Wednesday, December 31, 2008

வறுமை நலிக!

வறுமை நலிக!
(படக் கவிதை)

வசிக்கும் குடிசையில் மக்களின் வாழ்வை
நசிக்கும் வறுமை நலிக!--பசிக்கு
விசித்த வயிறடங்கும் விற்றபொம்மை காசாய்
புசிக்கும் உணவாகும் போது.

Tuesday, December 30, 2008

பச்சை வண்ணம்!

பச்சை வண்ணம்!

எண்ண வியப்பளிக்கும் இனியநல் வண்ணங்கள்
என்னைக் கவர்ந்திடுதே ஈடில்லாப் பச்சைநிறம்!

பச்சை வண்ணனணி பசும்துழாய் மாலைகளும்
இச்சைமண மரிகொழுந்து, இன்மருவும் பைந்நிறமே!

வெள்ளைநிறம் செவ்வண்ணம் மஞ்சளொடு வான்நீலம்
கொள்ளை நிறங்களுடன் குவிந்திருக்கும் மலர்க் கூட்டம்!
அத்தனையின் பின்னணியில் அண்டிநிற்கும் பசுங்காம்பும்
சித்திரமாய் அழகுதரும் செழுமைபெறு இலைகளுமே
(thodarum)

Monday, December 29, 2008

"சாயம் வெளுத்த சரக்கு"

வெண்பாவின் ஈற்றடி"சாயம் வெளுத்த சரக்கு"

சித்தருடன் ஞானியரும் சிந்தித்துச் சொன்னவை
சித்திபெறும் மெய்வழிச் சேர்வதையே!--நித்தியமில்
மாய மலக்கினில் மையல் முடிவில்மெய்
சாயம் வெளுத்த சரக்கு.

Sunday, December 28, 2008

மனதில் நினைவாக

மனதில் நினைவாகப் பதிந்த
..வழிச்சுவடு மங்கி மறைந்திடுமா?
கனவில் நிஜம்காணும் மயக்கம்
..கரைந்துவிடும் மணலில் அலையாக
நினைவில் சிறுவயதின் நிகழ்வை
..நிழலெனவேத் தோன்றும் கதையாக
புனைந்து அனுபவமாய் உணர்த்தும்
..புதுமையினை கூறும் திரைப்படமே!

Saturday, December 27, 2008

குமரன் அழகு!





மழையில் கலவம் மகிழ்வுற விரித்திடும்
...மஞ்ஞையின் நடனம் அழகு!
பொழிலில் மணமாய்ப் புதுப்புது நிறங்களில்
...பூத்திடும் மலர்கள் அழகு!
விழையும் உளமாம் வெளியினில் நிலைத்திடும்
...சித்தமும் மவுன அழகு!
இழையும் அணியும் இசைவுடன் இலங்கிடும்
...இன்னருள் குமரன் அழகு!

Friday, December 26, 2008

"என்னால் முடிந்த திது"

வெண்பாவின் ஈற்றடி "என்னால் முடிந்த திது"

பொன்னான எண்ணங்கள் பூக்கின்ற உள்ளமிதில்
தன்னாலே மேன்மை தழைத்திடும்!-- பன்னாளும்
தொன்னூல் பலகற்கத் துய்யறிவு வேண்டுவேன்
என்னால் முடிந்த(து) இது.

பாரதிநீ!



சக்திச் சுடரொளிநீ!சத்துவத்தின் சாட்சியும்நீ!
பக்திக் கடலொலிநீ!பாரதிநீ!-- திக்கின்றி
திண்டாடும் பாரதத்தைத் தேசுமிகு பாக்கனலால்
பண்பாடி ஊக்கியதுன் பாங்கு

Sunday, December 21, 2008

கூட்டம்!

கண்ணுக்குக் காட்சிகளே கூட்டம், சிந்தைக்
...களத்துக்கு எண்ணங்கள் கூட்ட மாகும்!
உண்ணிற்கும் நினைவலைகள் ஒருகூட் டம்தான்,
...உருவாகும் கருத்தினிலே கலைகள் தோன்றும்!
மண்ணுக்குப் பெருகுகின்ற மக்கள் கூட்டம்
...விண்ணுக்குப் பொழியுமழை மேகக் கூட்டம்
பண்ணுக்கு அருட்பாக்கள் படைப்புக் கூட்டம்!
...பலவிதமாய் திருவருளைப் பாடிப் போற்றும்!

