவள் பங்குடை யானின்
நேசர் தம்பசி தீர நிதம்படி பிள்ளையா ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா .னவனே....2


பஞ்சம் ஏற்பட்டபோது திருவீழிமிழலையில் அடியவர்கள் பசிதீர்க்கவேண்டி
அப்பருக்கும் சம்பந்தருக்கும் சிவன் படிக்காசு அளித்ததைச் சுட்டியது.

பிள்ளையார்= ஆளுடை பிள்ளையார்,சம்பந்தர்.

Thursday, October 27, 2011

திருமழபாடி

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"
-----------------------------------------------

வலைமீ தினிலே.. படுமீனாய்
...வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...1

துளிவான் நிலவோ..டலையாறும்
...சுருளார் சடைமேல்.. அணியாகி
வெளியே சிவனா.. டிடுமேடை
...விரையார் கழலோன்..நடமாகும்
தளியே அடியார்.. மனமாகும்
...தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன்
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....2

Wednesday, October 26, 2011

மனம் போன போக்கில்!--5

புகலற் கேலா வினைசெய் துன்பப் புயலுழல் வாய்மனமே
சகலத் திற்கும் காரண .னானத் தற்பரன் அருள்தருவான்
நகசத் தோலை உடையாய் அணிவான் நறுமலர் மாலைகள்சேர்
அகலத் தையன் அகலா திருப்பான் அகன்றிடும் ஆரிருளே...9

நகசம்=யானை.
அகலம்=மார்பு.

உருளும் சகட வாழ்வில் நிலைக்கும் உத்தி அறிமனமே
மருளில் ஆழ்த்தும் பொருளி லாத மலக்கினை நீக்குபவன்
சுருளும் சடையில் பிறையும் நதியும் சூடித் திகழ்பவனாம்
ஒருவன் அன்பின் உருவன் நாமம் ஓதில் அறுவினையே...10

Sunday, October 23, 2011

மனம் போன போக்கில்!--4

இருள ளித்து மருளில் சேர்க்கும் இழிவினை நீக்கியென்றும்
அருள ளிக்கும் பார்வை தன்னில் அபயம் தருமிறைவன்
பொருள ளிக்கும் வாழ்க்கை என்றால் பூரணன் போற்றியவன்
இரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே...7

கனைத்த ழைக்கும் கன்றைப் பரிவாய்க் காத்திடும் தாய்ப்பசுபோல்
நினைத்த ழைக்கும் அன்பர் தமக்கு நிமலன் அருளிருக்கும்
வனத்தில் அன்று பார்த்தன் தனக்கு வரமெனப் பாசுபதம்
தனைக்கொ டுத்த ஈச .னாரைச் சார வருசுகமே...8

Sunday, October 16, 2011

மனம் போன போக்கில் --3

எருதின் மீத மர்ந்தே ஈசன் எழிலாய் வலம்வருவான்
அருவ மாக இருவர் தேட அழலாய் அருள்பவனாம்
உருவ னாக அன்பர் உளத்தில் உறையும் பரசிவனாம்
பொருது வினையைப் போக்கும் அரனைப் போற்றி மகிழ்மனமே....5

இகழும் நிலையில் வைக்கும் வினைசெய் இடரது தீர்ந்திடவே
முகிழும் அன்பில் பத்தி மலர மூலனை எண் மனமே
நிகழும் யாவும் நலமே யாக நின்மலன் தாளிணையைத்
தகழி ஏற்றி மலர்கள் தூவிச் சாற்ற வரும்திருவே....6

Thursday, October 13, 2011

மனம் போன போக்கில்...2

நஞ்சை உண்ட நீல கண்டன் நம்பன் கழலிணையை
விஞ்சும் அன்பில் தஞ்சம் என்றே வேண்டின் உதவிடுவான்
கொஞ்சு செஞ்ச தங்கை பாதம் கொண்டோன் தண்ணருளால்
எஞ்சல் இன்றி வினைகள் ஓடி இன்பம் நிலைத்திடுமே....3

உலைசெய் துன்பம் கொள்ளாய் நெஞ்சே உய்வை வேண்டுதியேல்
சிலைஎய் வேளை கோபம் தோன்ற சிரித்து விழித்தவனாம்
மலையன், கானில் ஆடும் கூத்தன் மழுவாட் படையுடையான்
கலையொன் றேந்தி கழலி ணையைக் கருது தினந்தொறுமே....4

உலை=சஞ்சலம்,சிலை=வில்.

Tuesday, October 11, 2011

'மனம் போன போக்கில்'--1

(அறுசீர் விருத்தம்-4 மா +'மா-கருவிளங்காய்/விளம்-கூவிளங்காய்'-வாய்பாடு.
-------------------------------------------------------------------------
சுடரும் முக்கண் தெய்வ மான சுந்தரன் தம்மடியார்
படரும் அன்பில் பண்ணார் பாடல் பைந்தமிழ் ஆரமிட்டார்
இடையில் கச்சாய் பாம்பும் வெம்மா ஈருரி மேனிதனில்
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யலுண்டே....1

பெய்யும் மாரி யாக வந்தே பேரருள் செய்திடுவான்
தையல் பங்கன் தஞ்சம் வேண்டின் தன்னையே தந்திடுவான்
மெய்யி தென்றே மாய மலக்கில் வீழ்ந்திடு மாந்தரைப்போல்
தொய்ய வேண்டா முக்கட் செல்வன் துணையடி போற்றுநெஞ்சே....2

Sunday, October 9, 2011

என்பணிஅரன்துதி!-- 5

கொழுந்து வெற்றிலைக் கூட்டுடன் விருந்துணக் கோருவை என்னாவே
விழுந்து போம்படி வினையற அறிகிலை விளம்புநான் என்னாவேன்
விழுங்கு நஞ்சதும் விண்ணமு தாயயன் விட்டுணு தாம்தேட
எழுந்த சோதிஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....9

வெற்றிலைக்கூட்டு=சுண்ணாம்பு,பாக்கு,இத்யாதி.
விளம்பு=சொல்லு.

கூழை என்னவே குறைமலி மொழியினைக் கூறிடும் என்னாவே
பாழை யாய்மயல் படரற உரைத்திலை பகர்திநான் என்னாவேன்
மாழைப் பொன்னவன் மாசிலா மணியவன் மறையவன் என்றென்றும்
ஏழை பங்கினன் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....10

படர்=துன்பம்.,கூழை=புத்திக்குறைவு,
பாழை=மாயை,மயல்=மயக்கம்.

Saturday, October 8, 2011

என்பணி அரன்துதி!--4

பறப்பில் தேடுவை பணந்தனை பரிவினை பகர்கிலை என்னாவே
திறப்பி தென்னவே சிவனடி நினைந்திலை செப்புநான் என்னாவேன்
பிறப்பில் லாதவன் பிணிபவந் தொலைப்பவன் பெண்ணுமை பங்கேற்றான்
இறப்பில் லாதவெம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....7

பறப்பு=துரிதம்.
திறப்பு=திறவுகோல்.

வசையும் திட்டுமாய் வார்த்தையில் சுடுமொழி வழங்குவை என்னாவே
பசையென் றூழ்வினை பற்றறும் வழியிலை பகர்வைநான் என்னாவேன்
தசமென் றேசிரம் தாங்குமி லங்கைகோன் அழுதுமே கானம்செய்
இசையைக் கேட்டஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....8

Wednesday, October 5, 2011

என்பணிஅரன்துதி!--3

பண்ணி யச்சுவை பலவகை உண்டெனப் பகர்ந்திடும் என்னாவே
எண்ணி டாவினை இடரற அறிகிலை இசைத்திடு என்னாவேன்
வெண்ணி லாத்துளி மின்னொளிர் செஞ்சடை விமலனை அன்போடே
எண்ணில் நாமமும் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....5

பண்ணியம்=பலகாரம்,
இசை=உரை.

ஒன்று நன்றையும் ஓர்கிலை உய்வழி உரைத்திலை என்னாவே
தொன்று செய்வினை தொடரற மொழிகிலை சொல்லுநான் என்னாவேன்
அன்று தில்லையில் ஆடிய பாதமே அடியரின் பற்றாகும்
என்றும் உள்ளமெய் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....6

Monday, October 3, 2011

என்பணி அரன்துதி!--2

அடமும், பேதுடை அறிவிலாப் புன்மொழி அறைகுவை என்னாவே
தொடரும் வல்வினை தொலைவழி அறிகிலை சொல்லுநான் என்னாவேன்
விடமும் உண்ணுவான் விண்ணவர் துணையவன் வெண்ணிறப் போரேறாம்
இடபம் ஏறிறை ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....3


அடம்=பிடிவாதம்
பேது=துன்பம்.

கடுக டுப்பொடு கருணையில் லாவசை கழறிடும் என்னாவே
கொடுவி னைத்துயர் குறையவொன் றுரைத்திலை கூறுநான் என்னாவேன்
சுடுமி ருட்கடம் சூழெரி நடசிவன் தொடர்முடைக் கையேந்தி
இடுப லிக்கலை இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....4

கடம்=காடு.

Wednesday, September 28, 2011

என்பணிஅரன்துதி!--1

என்பணிஅரன்துதி
---------------------------
'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' - அறுசீர் விருத்தம்;
மாச்சீர் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்;
(1-3-5 சீர்களில் மோனை)

கொய்த நாண்மலர் கோத்தெழில் மாலைகள் குலவியே தோள்சேரும்
பைதல் வெண்பிறை பாயலை கங்கையைப் பாந்தமாய் சடையேற்பான்
வெய்தி டர்தரு வினைச்சுழல் மீட்பவன் விண்திரி புரமூன்றை
எய்தெ ரித்திடும் இறைத்துதி என்பணி இனியிலை இன்னாவே....1

பைதல்=இளைய
குலவுதல்=விளங்குதல்.