Friday, December 19, 2008

தீரர் மாண்பு போற்றுவோம்!

சுதந்திரமாம் வேள்வி தன்னில்
...சுத்தவீரர் தேசம் காத்த
விததன்னை உரைக்கப் போமோ?
...விடுதலைக்காய் சுற்றம் நீங்கி
இதந்தருநல் வாழ்வும் நீத்து
...இன்னல்கள் கோடி ஏற்றார்!
பதம்பணிவோம்! தீரர் மாண்பை
...பார்புகழ உயர்த்திச் சொல்வோம்!

Thursday, December 18, 2008

பொன் மாலை!

எத்தனை நிறங்களோ எத்தனை வகைகளோ
...எத்தனை கோலங்களோ?
புத்தியில் தெரிந்திடும் போதியாய் ககனமும்
...பொற்புறும் மாலைஅந்தி யே!
வித்தினில் மரமென விறகினில் நெருப்பென
...வெண்ணையாய்ப் பாலுக்குள் ளே!
வித்தைகள் காட்டிடும் வித்தகன் பெருமையை
...விரித்திடும் பொன்மாலை யே!

Wednesday, December 17, 2008

அருளைப் பொழிவாயே!

மழுமான் உடுக்கை மதி,ஆறு,
...மடவாள் உமையும் உடனாகக்
எழுமுன் நடனம் எழிலாகும்!
...இறைவா! நீயும் உயர்ந்தோங்கிக்
கழலும் முடியும் மறைத்தாயோ?
...கனலாய் அருணை ஒளியானாய்!
விழலாய்ப் பிறவி அழியாமல்
...விழைந்துன் அருளைப் பொழிவாயே!

Monday, December 15, 2008

மார்கழி தரிசனம்!

குளிர்பனி விடியலில் இறைவனின்
..கொலுவினை அடியவர் பரவுவர்!
தளிர்விரல் சிறுமியர் கவினுறத்
..தரையினில் கோலமும் இடுவரே!
ஒளிமலர் பூக்களும் இடைஇடை
..உயர்ந்தநல் திருவினை அளித்திடும்!
களியினில் பிறந்திடும் பரவசம்!
..கண்கவர் மார்கழி தரிசனம்!

Thursday, December 11, 2008

காலைக் காட்சி!

காலைக் காட்சி!

கவிமாமணி.இலந்தை அவர்கள் கொடுத்த ஈற்றடி:

"சோலையில் பறவைகள் சோம்பலை உதறியே
...சுறுசுறுப் பாவதைப் பார்!"


காலையில் உலகினை கதிரொளி எழுப்பிடும்
...கடமையை கண்டுகொள் வாய்!
வேலையின் அலைகளில் விரிகதிர் ஒளிசெயும்
...வியத்தகு பொன்னிறம் காண்!
பாலையில், கானகப் பரப்பினில் வெயில்தரல்
...பகலவன் நோக்கமொன் றே!
சோலையில் பறவைகள் சோம்பலை உதறியே
...சுறுசுறுப் பாவதைப் பார்!

காலைக் காட்சி (தொடர்ந்து)

சாலையில் இயங்கிடும் சந்தடி அரவமும்
...சாற்றிடும் காலையென் றே!
கோலமும் திருப்புகழ் கூறிடும் பாடலும்
...கோவிலாய் வீடுதோன் றும்!
பாலமாய் இணைந்திடும் பண்பினைக் கூட்டிடும்
...பயணமும் விடியலா கும்!
காலையின் ஆட்சியில் கண்டிடும் காட்சிகள்
...கலையென மகிழ்வுசேர்க் கும்!

காலைக்காட்சி

ஆடவும் பாடவும் அருமுடல் பயிற்சியும்
...அமையுநற் காலையா கும்!
ஓடவும் மனந்தனை ஒருமுகப் படுத்தவும்
...உயர்ந்திடும் காலையா கும்!
பாடமும் கருத்தினில் படிப்புமாய் இளைஞரின்
...பள்ளிநாள் சென்றுபோ கும்!
வேடமாம் முதுமையை வெறுத்திடா வாரிசின்
...விரிந்தநல் அன்புவாழ் க!

Monday, December 8, 2008

கலைமகள் துதி!