கரவு நெஞ்சமாய் கணந்தொறும் பொய்யினைக் கழறிடும் என்னாவே
பரவு வெவ்வினை படுவழி அறிகிலை பறைதிநான் என்னாவேன்
உரவு நீர்சடை உற்றவன் ஓங்குதீ ஒளியவன் எரிகானில்
இரவு செய்நடம் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே!....2

உரவுநீர்=ஆறு என்னும் பொருளில்.

Saturday, September 24, 2011

புள்ளிருக்குவேளூர்--௫ (வைத்தீஸ்வரன்கோவில்)

சோதித் தருளும் அண்ணலவன்
...துணையாய் காக்கும் சுற்றமவன்
பாதித் தன்மெய் யுமையோடும்
...பால்தந் துசிசுப் பசிதீர்ப்பான்
ஓதித் துதிசெய் வேதமறை
...உணர்த்தும் பொருளை ஆலமர்ந்தே
போதித் திருப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....9

வீசு தென்றல் வெய்யிலினில்
...வெகுவாய் சுகமே தருதல்போல்
பேசும் அவன்பேர் வினைநீக்கிப்
...பேறாய் இன்பம் தந்திடுமே
மூசு வண்டார் மலர்சூடும்
...முதல்வன் மூலன் மணசாந்தம்
பூசும் மார்பன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....10

Thursday, September 22, 2011

புள்ளி ருக்கு வேளூர்--௪ (வைத்தீஸ்வரன்கோவில்)

ஏற்றும் சிறுவன் உயிர்காக்க
...இரக்கம் மிகவும் கொண்டவனாய்க்
கூற்றும் மாள உதைசெய்யும்
...கோபம் கொண்ட கூத்தனவன்
சாற்றும் வேதப் பொருளாவன்
...தஞ்ச மென்றே அடியார்கள்
போற்றும் பெருமான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....7

"தொன்மை தொடராய்த் துன்பதுவாய்ச்
...சூழும் வினைகள் தீர்ந்திடவே
நின்மெய் யருளைத் தந்திடுவாய்!
...நிமலா வேண்டித் தொழுகின்றேன்!
என்மெய் யுடைமை நீயன்றோ!"
...என்றே தஞ்ச மடைவாரின்
புன்மை தீர்ப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....8

Tuesday, September 20, 2011

புள்ளிருக்கு வேளூர்--3(வைத்தீஸ்வரன் கோயில்)

நோவாய் வினைசெய் துன்பகலும்
...நுவலும் அஞ்சக் கரத்தாலே
நாவா யாகக் கரைசேர்க்கும்
...நம்பன் மலர்தாள் பற்றிடவே
பாவாய்ப் பண்ணாய் அடியார்கள்
...பரவும் கருணை வாரிதியாம்
பூவார் சடையன் அமர்கோவில்
... புள்ளி ருக்கு வேளூரே....5

சீத வெள்ளிப் பனியிமயச்
...செல்வன் வேண்டும் அன்பருக்கே
பாத மலரைத் தந்தருளும்
...பரமன் தயையின் வடிவாகி
ஏத மிகுவெவ் வினைத்துன்பாம்
...இன்னல் தீர்க்கும் மருந்துமவன்
பூதப் படையான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....6

Wednesday, September 14, 2011

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)--2

நாக்கும் உரைக்கும் நாமசுவை
...ந்விலுந் தோறும் இனிதாகும்
தூக்கும் மலர்தாள் தொழுமன்பர்
...துணையாம் நீல மணிகண்டன்
ஆக்கும் அளிக்கும் அழிசெய்தே
...அருளு மீசன் அமர்கோவில்
பூக்கும் நந்த வனம்சூழும்
...புள்ளி ருக்கு வேளூரே....3

தேரே றியருள் செய்யுமரன்
...சீரேர் விழவில் உலாவருவான்
தூரே மலியும் உள்ளந்தனை
...தூய்மை யாக்கும் தாளிணையை
ஓரே .னெனையும் காத்திடுவான்
...உமையின் பங்கன் செஞ்சடையன்
போரே றேறி அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....4

Monday, September 12, 2011

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு.

நீர்க்கண் குமிழாம் வாழ்வுதனில்
...நிமலன் மலர்தாள் நற்றுணையாம்
தீர்க்கும் வினைசெய் துன்பினையே
...சிறந்த மருந்தென் றாகிடுவான்
பார்க்குள் கருணை வாரிதியாம்
...பரமன் வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....1

நோக்கும் பார்வை அருளாகி
...நோய்செய் வினையைத் தீர்த்திடுமே
தீக்குள் வெம்மை ஆகிடுவான்
...தீயின் ஒளியாய் ஒளிர்கின்றான்
காக்கும் ஐயன் தாளிணையைக்
...கருதும் அடியார் துன்பினையே
போக்கும் பரமன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே.. ..2

Saturday, September 3, 2011

திருவிற் கோலமே--2

அகழ்ந்தரி கண்டிடா அடிஎண் நெஞ்சமே
நிகழ்பவை யாவுமே நிமலன் செய்கையே
முகிழ்விரி கொன்றைவெண் முல்லை கண்ணியாய்
திகழ்முடி யானுறை திருவிற் கோலமே....6

அஞ்சிட வந்திடர் அளிக்கும் வெவ்வினை
பஞ்செரி தீயெனப் படவும் செய்குவன்
தஞ்சமென் றண்டிடு தாளை நெஞ்சமே!
 செஞ்சடை யானுறை திருவிற் கோலமே....7

கூர்த்தநன் நடசிவன் குறிஎன் நெஞ்சமே
போர்த்தவெம் புலியதள் பொலியும் எம்பிரான்
ஆர்த்தவெவ் வினையினால் அன்பர் கொள்துயர்
தீர்த்தவன் தானுறை திருவிற் கோலமே....8

கூர்த்தநடம்= நடனக்கலையின் நுட்பங்கள் அமைந்தநடனம்.

பாவடி வானவன் பற்றுக் கோடவன் 
பூவடி தன்னையே பூணென் நெஞ்சமே
தாவடி அரிஅயன் சாற்றும் ஓங்குயர்
தீவடி வானவன் திருவிற் கோலமே....9

மெய்திகழ் வெண்பொடி மேவு மெம்பிரான்
மொய்கழல் பற்றிட முன்னு நெஞ்சமே
பெய்கிற மாரியாய்ப் பேர ருள்தனை
செய்பெரு மானுறை திருவிற் கோலமே.....10

Saturday, August 27, 2011

திருவிற்கோலம் (இக்கால ஊர்ப்பெயர் - 'கூவம்')

திருவிற்கோலம் (கூவம்) கோயில் விவரங்களுக்கு இங்கே காண்க:
http://temple.dinamalar.com/New.php?id=124

கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு.
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று
வாரா);

அம்பல மாடிடும் ஆடல் வல்லஎம்
சம்புவின் தாள்மலர் சாற்று நெஞ்சமே!
கும்பிடும் அன்பரின் குறைகள் தீர்த்திடும்
செம்பெரு மானுறைத் திருவிற் கோலமே....1

ஆர்கலி யாம்பவம் அடையல் நெஞ்சமே!
கார்முகில் என்னவே காக்கும் எம்பிரான்
ஏர்சிலை தோளினில் இலகும் வான்பிறை
சேர்சடை யானுறை திருவிற் கோலமே....2

ஆர்கலி =கடல்
சிலை=வில்.

ஆதியாய்ப் பாதியை ஆக மேற்றவன்
ஓதிடா மோனியை உன்னு நெஞ்சமே!
சோதியாய் ஓங்கியே தோற்றும் அம்பரன்
தீதிலா தானுறை திருவிற் கோலமே.

அம்பரன்=ஆகாயமாயிருப்பவன்....3

கவலையி லாழ்த்திடு கன்மத் தாலுறும்
அவதியும் அற்றிட அடைஎன் நெஞ்சமே
தவனமும் கொன்றையும் சடையில் சூடுமெம்
சிவபெரு மானுறை திருவிற் கோலமே....4

உரித்தவெம் மாஉரி உடுத்தி வெண்பொடி
தரித்தவன் தண்ணளி தனைஎண் நெஞ்சமே!
எரித்தவன் வேளினை எரியும் சினமிகச்
சிரித்தவன் தானுறை திருவிற் கோலமே....5

Saturday, August 20, 2011

இராமேச்சுரம் (இராமேஸ்வரம்)--- 2

உளிசேர் ஒலியாகி உளத்துள் வளரும்கற்
றளியே குடிலாகத் தங்கும் அருளாளன்
துளிவான் பிறைசூடும் துய்யன் அடியார்க்கே
எளியான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....6

தொடரும் வினைதீர்க்கத் துணையாய் வருமீசன்
விடமும் அமுதாக விழுங்கும் கறைக்கண்டன்
சுடரும் ஒளியாவன் தூயன் விழவூரும்
இடபன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....7

கருப்பா லொருபூவில் கணையை யெறிவேளை
நெருப்பா யெரிசெய்யும் நெற்றி விழியோனும்
திருப்பா விசையாகச் செய்யும் துதிமாந்தி
இருப்பான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....8

கருப்பு=கரும்பு (வலித்தல் விகாரம்)