தாயே வாணி! வருவாய்நீ!
...தஞ்சம் அடைந்தேன் அருள்வேண்டி,
தூயே! எழுதும் திறம் ஊக்கி
...சொல்லும் கருத்தும் இசைவாக்கு!
ஓயா துன்னை இதுகேட்பேன்!
...உனக்கே அருளத் தடையுண்டோ?
சேயேன் தாயுன் தயைப்பெற்றுத்
...திகழும் மேலாம் கவிசெய்வேன்!

Saturday, December 6, 2008

மலர்கள்!

மலர்கள்!
=======
தென்றலினில் அசைந்தாடும் தேமதுரப் பூஞ்சிரிப்பில்
...செம்மலரும் மழலையுந்தான் ஓரினமே!
மின்னொளிரும் பொன்பூக்கும் மென்மையினில் மிஞ்சுகின்ற
...வண்ணமலர் மணம்கூடும் கோலமென்ன!
தன்னிகரில் இயற்கைத்தாய் தவமாகப் பெற்றனளோ?
...சந்ததமும் இறையழகை நினைவூட்டும்!
என்னவிதம் புகழ்வமிந்த எழில்மலர்கள் கொள்ளைதனை
...இங்கிதமாய்க் கொய்யாமல் தரிசிப்போம்1

Thursday, December 4, 2008

நகைச்சுவைப் பாடல்!

பள்ளிசெல்லும் அவசரத்தில் பரபரப்பாய் சிறுமியவள்;
...பலவகையாய்ப் பேனாவால் இன்னலுற்றாள்!
எள்ளிநகை யாடுமண்ணன் "என்னஎன்ன சொல்லிடுநீ
...எளிதாகச் சரிசெய்வேன்!" தங்கையவள்
சிள்ளெனவே சொல்கின்றாள் "திருகதிரு கதிருகுது"
..."திகிடதிகி டதிகிடதொம்"அண்ணனவன்
தெள்ளமுதச் சொற்கட்டில் சிரிப்பலைகள் மிஞ்சிடவே,
...சேர்ந்தொன்றாய் பள்ளிசெல்ல விரைந்தனரே!

யாதும் அன்பின் ஆட்சி !

வாதம் மோதும் பேச்சில்
...வாழ்வின் மேன்மை தோன்றுமோ?
பேதம் நீங்கி உண்மை
... பேசும் உள்ளம் வேண்டுமே!
தீதும் நன்றும் நாமே
...தேடிக் கொண்ட பாதையாம்!
யாதும் அன்பின் ஆட்சி
...என்று கொண்டால் சாந்தியே!

Monday, December 1, 2008

மனமே! வாழி!

கடலாய் வானாய் தோணியுமாய்
...காற்றாய் கடுகிச் செல்லுவதாய்
படமாய்ப் பசுமை காட்சிகளைப்
...பற்றிப் படரும் நினைவுகளாய்
தடமாய் நெறியைக் காட்டுகின்ற
...தகவாய் விளங்கும் உள்ளுணர்வாய்
புடமாய்ச் சுடரும் பொன்னிகர்த்த
...புரையில் மனமே நீவாழி!

Sunday, November 30, 2008

மோனசக்தி!

காலதன் மூலம் எங்கு?
...கதிதொடர்ந்(து) ஏகல் எங்கு?
சூலுறைக் கருவும் கொள்ளும்
...சூக்கும வளர்ச்சி என்ன?
தாலுறப் பாடும் பாட்டில்
...தனிச்சுவை காணும் சேய்போல்
மூலமாம் சக்தி சுட்டும்
...மோனமாம் செய்கை கொள்வோம்!


கால்=காற்று.

Saturday, November 29, 2008

புண்ணிய சோதியைப் போற்றுவோம்!

விண்ணதி கூன்பிறை வேணி சூடியும்
பெண்ணிட மணிந்தொரு பதந்தந் தாடிடும்
கண்ணுத லாதியாய்க் கருணை காட்டும் அப்
புண்ணிய சோதியைப் பொலியப்போற்றுவம்.

Thursday, November 27, 2008

இயற்கைக் காட்சி!

மனதை ஈர்த்து மகிழும் காட்சி
...மாந்தக் கோடி கண்களாம்!
கனவோ? மெய்யோ? களிக்கும் உள்ளம்
...கவிதைப் பொங்கச் செய்திடும்!
நினைவில் பசுமை காவியம்!
...நிகரில் லாத ஓவியம்!
வனங்கள்,தருக்கள்,மலைநீர் வீழ்ச்சி
...வளமை கூட்டும் இயற்கையே!