தொடுத்தான் புரமூன்றும் சுடுதீ அழலாக
விடுத்தான் வரையொன்றை வில்லாய்க் கணையோடு
மடுத்தான் இசைப்பாடல் மலர்தாள் நடமாட
எடுத்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....9

சிந்தை நிறைகின்ற சீரார் திருநாமம்
விந்தை நடம்செய்யும் விமலன் அடியாரின்
முந்தை வினைமாய்க்கும் முக்கண் நுதல்கொண்ட
எந்தை அமர்கோவில் இராமேச் சுரம்தானே....10

Tuesday, August 16, 2011

இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

('மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)

சிம்மா தனமின்றி சிந்தை மகிழ்வாக
வெம்மா வனமேகும் மெய்யன் இராமன் தான்
அம்மா வினைதீர ஆர வழிபட்ட
எம்மான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....1

'மெய்சேர் பொடிபூசும் வேதன் அடிபோற்றும்
வெய்தாய் இராமன் தன் மிஞ்சும் வினைதீரச்
செய்தான் புரமூன்றும் தீயா கிடஅம்பொன்
றெய்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....2

வேசம் பலவேற்று விந்தை விளையாடல்
நேச முடன்செய்த நிமலன் அருளென்னே
பேச இனிக்கின்ற அஞ்சக் கரத்தானாம்
ஈசன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....3

சாந்து மணமேவும் தண்ணார் தமிழ்வேதம்
மாந்தி மகிழ்வாகும் மதியன் உமைபங்கன்
காந்தி ஒளிர்கின்ற கண்கள் அருள்தன்னை
ஏந்தி அமர்கோவில் இராமேச் சுரம்தானே....4

சாந்து=சந்தனம்.

கூற்றை உதைசெய்யும் கூத்தன் திருஞானப்
பேற்றை அருளாகப் பெய்யும் நிதியாகி
மாற்று நிறைபைம்பொன் மணியா யொளிர்கின்ற
ஏற்றன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....5

Monday, August 15, 2011

பாரதத் தாயே வணக்கம்!

அருமையான சுதந்திரத்தை அடைந்தவிதம் சொலப்போமோ?
ஒருமனதாய் இளைஞர்தம் ஊனுணர்வில் சுதந்திரமே
வருநாளின் நிச்சயமாம்,மாண்புதரும் விடுதலையே
கருமமென வேள்விதனில் தமையிழந்தார்!புகழ்பெற்றார்!

சிதைந்திடுதல் எண்ணாது செயலொன்றே குறியாக்கி
சுதந்திரமே மூச்செனவும் சொத்தெனவும் கொள்வதொன்றே
இதந்தருமாம்;கவிமொழியில் எடுத்துரைத்த பாரதியின்
பதந்தன்னைத் தொழுதுயர்த்திப் பாரேற்றப் புகழ்ந்திடுவோம்!

நூதனமாம் சாத்திரங்கள் நுவலுகின்ற நுட்பங்கள்
சாதனையாய் பெண்கல்வி சாதிக்கும் என்றுரைத்த
நீதிமன்னன் பாரதியின் நெஞ்சுநிறை வாக்குண்மை!
பேதமின்றி ஆண்பெண்ணும் பெற்றயிரு கண்ணன்றோ?

பாரதத்தாய் விலங்கவிழ்க்க பாரதிவான் முரசறைந்தான்!
வீரமிகு கவிமுழக்கி விடுதலைபெற் றோமென்றான்!
வேரதனில் நீரெனவும் வெல்லுகவி வண்மையினால்
நேரெதிரே சாவினையே நெஞ்சணைத்த வீரருண்டு!

சிறுமியென ஊர்வலத்தில் சென்றமுதல் சுதந்திரநாள்
உறுகின்ற உணர்வதனில் உத்வேகம் உண்டாச்சு!
பொறுப்புடைய அகிம்சையெனும் பொற்புடைய காந்திஜியால்
பெறுமிந்த சுதந்திரத்தில் பெருமிதமாய் நாடுயரும்!

துறவியரும் தியாகிகளும் தோன்றுமுயர் பாரதமாம்!
குறைவில்லா அறிவுவளம் குவிந்துள்ள நாடிதுவாம்!

மண்ணுள்ள நாள்மட்டும் மறவாமல் தீரர்புகழ்
பண்ணதனில் கவிதைதனில் வருமக்கள் உணரச்செய்வோம்!
கண்பனிக்க வந்தித்து கையுயர்த்தி வணங்கிடுவோம்!
விண்ணவரும் பூச்சொறிந்து வீரரையே வாழ்த்துவரே!

(சந்தவசந்தக் குழுவில் சுதந்திரதினம்(2007 வருடம்)நான் எழுதிய பாடல்.)


Monday, August 8, 2011

வானம் கூப்பிடு தூரமே!-- 2

வீணா யுழன்றிட வெருதா கின்றதோ
...வேண்டும் பிறவியில் நெஞ்சமே
காணா உருவிலி காட்சி யாகவே
...காணும் உருவினன் காப்பவன்
பூணாய் எருத்தினில் பொலிவார் பாம்பினை
...பூணும் எந்தையின் பேருரை
வாணா ளதன்பய .னெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....6

நிலையாய் உறுதுணை நிமலன் தாளிணை
...நிதமும் தொழுதிடு நெஞ்சமே
கலைசேர் நிலவுடன் கங்கை சூடிடும்
...கருணைக் கடலருள் செய்பவன்
அலைமேல் எழுவிடம் அமுதாய் உண்டவன்
...அணிசேர் அஞ்செழுத் துரையதே
வலையாய் சூழ்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....7

கொட்டும் முழவொலி குமுறும் பம்பையின்
...கூடும் ஒலியினில் ஆடுவான்
சுட்ட நீறணி சோதி மேனியன்
...துணையென் றிருந்திடு நெஞ்சமே
மட்டுவார் குழல் மங்கை பங்கினன்
...வணங்கி அஞ்செழுத் துரையதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....8

குமுறுதல்= அதிர்வொலிசெய்தல்.

சுற்றாய்ச் சுழல்கிற சுமைசேர் வாழ்விதில்
...சுகமே அவனருள் நெஞ்சமே
செற்றான் முப்புரம் தீயில் வெந்திடத்
...தேவர் தொழுதிடும் நம்பனே
சற்றா யினுமவன் தாளை எண்ணியே
...சாற்றும் அஞ்செழுத் தாமதே
வற்றா பவம்தடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....9

கண்டம் கறைபட கடலின் நஞ்சுணும்
...கருணை போற்றிடு நெஞ்சமே
தொண்டர் தம்பிரான் தூய அன்பினில்
...தோன்றாத் துணையெனக் காப்பவன்
துண்டு பிறையினை சூடும் எம்பிரான்
...துய்ய அஞ்செழுத் தோததே
மண்டு வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....10

Saturday, August 6, 2011

வானம் கூப்பிடு தூரமே!

"மா விளம் மா விளம் மா விளம் விளம்"
என்ற வாய்பாடு - எழுசீர் விருத்தம்.

கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே
ஒலிசெய் பம்பையும் துடிக்கும் தாளமாய்
...உவந்து நடமிடுக் கூத்தனும்
புலியின் தோலினைப் புனைவான் சீரினைப்
...புகழ்ந்துப் பாடியுய் யலாமதே
மலியும் வினைதடுத் தெமைகாக் குங்குடை
...வானம் கூப்பிடு தூரமே....1

மாட்டும் தூண்டிலில் மடியும் மீனெனெ
...மயலில் உழல்கிற நெஞ்சமே
கூட்டும் பத்தியில் கூடும் அடியரின்
...குழுவில் இருந்திடல் பெற்றியே
பாட்டில் ஒளிர்கிற பரமன் பேரினைப்
...பரவி மகிழ்வுற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைகாக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....2

ஊணில் உயிரினில் ஊனில் நிற்பவன்
...ஓங்கும் அழலென ஆனவன்
ஆணிப் பொன்னவன் ஆடல் வல்லவன்
...ஆர்க்கும் மறைபுகழ்ப் பாதனே
வீணில் பிறப்பிதில் மெய்யன் பேர்சொல
...மேவும் சுகம்பெற லாமதே
வாணி கர்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....3

வாள் நிகர்=வாணிகர்
ஆர்க்கும்=ஒலிக்கும்.

நிருத்தம் பயில்பதம் நினைந்து போற்றியே
...நெகிழும் அடியரும் பாடிடும்
எருத்தம் கறையுடை இறைவன் தண்ணருள்
...ஈடில் பேற்றினைத் தந்திடும்
உருத்தி ராக்கமும் ஒளிர்வெண் நீறணி
...உமையின் பங்கனின் பேரதே
மருத்தென் றெமை வினைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....4

மருத்து= மருந்து(வலித்தல் விகாரம்)
எருத்தம்= கழுத்து.