பிழைசரிசெய்து இட்டேன்.

Monday, November 24, 2008

இறை செயலாம்!

விந்தைமிகு சக்தியில் விரைந்திடும் கோள்களின்
...வேகமும் நெறிகளும் எவர்பொறுப்பாம்?
முந்தையபல் யுகங்களாய் முறையுடன் நீதியின்
...ஒழுங்குடன் சுழலுதல் எவர்செயலாம்?
பந்தவினைத் துன்பினைப் பற்றிடும் மாந்தரைப்
...பரிவுடன் காத்திடும் இறைசெயலாம்!
சந்ததமும் அவனையே சார்ந்திடும் சிந்தையும்,
...,தளர்விலா வாழ்வையும் வேண்டுவமே!

Friday, November 21, 2008

ஈசன் கோலம்!





ஆடிடும் தாண்டவம் அளித்திடும் பரவசம்
...அய்யனின் ஞான ரூபம்!
நாடிடும் கொன்றையும் நலம்தரும் மருவுடன்
...நறுமண,மல்லி,ரோஜா
சூடிடும் மாலைகள் சொன்னமாய் அணியுடை
...ஜொலித்திடும் ஈசன் கோலம்!
கோடியே கொடுப்பினும் கொண்டிடா மகிழ்ச்சியை
...கூத்தனின் பாதம் சேர்க்கும்!

Wednesday, November 19, 2008

இசைக்கீடில்லை!





கீதம் மனம்கொள கேட்க மகிழ்வுறும்
...கீர்த்தி யுறுமுயர் பாடலில்
நாத முடன்சுர ஞானம் கமகமும்
...நாடும் சுருதியும் ராகமாய்
வேதம் நிகருறும் மேலாம் கிருதியும்
...மேன்மை பெறுமுயர் சாதனை
போத நிலையெனும் பூதி அடைந்தவர்
...போற்றித் தருமிசை கீடிலை!

Tuesday, November 18, 2008

புரிந்திடா நீதி!

தென்றல் காற்றதன் இங்கித இதமுடன்
..தெம்பினைத் தந்திடு தல்போல்,
அன்னை சக்தியின் கருணையும் அருளுமே
..அழிவிலா சாந்தியை சேர்க்கும்!
வன்மை புயலெனும் சூறையின் பயங்கரம்
..வையகம் கலங்குதல் போல
உன்ன நடுக்குறும் சக்தியாம் காளியின்
..உருவமும் புரிந்திடா நீதி!

Monday, November 17, 2008

ஊ(ஞ்)சல்!

ஊச லாடும் உள்ளமே! ஓடி யாடித் துள்ளுமே!
தேசு லாவும் தண்மதி!தேய்ந்தி டாத வெண்மதி!
பூசை யாகும் பண்ணிசை!போற்றி மோதும் எண்டிசை!
ஈசன் நாமம் எண்ணமே!ஏற்றம் வாழ்வில் திண்ணமே!

Sunday, November 16, 2008

இறையருள் துணையே!

வாழ்வில் எதுவும் வசப்படக் கூடும்
..வழியை வகுத்திடு மனமே!
தாழ்வும் உயர்வும் சமமென ஏற்கும்
..தகவை உணர்ந்திடு உளமே!
காழ்ப்பை விடுத்துக் கருணையில் ஆழ்ந்து
..கருத்தில் பக்குவ நிலைகொள்!
சூழும் வினையாம் சுழல்தனை நீக்கும்
..சுகமாம் இறையருள் துணையே!

Saturday, November 15, 2008

சிவம்பெறுவோர் சீர்!

சிலப்பதிகார வரிப்பாடல்போல் அமைத்த பாடல்.

கத்திதனைக் கவளிகையில் மறைத்துப் பொய்யாய்
சுத்தசிவ வேடமுடன் சுரியெடுத்தல் அறிந்தும்
"தத்த!"நமர் என்றவர்தம் தகவினைவான் உயர்த்தும்
சித்துடையார் சீர்கேளாச் செவியென்ன செவியே!
சிவம்பெறுவோர் சீர்கேளாச் செவியென்ன செவியே!

நாண்மலர் தூவுவோம்!