அஞ்ச வருகிற ஆறு வெம்பகை
...அலைக்கத் துயருறு நெஞ்சமே
மஞ்சு சேர்மலை மன்னன் எம்பிரான்
...வரம்தந் தடியரைக் காப்பவன்
தஞ்ச மளிமலர் தாளன் பேரினைச்
...சாற்றி உரைத்திட லாமதே
வஞ்ச வினைவிடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....5

Sunday, July 31, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 5

மழவிடை ஏறி வலம்வரு வாயே
...மறைதொழு தேத்திடும் ஈசா
முழவுடன் துடியின் முந்துறு ஒலியில்
...முடிவிலி யுன்நடம் பேறே
கழலினை அணைத்துக் கதறிடு வோனைக்
...காத்தருள் செய்தவன் நீயே
பழமலி சுவைதேர் பைங்கிளி பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே!....9


சின்மய உருவில் திகழ்குரு வானாய்
...தெளிவுறு சிந்தையை தாராய்
பொன்மன அடியார் பொழிதமிழ்ப் பாடல்
...புகழ்ந்திடும் உனதருள் திறமே
நன்மையில் இருப்பாய் நலமிகச் செய்வாய்
...நதிமதி சூடிடும் தேவே
பன்மலர்த் தேனுண் பூவளி பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....10

Friday, July 29, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 4

திரணமிவ் வாழ்வில் தெளிமதி தந்தே
...திகழுறச் செய்தருள் ஈசா
சரணென உன்றன் தாளிணை வீழும்
...தமியனைக் காத்திட வேண்டும்
கிரணமென் றொளிசேர் கீர்த்தியில் நிற்பாய்
...கெடுவினை யொழியவும் அருளாய்
பரவிய பொன்னி பாய்கிற பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....7

அரிஅயன் தேடும் அடிமுடி காணா
...அழலுரு வாய்நெடி துயர்ந்தாய்
வரியதள் உடையாய் மான்மழு தீயும்
...மகிழ்வுடன் கரமதில் கொண்டாய்
வரிசையில் துயர்செய் வருவினை தாங்கும்
...மனதையும் தந்தருள் செய்வாய்
பரிமளக் கொடிப்பூ படர்ந்திடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....8

Thursday, July 28, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 3

சுடர்கிற விடியல் சுதியொலி பாடல்
...சொலுமுன தருளதன் திறமே
தொடர்கிற அன்பில் துணையெனக் கொண்டேன்
...துன்பினில் ஆதரம் தருவாய்
குடர்படு கருக்கொள் கொடிதெனும் பவமே
...குலைவினை அடைவழி அருளாய்
படர்கிற மருதம் கமழ்வுறு பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....5

விண்ணிழி கங்கை வெண்மதி சூடி
...வெண்பொடி மெய்யணி ஈசா
கண்ணிய துன்றன் கருணையை யன்றோ
...கயல்விழி பங்குடை யோனே
எண்ணிய எய்தல் இறையரு ளாலே
...எனைஇடர் செய்வினைத் தீராய்
பண்ணிய வண்டும் பாடிடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே.


கண்ணியது=கருதியது
பண்ணிய=சுதிலய

Wednesday, July 27, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 2

சொலவரு மின்பம் சுவைமிகு நாமம்
...துதிசெயு மடியரின் தேவே
அலமரு வேனென் அடைக்கல மாகி
...அருள்கிற துணையென வாராய்
நிலவணி சடையில் நிர்மல கங்கை
...நிலவிடு மெழிலினில் ஒளிர்வாய்
பலநிற மலரின் மணமிகு பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....3

நசிவறு மேன்மை நலமிகக் காட்டி
...நலிவுறு எளியரைக் காப்பாய்
பசியினில் ஊணாய் பரிவினில் தாயாய்ப்
...பரவிடும் அன்பதும் நீயே
மசியிருள் மாய மலக்கினில் வீழா
...வழியினைக் காணவும் அருள்வாய்
பசியநல் இலைசேர் மணமலர் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....4

Monday, July 25, 2011

பராய்த்துறை மேவிய பரனே!--1

எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு

மறலியை அன்று சினமிக எற்றி
...வழிபடும் சிறுவனைக் காத்தாய்
பிறவிசெய் நோயால் பிணியுறு வேனைப்
...பெருகுமுன் கருணையில் காப்பாய்
கறவையின் அன்பில் களித்திடும் கன்றாய்க்
...கண்ணுதல் உனருளில் உய்வேன்
பறவைகள் நாடிப் பைம்பொழில் கூடும்
...பராய்த்துறை மேவிய பரனே....1

சகடென உருளும் சகமுறு வாழ்வில்
...தளைவினை விடவருள் எந்தாய்
சகலமும் உன்றன் சரணிணை என்றே
...தண்மலர் தூவினேன் காப்பாய்
பகடதில் ஊரும் பரமனுன் நாமம்
...பரவிடும் பேறினைத் தாராய்
பகலவன் ஒளியில் பூமலர் தடம்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....2

Thursday, July 21, 2011

அன்னை அருள்!

பொன்னை நிலையெனப் போற்றும் அறிவிலாப் பூரியரும்
புன்னை மலர்கொடு பூசை செயவருள் பூத்திடவும்
தன்னை நினைந்திரு தாளைத் தொழுபவர் தம்துணையாய்
முன்னை வினைதனை முற்றும் அழியவும் முன்னுகந்தே
மின்னை நிகர்த்தவள் மிஞ்சும் தயைபுரி மீன்விழியாள்
அன்னை விழிமலர் அஞ்சல் அருளுவள் அன்பருக்கே.

Tuesday, July 19, 2011

சிவனருள் நினை!

தஞ்சம டைந்தவன் தண்ணருள் வேண்டிநி னைந்திடில்
...தளை பவ வினை உளை செயுமிடர் அகலும்,
பிஞ்சிள வெண்மதி செஞ்சடை அந்திய தன்வணன்
... பிடி உமை இட மணி களிறென வருவான்
கொஞ்சுச தங்கையின் இன்னொலி தண்முழ வொன்றிட
...குதி நதி குளிர் செய சிரசணி எழிலில்
அஞ்சல ருள்செயும் அன்பொடு வெண்பொடி மெய்யினில்
...அணி பணி திகழ் தர நடம்புரி சிவனே.

(1--௬ சீர்கள் மோனை.)

Monday, July 4, 2011

சிவன்கழல் தொழுவாய்!

முந்திடு வெவ்வினை தந்திடு துன்பம தன்றெனும்
...முடி பிறை கறை மிட றுடைமுழு.. முதலே
பந்தமும் பாசமும் மிக்குத ளைத்துவி லங்கிடும்
...படர் இடர் தொடர் நிலை யறுகென..உனைநான்
சிந்தையில் சந்ததம் அஞ்செழுத் தோதியு ணர்கையில்
...சித றிடும் பவ மெனு சிறுமையும்..தொலையும்
அந்தமில் ஆதியும் பாதியும் ஆனவொர் மெய்யனாம்
...அரி அயன் அவர் தொழும் அழலொளி..சிவனே....1

பூத்திடும் கொன்றையம் பொன்மலர் இன்எழில் மார்பிடை
...புனை சரம் புரள் கவின் திகழுற நிறைவாய்
தோத்திர மாகிய சொற்றமிழ் மாமறை வேட்பவன்
...துடி யடி யொலி நட மிடுமரன் அவனே
பாத்திர மாயவன் பத்தியில் கூடிடும் அன்பினில்
...பரன் அரன் பதம் சரண் புகலென அடைவார்;
சூத்திர தாரியின் சொற்படி ஆடிடும் பொம்மைநம்
...சுழல் பழி அழி வழி செயுநம திறையே!....2

Wednesday, June 22, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

கற்றைசடை நெற்றிவிழி பெற்றதொரு தேவை
பற்றிவிடும் பத்தியினில் இற்றுவிழும் தீமை
குற்றமலி வெற்றுரையைத் துச்சமெனத் தள்ளு
உற்றதுணை யாவர்திரு ஒற்றியுறை கோனே....6

பொத்தியபைங் கூம்பவிழும் பூமலர்கள் தூவி
நித்தியம்செய் பூசனையில் நிர்மலனாய் நிற்பான்
சத்தமிடு செஞ்சதங்கை தந்த இசைக்(கு) ஆடும்
உத்தமநி ருத்தனவன் ஒற்றியுறை கோனே....7

துப்புமவன் உய்ப்பதற்கு வைப்புமவன் என்றே
செப்பரிய முக்கணனை சொற்பதிக மேத்தும்
முப்புரமும் வெப்பெரிசெய் அப்பனவன் ஏதும்
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே....8

வெப்பு=வெப்பம்.

கண்ணுதிரம் பொங்கவவன் கண்ணினையே அப்பி
எண்ணரிய மேன்மைகொளும் திண்ணனவன் தெய்வம்
விண்ணவரின் நற்றுணைவன் வேதனவன் நஞ்சை
உண்டருளும் அண்டனவன் ஒற்றியுறை கோனே....9

கல்லைமலர் ஆகவணி கண்ணுதலை வேண்டி
'எல்லையென ஏதுமிலா இன்னருளே!காவாய்!
தொல்லைவினை தீர்த்திடுக!'என்றவனைக் கெஞ்ச
ஒல்லைவினை தீர்த்தருளும் ஒற்றியுறை கோனே....10.

Sunday, June 19, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

தானதன தானதன தானதன தானா" என்ற சந்தத்தில்


கண்டமணி நஞ்சுதிகழ் கண்ணுதலை வேண்டி
செண்டுமலர் சூட்டியவன் சேவடியைப் போற்றும்
தொண்டருளளக் கோவிலுறை தூயஒளி யானான்
ஒண்டமிழ்கள் கொண்டுதொழும் ஒற்றிநகர் ஆமே...1

வேதமென தீம்பதிகம் மெய்யடியர் ஓத
நாதமொடு பூங்கழல்கள் நர்த்தனங்கள் ஆட
கோதறுவெண் கூன்பிறையில் கோலமுறு சீலன்
ஓதமலி கின்றதிரு ஒற்றியுறை கோனே...2

தாழியுள என்பினையும் தந்தருளும் பெண்ணாய்
காழியுறை ஆளுடயார் கண்டுகொண்ட தெய்வம்
சூழிடரும் அகலவருள் தோன்றவரும் ஐயன்
ஊழிமுதல் ஆடுமிறை ஒற்றியுறை கோனே....3

முன்னவனும் பின்னவனும் மூலமுதல வன் தான்
இன்னமுத மென்னநஞ்சை ஏந்தியுண்ட வள்ளல்
என்னதுயர் நொந்துறினும் இன்னருளில் உய்ப்பான்
உன்னுமடி யார்க்கருளும் ஒற்றியுறை கோனே....4

சூதுறையும் தீமையழி தூயமலர்த் தாளை
யாதுமவன் என்றடையின் அன்பருளம் ஆள்வான்
போதுமலர் பைம்பொழிலில் பூமதுவை நாடி
ஊதுகிற வண்டுமிகும் ஒற்றியுறை கோனே....5

Thursday, June 16, 2011

கழுமலம் அடைநெஞ்சே (சீர்காழி)

தினமரன் புகழ்பாடி திருவருள் தனைநாடி
மனமொழி செயல்மேவி வழிபட அடைநெஞ்சே
சினமுறு நகையாலே திரிபுரம் எரிசெய்தான்
கனவிடை உடையானூர் கழுமல நகர்தானே....6

எனதென உளவென்றும் இறையவன் அருளொன்றே
தினமொரு முறையாகில் சிவனைஎண் வினைதீரும்
மனதவன் வசமாகும் வழிபெற அடைநெஞ்சே
கனலுமிழ் விழியானூர் கழுமல நகர்தானே....7

புதிர்தனில் விடைதேடும் புரிதலில் புவிவாழ்வில்
எதிர்வரு வினைசெய்யும் இடர்கெட அடைநெஞ்சே
சதிர்தனில் உலகுய்யத் தனிநடம் புரிகின்ற
கதிர்மதி அணிவானூர் கழுமல நகர்தானே...8

தொலைதரு வினைமாய்ந்துத் துகளென அருள்வானின்
சொலமிக சுவைநாமம் துணையென அடைநெஞ்சே
பலவகை மலர்சூடும் பணியினை இடைமீதில்
கலைதரி பெருமானூர் கழுமல நர்தானே....9

தொல்லை=தொலை இடைக்குறை.

இணர்மலர் மதிசூடும் எழில்சுடர் சடையோனை
தணலுறு எரிகானில் தனிநடம் புரிவானை
துணையென இமையோரின் துயர்கெட மதில்மூன்றை
கணைகொடு சுடுவானூர் கழுமல நகர்தானே....10

Saturday, May 28, 2011

கழுமலம் அடை நெஞ்சே (சீர்காழி)

விளம் புளிமாங்காய் விளம் புளிமாங்காய் - என்ற வாய்பாடு.

மிடிசெயு பவமென்னும் வினைதரும் தளைநீங்கி
விடுபடு நிலைவேண்டில் விழைவொடு அடைநெஞ்சே
கொடிமண மலரோடு குவிமுகை அவிழ்கொன்றை
கடிமலர் பொழில்சூழும் கழுமல நகர்தானே...1.

உயவினை அளிஊழில் உழல்கிற நிலைதீர
நயமுறு நெறிவேண்டி நலம்பெற அடைநெஞ்சே
இயமனை உதைசெய்தே இணையடி தருவானின்
கயலுகள் வயல்சூழும் கழுமல நகர்தானே...2.

உயவு= வருத்தம்.

செவியணி குழையாடச் சிவநட மிடுகோலம்
குவிகரம் சிரம்கொண்டு குரைகழல் நினையன்பர்
புவிபுகழ் தமிழ்பாடப் புகல்தரும் பதியான
கவினுறு பொழில்சூழும் கழுமல நகர்தானே...3.

கிலிதரும் மரணம்தான் கெடுவென வரும்போது
நலிவினை அடையாமல் நலம்பெற அடைநெஞ்சே
புலியதள் உடையானின் புகலடி நினைவாரின்
கலிமலி விழவாரும் கழுமல நகர்தானே...4.

கெடு=தவணை.

சிறையெனு இகவாழ்வில் தெளிவினைப் பெறவேண்டில்
நிறைவினை அளிநாமம் நிலைபெற அடைநெஞ்சே
நறையுறு மலர்சூடும் நவமெனு மணிநீலக்
கறைமிட றுடையானூர் கழுமல நகர்தானே...5.

Saturday, May 21, 2011

திருஞானசம்பந்தர் துதி!

திருமடம் தீயரால் தீப்பட நற்பா
அருளி அழலை அணைத்தப் --பெருகும்
தகவதனைப் போற்றிச் சழக்கரை வென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...6.

கலயம் கொளுநீறை கன்னியாய் மீட்டத்
தலமுறு நற்பதிகம் தந்த -- நலத்தர்
நிகரிலியாய் கூத்திடும் நிர்மலன் அன்பர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...7.

யுகமும் கணமும் உருளச் சுழன்றே
இகத்தை இனிதாய் இயக்கி -- உகப்பான்
சிகையில் மதிசேர் சிவனருட் செல்வன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...8.

அருட்கவி அப்பருடன் அன்றுதமிழ் பாடி
திருத்தாழ் திறந்தடைத்த செல்வர்-- விருப்பில்
புகையெரிகான் ஆடிடும் புண்ணியன் மைந்தன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...9.

சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...10.

Monday, May 16, 2011

திருஞானசம்பந்தர் துதி!

அம்மே எனவழுது அன்றுண்டார் ஞானப்பால்
பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
புகழினையேத் தேவாரப் புத்தமுதாய்த் தந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்...1

பொங்கலை வானதிப் பூண்ட சடையனைத்
தங்கரங் கொட்டியே சாற்றுகையில்--எங்கும்
புகழொலிக்க ஈசனிடம் பொற்றாளம் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...2

அல்லும் பகலும் அரனின் நினைவினில்
வெல்லும் எமபயம் மெய்யென்ற-- நல்லன்
சகமிதன்சீர் மேவிடு சம்பந்தன் மாணி
புகலியர்கோன் பொற்றாள் புகல்...3

மழவன் மகள்நோய்தீர் வாடாப் பதிகம்
அழகாய் அருளிய அன்பர்-- குழகன்
உகந்தளிசீர் பல்லக்கில் ஊரும் இளையோன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...4

நாள்களும் கோள்களும் நல்லன எம்மானின்
தாள்தொழும் அன்பர்க்கே சாலுமென்றார்-- வேளை
மிகவிழித்துத் தீப்படச் செய்தான் அடியர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...5

Friday, May 13, 2011

வண்ணப் பாடல்!

கன்றி ,.னாவென நாடி யருளுவை
...கொன்றை சேர்சடை ஈச உனதடி
...என்று மேமற வாத நிலைதனை.. அருளாயோ
ஒன்ற தாகிய மூல முதலுனை
...என்ற .னாதரம் ஆய அருளென
...உன்ற .னாடிய பாத முளமுற.. மகிழேனோ!
தொன்று சேர்வினை யாவு மழியவை
...துன்ப மேபவ வாரி வடியவை
...துன்றி நேயம தூறு முனதிரு .. வருள்தாராய்
நின்றி டாதயை நாடு மடியரின்
...நெஞ்ச மேவிய கோவி லுறைதிரு
...நின்ற ஊரினை ஆளு மறையறை.. பெருமானே!

Friday, May 6, 2011

நாடகனுக்குத்தோடகம்!

விதியோ வினையோ வெருவா திருநீ
நிதியா யருளே நிமலன் தருவான்
சதிராய் நடமே தகவாய்ப் புரியும்
கதிதாள் துதியில் கரைவாய் மனமே...6

மருவில் மதியன் மணிசேர் மிடறன்
பொருதீ வினையை பொடிசெய் திடுவான்
தருஆல் நிழலில் தவமே புரியும்
குருதா ளினையே குறிநீ மனமே...7

பொறியில் படுமைம் புலனும் அடையும்
வறிதாம் மடமே வழுவாய் மலியும்
நெறிசேர் வழியே நிமலன் அருளே
அறிவாய் மனமே அணியார் பதமே...8

வறிது= அறியாமை.

தலைமேல் அரவும் தவழும் நிலவும்
அலைபாய் நதியும் அழகாய் மிளிரும்
மலைமேல் நடமே வகையாய்ப் புரிவான்
நிலைபேர் அருளே நினைநீ மனமே...9

ஒருதத் துவமும் உரையார் எனினும்
உருகிக் கனியும் உளமே குடிலாம்
மிருகத் ததளே விழையும் உடையான்
அருளைத் தருதாள் அடைநீ மனமே...10.

Friday, April 29, 2011

நாடகனுக்குத் தோடகம்

தணலார் விழியன் சடைசேர் மதியன்
மணமாய் மலராய் வரமாய்க் கனிவான்
கணமே நினைவில் கருதின் அவனே
துணையாய் வருவான் தொழுவாய் மனமே...1

சுகமும் துயரும் தொடரும் நிழலாய்
இகமீ தினிலே இறையுன் பதமே
புகலாய் அடைவேன் புனிதா எனவே
அகமே உறைவான் அறிநீ மனமே...2

துணியாய் பிறைசேர் சுருளார் சடையன்
அணியாய் நெளியும் அரவேற் றிடுவான்
பிணியாய் வினைசூழ் பிடியே அகலப்
பணிவாய் அரனின் பதமே மனமே...3

புனலே வளிவான் புவியே கனலே
எனவே அடியார் இசைவாய்ச் சரமாய்ப்
புனையும் கவியில் பொலியும் இறைதாள்
தனையே நிதமும் தரிநீ மனமே...4

உலவும் பிறையோ டுரகம் பொலிவாய்
நிலவும் தயையில் நிறையும் குழகன்
இலதென் றுளதென் றெவையும் சிவனே
வலவன் துணைதாள் வரிநீ மனமே.