ஏடு தந்தவன் ஏறு கொண்டவன்
...ஏற்றம் சொல்லிடக் கூடுமோ?
பாடு கின்றவர் பாட்டை தீர்ப்பவன்
...பக்தி கொண்டவர்ப் பாங்குளான்
காடு (உ)கந்தவன் கான மன்றினில்
...காலம் காலமாய் ஆடுவான்
தேடு நற்கழல் தேர்ந்து சிந்தையில்
...தேக்கி நாண்மலர் தூவுவோம்!

Friday, November 14, 2008

வெண்பா

பொதுவாகும் மேடை புரிந்தாடும் கூத்தும்
அதிலாடும் யாவும் அவனால்!--எதுவும்
விதியாகிக் காட்டும் வினைதீரச் செய்யும்
மதிசூடி பூந்தாள் மலர்ந்து.

பாடல்

கண்ணில் தெரியும் கனவில் தெளிவுறும்
எண்ணம் வெளிப்பட ஏதுசெய்தீர்?--எண்ணும்
கருத்தினில் ஓங்கிக் கதிரொளி வீச்சாய்
திருத்திகழ் பாடல்செய் தேன்.

Wednesday, November 12, 2008

ஓவம் உணர்த்தல் உயர்வு.

படப் பாடல்!

தென்னைமரக் கீற்றினிலே தீங்குரலில் பாட்டிசைக்கும்
கன்னங் கருங்குயிலின் காட்சிசொல்லும்-- என்னசெய்தி
சீவன் பரம்பொருளைத் தேடும் தவநிலையை
ஓவம் உணர்த்தல் உயர்வு.

Tuesday, November 11, 2008

முத்திக்கு உத்திதரும் முத்து!

தித்திக்கும் பத்திக்கும் சித்திக்கும் நித்தனவன்
எத்திக்கும் சத்திக்க ஏத்திடுவோம்-- சித்தனருள்
பத்திநகை புத்தொளியாம்;பத்துவிட சத்திதரும்,
முத்திக்கும் உத்திதரும் முத்து.

Monday, November 10, 2008

ஒரு படப்பிடிப்புக் கவிதை!

மாரியம்மன் பண்டிகையில் மனமுருகும் பக்தியுடன்
தேரிழுக்க ஊர்முழுக்கத் திரண்டு வந்திடும்!

சொந்தபந்த உறவுகளும் சுற்றமுடன் ஒன்றாக
வந்தகதை போனகதை மகிழ்ந்து பேசுவார்!

வீட்டினிலே காய்கறிகள் விருந்துக்குப் பலகாரம்
பாட்டிசொன்ன சமையலினைப் பக்குவமாய் செய்கையிலே

இரவுநேரம் முதலாட்டம் இடைவேளை விடும்போதில்
பிரியமாக மாமனுடன் பிள்ளைகளும் சென்றனரே!

அஞ்சுவயது சின்னமகன் அவர்களுடன் சேர்ந்துகொண்டான்
பிஞ்சுமனம் மகிழ்ந்திடவே பின்னாலே அனுப்பிவைத்தேன்!

பரிவாக மாமனுமே பந்துகளூம் பொம்மைகளும்
பெரிதான வண்ணபலூன் பிள்ளைகளின் பரிசென்றார்!

ராட்டினத்தில் ஏற்றிவிடும் பொழுதினிலே
கூட்டத்திலே சிக்கியஎன் குட்டிமகன் பிரிந்துவிட்டான்!

மாமனுடன் பிள்ளைகளும் மனம்பதறி ஓடியெங்கும்
ஏமாந்தோம் என்றலறி ரோடெல்லாம் தேடுகையில்,

வீடுவரத் தெரியாமல் விழிமல்க அழுகின்றான்!
தேடுகின்ற மனமுழுதும் திகில்நிறைந்து காண்கின்றது!

வண்ணபலூன் கைப்பிடித்து வழியெல்லாம் நடக்கின்றான்
கண்ணெதிரில் பால்கார கண்ணனெனும் நண்பனவன்

ஆசையுடன் பலூன்பார்த்து அழகாக இருக்குதென்று
பேசுமுன்னே என்மகனும் பெரிதாக அழுகின்றான்!

வீட்டுக்குப் போகும்வழி மறந்துவிட்டேன் என்றவுடன்
காட்டுகிறேன் உன்வீடு கவலையின்றி வாவென்றான்,

திரையரங்கு வரும்போதுத் தெளிவாக சொல்கின்றான்
விரைவாக என்மகனும் வீடிங்கே இருக்குதென்றான்

அங்கிருந்து ஓட்டம்தான்! அடுத்துவீடு வந்தவுடன்
பொங்கிவரும் அழுகையுடன் புகல்கின்றான் மைந்தனும்தான்!