Monday, April 18, 2011

திருஒற்றியூர்!

இருளென நாளெனவும்
உருளுமிப் பூவுலகில்
குருசிவன் ஒற்றிநினை
வருவினை அற்றிடுமே...6.

பையர வேயணி
மெய்யனி னொற்றியை
நைவினை இற்றிடக்
கைதொழு துய்வரே...7.

இலம்செயும் தீங்கழி
சிலம்பொலி தாளனின்
பலம்தரும் ஒற்றியை
வலம்வர பெற்றியே...8.

இலம்=வறுமை.
பெற்றி=பெருமை.

பயம்கொள எற்றியே
இயமனை செற்றவன்
நயம்தரு ஒற்றிசேர்
பயனதும் வெற்றியே...9.

நியாயமே செய்பவன்
தியாகரா சன்பெயர்
தியானமே செய்திட
கியாதிசேர் ஒற்றியே...10.

கியாதி= புகழ்.

Friday, April 15, 2011

திருஒற்றியூர்!

கற்றிலா ரெனினுசீர்
ஒற்றியூர் அரன்பதம்
பற்றியே தொழுதிடச்
சுற்றமோ டுயர்வரே....1

உலைவெலாம் அற்றிட
நிலவுசேர் உச்சியன்
மலையனார் ஒற்றியை
வலம்வர பெற்றியே...2


உலைவு=சஞ்சலம்.
உச்சி= உச்சந்தலை.
பெற்றி= பெருமை.

எந்தையாம் ஒற்றியூர்
செந்தழ லன்பதம்
வெந்துயர் தீர்த்தருள்
தந்திடும் மெய்யிதே...3

நற்றவன் ஆதியின்
ஒற்றியை நாடிடச்
சுற்றிடும் ஏதமும்
அற்றிடும் ஓர்கவே...4

ஏதம்=துன்பம்.

அண்ணியன் அன்பினுக்குக்
கண்ணுதல் ஒற்றிநகர்
எண்ணுக என்மனமே
நண்ணிடும் நன்மைகளே...5

Tuesday, April 12, 2011

வண்ணப் பாடல்!

திருநின்றவூர்
=============
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான


கத்துமொலி தத்துதிரை சுற்றிவரும்
....இத்தரையி லுற்றவுயிர் அத்தனையும்
....உத்தமநின் சத்தியினில் வைத்திடுவை....மங்கைபாகா
எத்தனைவி தப்பிறவி யுற்றழுது
....மத்துறுத யிர்க்கடைத லுற்றநிலை
....அப்பிலெழு மொக்குளென விட்டழிய....நொந்தபோதும்
நித்தியமில் மித்தையறு அத்தனுனை
....உத்திநிறை சித்தமொடு பற்றிடவும்
....நித்தமுநி னைத்துரைசெய் அக்கரமொர்....ஐந்துமானாய்!
புத்தமுத நற்கவிதை இக்குநிகர்
....சொற்றமிழில் நெக்குருக வைத்தமறை
....பெற்ற தவர் நிற்பணியும் பொற்புடைய....நின்ற ஊரே!

Tuesday, April 5, 2011

அடைவார்வினை அறுமே

மணியேசுடர் ஒளியேஅரு வுருவேசிவ பரமே
தணியாத உன் சினத்தால்நுதல் விழியால்மதன் எரித்தாய்
அணியார்கழல் பதம்நாடிடத் திருநீற்றினைத் துலங்க
அணிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....6.

நறைபூமலர்ச் சரமீசனின் திருத்தோளினில் இசைய
பிறைசூடிடும் சடையோன்கழல் செயுமாடலைக் கண்டு
நிறைவாகிய மனமோடிறை அரன்பேர்புகழ் வாயால்
அறைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....7.

இகத்தேபெறும் துயர்யாவையும் துகைத்தோட்டிடும் எம்மான்
செகத்தேஉள அடியார்மனக் குடிலேஉறை தெய்வம்
மிகத்தானெனக் கருளேசெயும் இறைவாஎன வேண்டும்
அகத்தார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....8.

தமர்தானென எமர்தானென உய்ர்ந்தாரெனச் சாடும்
சமர்மேவிய புவிமீதமை உறுசாந்தியைத் தருவோன்
நமர்தான்சிவ பஞ்சாக்கரன் திருப்பாதமே நம்பி
அமர்வார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....9

சுமையாகிடும் வயதாகிட வருவானரன் துணையாய்
நமையாளுமெய் இறையோனவன் திருத்தாளினை நாடி
இமையோரவர் அருளேயென நறும்பூமலர் இட்டே
அமைவோர்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....10.

Tuesday, March 29, 2011

அடைவார் வினை அறுமே

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை)


மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.

பொழுதாகவும் நொடியாகவும் சுழன்றோடிடும் புவியில்
வழுவேமலி அவமாயையில் தடுமாறிட மலைந்து
விழுவேனெனை தடுத்தேயருள் செய்வாயென வேண்டி
அழுவார்வினை அறுமேஇனி இலையோர் பிறப் பவர்க்கே....2.

மணைமீதமர் இளையோன்மணம் தடுத்தாட்கொள வந்தே
பிணைநீஎன தடியானென அருளேசெயும் பெம்மான்
அணைமீறிடு அன்பாலுன தடியேபிடித் தழுதே
அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....3.

(சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.)

மழைக்கேங்கிடும் பயிராகவுன் தயையேஉறு வரமாய்க்
கழைக்கூத்தெனும் புவிவாழ்விலுன் கழல்பாதமே கதியாய்ப்
பிழைக்கேப்பிறப் பெடுத்தேனுன தருளேபெரும் பேறென்
றழைப்பார்வினை அறுமேஇனி இலையோர்ப்பிறப் பவர்க்கே....4.

துளியேபிறை அணிவார்சடை யொளிர்பூஞ்சரம் இலங்கக்
கிளிதோளமர் வடிவாள்கயல் விழியாள்துணை அரனே
களியாய்நட மிடுவாய்சிவ பரனேஎனைக் காவென்(று)
அளிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....5.

Thursday, March 24, 2011

வண்ணப் பாடல்!

(தனந் தனதன தந்த தனன தனத்தத் தனதனன)

நிதம் சதிரினில் விஞ்சை எழிலில் நடத்தைத் தருமிறைவன்
பதம் கதியென நெஞ்சில் அவனை நினைக்கத் துயரொழியும்
விதம் சதியினில் மிஞ்சும் வினையை அழித்துக் கருணைசெய
சதம் பதிகிற அன்பின் உருவன் இருக்கப் பயமிலையே!

Tuesday, March 15, 2011

வண்ணப் பாடல்!

'தன தனதந்த தத்தத் தனதன தானன தானதத்தா
'
இழை இசைகின்ற முத்துச் சுடரொளி மேவிய தோளசைத்தே
குழை யசைகின்ற நட்டத் தினிலிசை நாதமொ டாடலுற்றாய்
உழை யிசைகின்ற சக்திக் கனலுமை யாளவள் தேவுனக்கே
விழை விசைகின்ற சித்தத் தெளிவினை யேயருள் மாசறுத்தே.

இழை=ஆபரணம்,அணிகலன்.
உழை=பக்கம்.
குழை=காதணி.
விழைவு=நாட்டம்.

Sunday, March 13, 2011

சிவன்பேர் செப்பும் என்நா!


ஆனே உவக்கும் ஊர்தி என்றே அமரும் ஆண்டவனே
தானே அன்பர் தம்மை ஆளாய்த் தாங்கும் பித்தனும்நீ
கூனே எழிலாம் பிறையைச் சடையில் கொள்ளும் முக்கணனே
கோனே சிவனே மறவா(து) உன்பேர் கூறும் என்நாவே....6.

நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழ ஆடும் மன்றில் சதங்கைபதம்
ஆர்க்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே....7

சீரும் சிறப்பும் வாழ்வும் பொருளும் இறைநீ என்றிருப்பேன்
சாரும் பிழையும் நீங்கச் செய்யும் தயையை உடையவனே
நீரும் வளியும் வானும் மண்ணும் நெருப்பும் எனுமைந்தாய்ச்
சேரும் சிவனே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே....8

ஓடும் காலம் திரும்பா தென்றும் ஓர்ந்தே நம்பியுனை
நாடும் பக்தி நெறியில் செல்ல நாளும் பணிந்தேத்திச்
சூடும் நிலவும் நதியும் கவினாய்த் துலங்கு சடைசரிய
ஆடும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.....9

கல்லும் துதிக்கும் மலராய்க் காணும் கருணை விழியோனே
ஒல்லும் வகையில் திருத்தாள் தனையே உன்னும் மனமருளே
கொல்லும் விடத்தை அமுதாய் உண்டாய் கோனே அறம்நடத்திச்
செல்லும் சிவனே மறவா(து)உன்பேர் செப்பும் என்நாவே....10

Monday, March 7, 2011

சிவன் பேர் செப்பும் என் நா

(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை)

சுற்றும் வினைசெய் தீங்கை ஒற்றித் துடைக்கு முன்பார்வை
பெற்ற முவந்து தேரில் உலவும் பெம்மான்! காப்பாயே
பற்றென் றுன்னைப் பற்றின் பூந்தாள் பரிவாய்த் தந்தாள்வாய்
தெற்றென் றுணரும் அன்பில் உன்பேர் செப்பும் என்நாவே...1

புல்லைப் பூண்டைத் தருவைப் படைத்தப் புனித னுனைநாடி
இல்லைப் புகலென் றுன்தாள் துணையே என்போர்க் கபயமென்பாய்
சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே...2

மெய்யில் அரவும் புலியின் அதளும் மிளிரும் அழகோடு
கையில் பலிதேர் கலனும் மழுவும் கனலும் விளங்கிடவும்
கொய்யும் மலரில் அலங்கல் புனைந்து குருவுன் பதம்போற்றித்
தெய்வத் திருவே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே...3

ஊரும் உறவும் எதுவரை என்றே உழலும் மனமாற்றி
நேரும் வினையின் விளைவைத் தாங்கும் நிலையைத் தருவாயே
வேரும் கிளைக்கும் பூவும் கனியும் விதையாய் இருப்போனே
காரும் சிவனே மறவா துன்பேர் கழறும் என்நாவே!...4

சாரும் அடியார் உன்னைப் போற்றும் தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமைப் பிணியைத் தீர்க்கும் மருந்தென்றே
சேரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே!...5

Sunday, March 6, 2011

வண்ணப் பாடல்!