"காணாமே போனேன்மா!" கைப்பிடித்த பலூனுடன்,
காணாமே போனாயோ1" கண்ணேஎன்(று) அணத்(து)அழுதேன்!

Friday, November 7, 2008

சிவன் துதி.


மஞ்சுதவழ் வளரிமய மலைமகளுன் இடமாக,
...மதிநதியும் விரிசடையும் இலங்கிடவும்,
நெஞ்சுநெகிழ் பக்தியுடன் நீலகண்ட! உன்கோலம்
...நினைந்தென்றன் வினைதீர்க்க வேண்டிடுவேன்!
தஞ்சமெனில் அபயமெனும் சர்வேச!உன்கரமே!
...தாண்டவத்தில் மோனதவ முகமொளிரும்!
செஞ்சிலம்பு மலரணிதாள் சீர்த்தியினில் மனமுருகச்
...செய்திடுமுன் அருள்திறத்தை என்னசொல்வேன்!

Wednesday, November 5, 2008

"மிஞ்சும் மிருதங்க மே"

வெண்பாவின் ஈற்றடி:

"மிஞ்சும் மிருதங்க மே"

சொக்கவைக்கும் தாளங்கள் சொற்கட்டில் மின்னிடியாம்
பக்குவமாய்ப் பாட்டிசைப்போர்ப் பக்கபலம்!--மிக்குயர்ந்த
அஞ்சருவி பாறைமேல் ஆர்ப்பரிக்கும் சந்தநடை
மிஞ்சும் மிருதங்க மே.

Tuesday, November 4, 2008

"சேலை அவிழ்ந்தது"

வெண்பாவின் முதற்சீர் "சேலை அவிழ்ந்தது"

சேலை அவிழ்ந்தது; சீராகக் கட்டுகின்றாள்
சோலை மலரழகுச் சுந்தரியாள்!--வேலைசெலும்
தாயறியாப் போதிலவள் தானுடுத்த ஆசைகொண்ட
சேயவளும் சின்னப்பெண் தான்.

Monday, November 3, 2008

சொல்லால் அழியும் துயர்!

சொல்லால் அழியும் துயர்!

வெல்வேல் முருகன் தாள் வேண்டித் துதித்திட்டால்
வல்வினையும் தீர்ந்துவிடும் வாழ்வுயரும் -- பல்விதமாய்
நல்மனதால் நாடிடவே ஞானவடி வேலனெனும்
சொல்லால் அழியும் துயர்.

Sunday, November 2, 2008

"காரம் இனித்திடுமே காண்."

வெண்பாவின் ஈற்றடி:

"காரம் இனித்திடுமே காண்."

சிந்தை குடிகொண்ட சிங்கார வேலவனை
வந்தனை செய்து வணங்கிடுவாய்! -- சந்ததமும்
வீரவேல் சக்திநிறை வெற்றியினில் கந்தரலங்
காரம் இனித்திடுமே காண்.

Saturday, November 1, 2008

என்றன் மகனாம் இவள்.

வெண்பா ஈற்றடி
"என்றன் மகனாம் இவள்"
நான் இட்ட வெண்பா:

பொன்னழகுப் பாவையிவள்!புத்தழகுப் பூவையிவள்!
பெண்ணழகுக் கோலம் பெரிதுவந்தார்! --மன்றமதில்
வென்றிடவே பெண்ணாக வேடமிட்டோன் தாய்சொன்னாள்
என்றன் மகனாம் இவள்.

"நீயென்றேன் நீயென்றாய் நீ"

சந்தவசந்த மட்டுறுத்துனர்(மாடரேட்டர்)
கவிமாமணி திரு.இலந்தை அவர்கள் சந்தவசந்தக் குழுமத்தில்
அளித்த பலவிதக் கவிதைப் பயிற்சிகள் உன்டு.அவற்றில் ஒன்று
வெண்பாவின் ஈற்றடி:
"நீயென்றேன் நீயென்றாய் நீ"

சேயெனக்குக் காட்டிவிட்டாய் செம்மைநெறி!சூழும் உன்
நோயினில் என் சேயாக நோக்கிடுவேன் -- பாயுமன்பில்
தாயன்றி யாருமில்லை!தாங்குகின்ற தெய்வந்தான்
நீயென்றேன் நீயென்றாய் நீ.

பிழை சரிசெய்தபின்னர் இட்ட வெண்பா.

Thursday, October 30, 2008

முழுமுதலே!

நிறைசுடரோ நெறிமுறையோ
..நெகிழ்ந்துருகும் அருளமுதோ!
பிறைமதியோ பெருநிதியோ
..பெரும்புணையாம் இறைகழலோ!
தெறிகடலோ திரவியமோ
..தெய்வமதன் தெரிசனமோ!
முறையிடவோ முழுமுதலே!
..முற்றுமுனைப் பற்றிநின்றேன்!

மலர்தாள் தருவான்!

கனைகுரல் நிரையிடை தெரிகிறது
..கருணை அமுதாய் கறவை பொழியும்!
நினைவீனில் நிகழ்வினில் நிறைகிறது
..நெகிழும் பரிவில் உறவும் இனிக்கும்!
தினைதுணை பிறர்நலம் நினைத்துவிடின்
..திகழும் அமைதி உளத்தில் நிலைக்கும்!
வினைதனை விலக்கிடும் இறையவனும்
..விரும்பும் புணையாய் மலர்தாள் தருவான்!

பரமனின் பதமலரே!

கூடு கின்றனர் கும்பிடும் மனமொடு
...குவிந்திடும் இறையுணர்வில்
தேடு கின்றனர் திருவருள் அமுதினை
...தெளிவுறும் உள்நினைவில்
ஆடு கின்றனர் அகிலமும் புரந்திடும்
...அருமையை நினைந்தபடி
பாடு கின்றனர் பைந்தமிழ் பனுவலில்
...பரமனின் பதமலரை!

புரந்திடும்--காத்திடும்

Tuesday, October 28, 2008

உயர்க!

இரும்பி நுறுதி கொண்டு நெஞ்சின்
...ஏழ்மை வேர றுத்திடு!
துரும்ப நித்ய சஞ்ச லத்தை
...தொலைத்து வானை அளந்திடு!
விரும்பி ஏற்கும் பெருமையோ
...வெறுத்தொ துக்கும் சிறுமையோ
தெரிந்தி ரண்டும் ஒன்றாய்க் கொள்ளும்
...திண்மை யோடு யர்ந்திடு!

அன்புடன்,
தங்கமணி.

Sunday, October 26, 2008

தீபாவளி!

தீபாவளி!

தீபச் சுடரில் ஒளிரும்
...தேவி முகமே திகழும்!
தூபம் புகைந்து மணக்க
...துய்ய மலரால் தொழுதோம்!
பாபம் யாவும் அகற்றி
...பரிவாய் எவர்க்கும் அருள்வாள்!
தீப வரிசை விளங்கும்
...தீபா வளிநாள் மகிழ்வோம்!


அன்புடன்,
தங்கமணி.

Friday, October 24, 2008

உனதருள் பேறு!

உனதருள் பேறு!

பித்தா! என்றிடின் பெரிதுவந்(து)இறைவ!நீ
...பீடாய் தோழமை கொண்டாய்!
அத்தா! உன்றனின் அடிதொழ மறக்கிலேன்
...அன்பும் கருணையும் தாராய்!
நித்தா! நிர்மலா! நிதமுனை வேண்டினேன்
...நெஞ்சில் அமைதியை வைப்பாய்!
மத்தாய் சுழலுறும் மனிதரின் வாழ்விலே
...மங்கா துனதருள் பேறாம்!

Wednesday, October 22, 2008

இனிக்கும் மழலை!

சின்ன அடி சிவக்க ஆடும்
...சேயின் சிரிப்பு மனமயக்கும்!
மின்னுகின்ற நயனம் கூறும்
...மீனும் மானும் நிகரிலையே!
கன்னலெனும் சுவையில் ஊறும்
...காதில் இனிக்கும் கனிமழலை!
பின்னமாகும் என்றன் ஆவி
...பிஞ்சு மனதைக் கொஞ்சிடவே!

Monday, October 20, 2008

உருகுதல்!

கருணை யிலுருகும் மனது!
...கருத்தி லுருகிடும் கவிதை!
அருமை யிலுருகும் உறவாம்!
...அழகி லுருகிடும் இயற்கை!
முருகி லுருகிடும் மொழியே!
...முகிலி லுருகிடும் மழையே!
திருவி லுருகிடும் நினைவு!
...தினமும் உருகிடும் உயிர்ப்பு!