தினமொன்று மாயத் தனமென்று நாடித்
...தெளிவின்றி வாழக் ..குறியாமல்
உனதன்பை மேவிப் புகலென்று கோடற்
...குறுகின்ற தாளைத் ..தருவாயே
எனதென்று கூறத் தயைகொண்டு நேயற்
...கெளிதென்ற பார்வைக் குரியோனே
தினமின்பு சேரத் தருகின்ற கோலத்
...திருநின்ற ஊரிற்.. பெருமானே!

வண்ணப் பாடல்!

(தனதந்த தானத் தனதந்த தானத்
...தனதந்த தானத் தனதான)

சிறையென்று வாழக் குறைகொண்டி டாமற்
...சிவமென்று நாடற்..கருள்வாயே
பறைகொண்ட நாதத் தொலிமண்டு கானிற்
...பதமொன்று காணத் ..தருவாயே
அறைகின்ற வேதத் துறைகின்ற தீயுற்
...றழலென்ற சோதிப்.. பொருளோனே
திறமண்டு நாமத் திறைஎன்ற கோலத்
...திருநின்ற ஊரிற்.. பெருமாளே!

Friday, February 25, 2011

மதுரை!


பொழில்நிறை மதுரையில் விழவினில் திகழ்பவன்
எழில்விழி நுதலுடை யோனே
எழில்விழி நுதலுடை யோன்கழல் விழைவுற
உழ்ல்வினை அகன்றிடும் உடனே....6

புனல்தவழ் மதுரையில் புகல்தரும் துணையவன்
கனல்தவழ் கரமுடை யோனே
கனல்தவழ் கரமுடையோன்கழல் கருதிட
மனம்கொளும் உயர்வுறு மதியே....7

வலம்பெறு மதுரையில் விடையமர் மறையவன்
பொலம்திகழ் திருவுடை யோனே
பொலம்திகழ் திருவுடை யோன்கழல் புணையெனும்
பலம்தரும்;அறும்தொடர் பவமே....8

வயம்நிறை மதுரையில் வரம்தரும் இறையவன்
கயல்விழி உமைபுடை யோனே
கயல்விழி உமைபுடை யோன்கழல் கைதொழல்
மயல்தரு வினையறும் வழியே....9

மொய்வள மதுரையில் சிறந்திட முறைசெயும்
மெய்புனை பொடியுடை யோனே
மெய்புனை பொடியுடை யோன்கழல் விழைவுற
எய்திடும் உயர்வதும் எளிதே....10

மொய் = பெருமை.

Wednesday, February 23, 2011

மதுரை!


(திருமுக்கால் அமைப்பில்)

திருநிறை மதுரையில் அருள்தரு சிவனவன்
மருவுறு மலரணி வோனே
மருவுறு மலரணி வோன்கழல் மனங்கொள
வருதுயர் அழிவது நிசமே....1

பணியணை மதுரையில் கயல்விழி உமையரன்
துணிபிறை சடையுடை யோனே
துணிபிறை சடையுடை யோன்கழல் தொழுதிட
தணியுறு வினையது சதமே....2

பணி அணை = பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை

அறமலி மதுரையில் கலைவளர் நிதியவன்
திறமிகு நடமிடு வோனே
திறமிகு நடமிடு வோன்கழல் சிரம்கொளப்
புறமிடு வினையதும் பொடியே....3

மறைபுகழ் மதுரையில் வளர்தமிழ் விழைபவன்
பிறைமிளிர் சடையுடை யோனே
பிறைமிளிர் சடையுடை யோன்கழல் பிறவியின்
நிறைவினைத் தருமொரு நெறியே....4

புகழ்மிகு மதுரையில் முறைசெயு மிறையவன்
திகழ்மதி புனைசடை யோனே
திகழ்மதி புனைசடை யோன்கழல் சிரம்கொள
மகிழ்வுறு நிலையதும் வசமே....5

Sunday, February 13, 2011

பெற்ற பயன்!

செவியில் மணியொலிக்கத் தேவன் அருள்வேண்டிக்
குவியும் அடியவர்க் கூட்டம்-- கவியுமெய்
அன்பில் அகப்படும் ஆண்டவன் நாமத்தை
நம்பி செபிக்குமென் நா.

நானா விதப்பூவில் நற்றூபப் பூசனையில்
ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு

மூக்கின் உயிர்ப்பினில் மூங்கில் துளைப்பண்ணில்
நாக்கின் மொழியினில் நம்பனுளான் -- பாக்களில்
ஆழ்ந்த பொருளாய் அருள்பவன் தாளிடை
வீழ்ந்து பணியுமென் மெய்.

மெய்யினில் வெண்ணீறு மேவிட அஞ்சலருள்
கையில் கனலேந்தும் கைலாயன் -நைய
அலைந்திடும் ஓடுடை அரனின் தயையே
நிலையாய் நினையுமென் நெஞ்சு.

நெஞ்சில் நினைந்து நெடுஞ்சாண் கிடையாகத்
தஞ்சமவன் என்றே சரணடைவம்--விஞ்சையருள்
புனிதன் தாளினைப் போற்றிப் பணியும்
மனிதப் பிறவி சிறப்பு.

Wednesday, February 9, 2011

பெற்ற பயன்!

பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்)

சிறப்புறத் தில்லையில் செய்நடம் பேறாம்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
மெய்யருள் செய்யும் விமலனாம்!-- தையலாள்
மைவிழி தேவி மகிழ்நன் தலந்தொறும்
கைதொழச் செல்லுமென் கால்.

காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
சாலவும் தாழும் தலை.

தலையில் அலைநதி தாங்கிடும் அண்ணல்
கலைமதி ஆர்பரன் காப்பான்! -- குலைவில்
நிலையுறு பக்தியில் நிற்கும் சிவனைக்
கலிதீரக் காணுமென் கண்.

கண்ணுதல் தெய்வக் கருணை நெகிழ்வுற
எண்ணிட ஓடிடும் இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற இன்னிசையில் செஞ்சடையன் வான்புகழ்
சீர்தனைக் கேட்கும் செவி.

Friday, January 28, 2011

தேரோடும் திருவிடை மருதூர்!


மருதமர நிழலின்கீழ் மங்கையொரு பங்குடையான்
அருளுருவில் காட்சிதரும் அண்ணலவன் மகிழுமிடம்
பொருவினையைத் தீர்ப்பவன்சீர்ப் புகழடியார்ப் போற்றிசெயத்
திருமலியும் தேரோடும் திருவிடை மருதூரே ! ...6

எவ்விதமும் இணையில்லா எழிலாடல் செய்திடுவான்
திவ்வியனாம் தேசுடைய செஞ்சடையன் மகிழுமிடம்
பவ்வியம்கொள் அடியவர்கள் பரமன்பேர் தொழுதேத்தச்
செவ்விமிகு தேரோடும் திருவிடை மருதூரே! ...7

நிகழ்கின்ற யாவுமவன் நீதியென்று நினையன்பர்
இகழ்வுறினும் அருள்செய்யும் இறைவனவன் மகிழுமிடம்
முகிழ்பக்தி மனமுடையோர் முக்கணனைத் தொழுதேத்தத்
திகழ்கின்ற தேரோடும் திருவிடை மருதூரே! ...8

மருண்டயரச் செய்வினையால் வரும்துன்பம் நீக்குபவன்
சுருண்டமுடி செஞ்சடையன் சொக்கேசன் மகிழுமிடம்
புரண்டுவரும் அலையொலியாய்ப் போற்றுமன்பர் ஒன்றாகத்
திரண்டிழுக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...9

நாவிற்கு மதுரமவன் நாமமது நவின்றிடவே
பாவிற்குள் நின்றருள்வான் பரமனவன் மகிழுமிடம்
கோவிற்கு அடியரெலாம் கொலுவிருப்போன் வீதியுலா
சேவிக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...10

Saturday, January 22, 2011

தேரோடும் திருவிடை மருதூர் !

நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா.

முறைகேட்ட ஆவினுக்கும்,முன்வந்து நீதிதந்துக்
குறைதீர்த்த அரசனுக்கும் கொடுத்தவருள் நினைந்தன்பர்
பிறைச்சடையன் மீதுற்ற பேரன்பில் வடம்தொட்டே
சிறப்பாகத் தேரோடும் திருவிடை மருதூரே ! ..1

ஊணாக உயிராக உற்றிடுமோர் துணையாகக்
காணாத பேரன்புக் கடவுளவன் திகழுமிடம்
பூணாக வெண்ணீற்றைப் புனையடியர் பணிந்தேத்தச்
சேணோங்கு தேரோடும் திருவிடை மருதூரே! ..2

பாந்தமிகு திருநடனம் பரவசமாய் ஆடுமையன்
தீந்தமிழில் தேவாரம் செவிமடுப்போன் விரும்புமிடம்
ஊர்ந்துவரும் ஏறுடையான் உமைநாதன் அடிதொழுதே
சேர்ந்திழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..3

குன்றியுளம் படுதுயரைக் குலைத்துபவம் தொலைத்தருள்வோன்
மன்றினிலே நடம்புரியும் மழுப்படையன் மகிழுமிடம்
நன்றினையே நினையுமன்பர் நாதந்தாள் மலர்போற்றிச்
சென்றிழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..4

ஏர்மலியும் திருமேனி இலங்குமணி பணியோடு
வேர்,மருவு கொன்றைமலர் மேவுமவன் மகிழுமிடம்
வார்சடையன் பேரன்பர் வாயாரத் துதிசெய்யச்
சீர்மலியும் தேரோடும் திருவிடை மருதூரே! ..5

Tuesday, January 18, 2011

திருஆனைக்கா ஈசன்! - 10


அண்ட மெல்லாம் புரக்கும் இனியவனே
...அனைத்து மவனென் றடைந்தார்க் கினியவனே
உண்ட வனருள் ஓது அஞ்செழுத்தே
...உணரும் அடியார் இசைப்பர் அஞ்செழுத்தே
தொண்டர் தமின்பு துன்பில் பங்குடையான்
...துணையாம் உமையை இடதுப் பங்குடையான்
தண்ட பாணி பணியும் ஐயன்நீ!
...தருசூழ் ஆனைக் காவின் ஐயன்நீ! ....10

தண்டபாணி=முருகன்.

அண்டங்களைத் தாங்கி, ஆதரிப்பவன்.
அடைக்கலம் என்பார்க்கு, இனி எல்லாமும் அவனே.
அஞ்செழுத்தை உரைத்தால் நிச்சயம் அருள்வான்.
அடியார் மனமெல்லாம் நிறைவாகி அஞ்செழுத்தைப் பண்ணிசைப்பார்.
அன்பர் இன்ப, துன்பத்தில் பங்கு கொள்ளும் இறைவனவன்.
உமையை இடதுப் புறம் உடையவன்.
முருகன் பணியும் தந்தை நீ.
வனம்சூழ்ந்த திருவானைக்காவின் தலைவன் நீ.

திருஆனைக்கா ஈசன்! -9

ஆதி அந்த மென்றொன் றில்லானே
...அன்புக் குடும்ப முடைய இல்லானே
மோதி அலைக்கும் ஊழைத் தீர்ப்பவனே
...முறையாய் ஆவின் துயர்க்குத் தீர்ப்பவனே
சோதி ஒளிரும் அருவாம் தழலாடி
...சுடுதீ கானில் நடம்செய் தழலாடி
பூதி அடைவோர் உள்ளம் நிறைந்தானே
...பொழில்சூழ் திருவா னைக்கா நிறைந்தானே! ....9

Monday, January 17, 2011

திருஆனைக்கா ஈசன்! - 8

மெய்யும் பொய்யும் எதுவென் றறியோமே
...விமலா! நீயே அவையென் றறியோமே
வெய்ய புலியின் தோலை உடையானே
...விரும்பும் அடியார் உள்ள முடையானே
உய்யும் வழியைக் காட்டும் கழலோனே
...உமையா ளுடனே நடம்செய் கழலோனே
துய்ய அன்பு மனத்துள் அமர்வோனே
...துணையே திருவா னைக்கா அமர்வோனே! ....8

Thursday, January 13, 2011

திருஆனைக்கா ஈசன்!

வினையின் வாதைப் படுத்தும் பாட்டினிலே
...விமலா!துதித்தேன் தமிழ்த்தேன் பாட்டினிலே
எனையும் அருளால் காப்பார் அலைமதியர்
...இறையை நினையார் துன்பில் அலைமதியர்
நினையும் பாடல் ஈசன் தோட்டினையே
...நெகிழ்ந்தே பசியை நீவந் தோட்டினையே
புனையும் பாவும் நுதலோர் கண்ணனுக்கே
...புகழும் ஆனைக் காவின் கண்ணனுக்கே!...6.

நீல மணியாய்க் கண்டக் கறையுடையாய்
...நிலையாய் அடியார் மீதக் கறையுடையாய்
சீல முயர்வாழ் வினைத்தந் தருள்நிதியே
...செல்வ மெல்லாம் நீயே அருள்நிதியே
கோல முறுதாள் மாற்றி நடமிடுவாய்
...கொலுவாய் அம்மை வேண்டும் நடமிடுவாய்
நாலு மறையும் போற்றும் ஐயனையே
...நவில்வோம் திருவா னைக்கா ஐயனையே!...7.

அம்மை = காரைக்கால் அம்மையார்.

Tuesday, January 11, 2011

திருஆனைக்கா ஈசன்!

ஆய்ந்தே சங்கத் தமிழ்தேர் ஏடுடையான்
...அடியார் தமிழ்ப்பா காத்த ஏடுடையான்
ஊழ்வாய்ப் படும்போ தருளும் அக்கரமே
...உய்க்கும் நாமம் அஞ்சாம் அக்கரமே
தூய்தாள் நடிக்கும் ஞானக் கூத்தாடி
...தொங்கும் கழியே வாழ்வாம் கூத்தாடி
பாய்ந்துண் டானே நஞ்சாம் அமுதினையே
...பணிவோம் திருவா னைக்கா அமுதினையே!...5

அக்கரம் = அட்சரம் (எழுத்து),
அஞ்சக்கரம்(அஞ்செழுத்து)

Monday, January 10, 2011

திருஆனைக்கா ஈசன்!

அடியும் முடியும் காணார் மாலையனே
...அணியாம் முடைசேர் எலும்பு மாலையனே
வடிவில் மிளிர நடிக்கும் நடிகன்நீ
...மண்ணோர் நடிக்க இயக்கும் நடிகன்நீ
படியாம் உலகும் தழைக்கும் நீரானே
...பஞ்ச பூதத் திலொன்றாம் நீரானே
புடையில் வைத்தாய் உமையாம் பொன்னினையே
...புகழ்வோம் ஆனைக் காவின் பொன்நினையே! ...4

திருவானைக்காவில் அப்பு(நீர்)லிங்கமாகக் காட்சி தருகிறார்.

Saturday, January 8, 2011

திருஆனைக்கா ஈசன்!

தவமும் துதியும் சேர்க்கும் விடையவனே
...தவிக்கும் மனத்தின் புதிரும் விடையவனே
நவமும் திகழ அணிவார் பணியினையே
...நாடிச் செய்வார் இறைவன் பணியினையே
புவனம் இயக்கும் அரனும் குறைமதியர்
...புரியார் சிவனைத் துதியார் குறைமதியர்
பவமும் தொலைத்தே அருளைப் புரிவானே
...பதியாம் ஆனைக் காவைப் புரிவானே! ...3

பணி = பாம்பு.

Thursday, January 6, 2011

திருவானைக்கா ஈசன்!

அருளால் சடையில் ஏற்றாய் ஆற்றினையே
...அகலா அன்பர் துன்பை ஆற்றினையே
தருஆல் நிழலில் மோன குருவென்றாய்
...தகப்பன் சாமி யுமுன் குருவென்றாய்
திருவாய்ப் பொலியும் தில்லை மன்றாடி
...சிவனுன் அருளே வேட்பர் மன்றாடி
புரைதீர் வெண்ணீ றணியும் மெய்யானே
...பொழில்சூழ் திருவா னைக்கா மெய்யானே! ...2

Wednesday, January 5, 2011

திருவானைக்கா ஈசன்!

==============
திரு இயமகம்.
==============

ஆடல் புரிவான் மதுரைக் கூடலிலே
...அடியார் மனமும் பக்திக் கூடலிலே
வேடம் புனையும் விருப்ப முடையானே
...வேண்டும் பலிதேர் சிரம்கை முடையானே
காடன்,உமையாள், குகனும் மலையாரே
...கருணை அவர்தம் இயல்பே மலையாரே
பாடல் விழைவன்;உகப்பன் ஏற்றினையே
...பணிவாம் திருவா னைக்கா ஏற்றினையே!

விளக்கம்:
சுந்தரேசனாய் மதுரைக் கூடலில், திருவிளையாடல்கள் புரிவான். அடியவர் உளமும் பக்தி நெறியில் ஒன்று கூடும்.

விதவிதமாய்(விறகுவெட்டி, கூலியாள், வளையல் வியாபாரி...போன்ற) வேடங்கள் ஏற்பதை
விரும்புவான்.(அடியருக்காக)தனக்குத் தேவையான உணவைப் பிச்சையாக ஏற்கும்
கையொடுள்ள முடைநாற்றமுள்ள பிரமகபாலம் கொண்டவன்.

குடும்பமே மலைவாசிகள்.(சிவன்,உமை,முருகன்) தயை செய்வது அவர்களின் இயல்பே
எனவே மலைத்து வியப்பதற்கொன்றுமில்லை.

அன்பர்களின் பாடலை விழைபவனாய் இடபத்தை வாகனமாய்க் கொள்வதில் மகிழ்பவன்.
அந்தத் திருவானைக்கா காளையைப் பணிவோம்.

அன்புடன்,
தங்கமணி.

Saturday, January 1, 2011

புதிய வருட நல்வாழ்த்துக்கள் !