ஏன்?

ஏன்?

சின்ன வயதினில் சிரித்திடும் வாழ்வினில்
...சேர்ந்தே கூடி மகிழ்ந்ததுமேன்?
பின்னர் வறுமையின் பிடிதனில் மூழ்கியே
...பீழையாகிப் போனதுமேன்?
இன்னல் வளர்ந்திடும் ஏழ்மையில் உறவுகள்
...எங்கோ காணோம் என்றதுமேன்?
என்ன நினைவுகள்! எத்தனை நிகழ்வுகள்!
...இன்று காலம் மருந்தாகும்!

Thursday, October 16, 2008

ஊட்டி மலையில்...

ஊட்டி மலையில் விரைவுவண்டி
...ஊர்ந்து வளைவில் தொடர்கிறது!
வாட்டும் குளிரில் மழலையுடன்
...மங்கை ஒருத்தித் தவிப்பினிலே!
சாட்டும் வறுமை தெரிகிறது!
...சால்வை கொடுத்துக் குளிர்குறைத்தேன்
காட்டும் விழிநீர் அவள்நிலையை;
...கரங்கள் குவித்தாள்! இறைநினைந்தேன்!

உனையே பாடும் வரம்தருவாய்!

கண்ணால் காணும் பொருளாய்
...காட்சி அருளும் ஒளிப் பிழம்பே!
தண்ணார் புனலாய் வளியாய்
...தரணி காக்கும் பரஞ்சுடரே!
விண்ணோர் பரவும் விடையூர்
...விமலன் அருணா சலசிவமே!
பண்ணார் இசையில் உனையே
...பணிந்து பாடும் வரமருள்வாய்!

Monday, October 13, 2008

செய்தொழிலில் சிகரம்!

களிகொண்ட உள்ளத்துள் கற்பனைகள் சிறைப்பட்டு காவியமாய்,
...கவிஞனென உயர்ந்தான்!
உளிகொண்ட சிற்பங்கள் உன்னதமாய் உறுகல்லில் வெளிப்படவே
...உயர்சிற்பி படைத்தான்!
வெளிதன்னில் விஞ்ஞான வேள்வியென்றே விளைவுகளை உலகினுக்கு,
...விஞ்ஞானி அளித்தான்!
தெளிவுடனே அவரவரின் திறமையுடன் உழைப்பைநல்க செய்தொழிலில்
...தெரிந்திடுமே சிகரம்!

Sunday, October 12, 2008

பேறு!

பேறு!

கவிதையில் திளைப்பது பேறு!
..கவினுறு நவரசம் பேறு!
செவிநுகர் செல்வமோர் பேறு!
..சிறப்புறு கல்வியும் பேறு!
குவிந்திடு மனமுமோர் பேறு!
..கொண்டிடும் பக்தியும் பேறு!
தவிப்பினில், தளர்வினில் தாயாய்---தாங்கும்
..தனிப்பெரும் இறையருள் பேறே!

Saturday, October 11, 2008

பாட்டியின் சிரிப்பு!(படக் கவிதை)

பாட்டியின் சிரிப்பு!(படக் கவிதை)

தொடரும் துயரமதைத் துணிவாய்த் தொலைத்துவிட
...துணையாய் உழைப்பினையே சுவாசமாய்
படரும் விடியலிலே பசுமை வயலினிலே
...பதமாய் மேழிதனைச் செலுத்துவாள்!
இடரும் விலகிவிடும் இளைஞன் பேரனவன்
...இசைவாய் உழவியலைப் பெருக்குவான்!
படமாய் அவள்சிரிப்பு பார்க்க மனம்நிறையும்
...பனியாய் வெள்ளைநகை பரவசம்!

Tuesday, October 7, 2008

கலைமகள் துதி!


கலையரசி பெறவரிய கலையறியத் தருவாய்!
நிலைபெறுமுன் திருவருளில் நிறையுமனம் அருள்வாய்!!
உலைவிலையென் றொளிருமுனை உணர்வதனில் பதித்தேன்!
இலையெனமுன் வினையொழிய இணைமலர்தாள் துதித்தேன்!

Sunday, October 5, 2008

அன்னையின் தண்ணளி நிறம் பசுமை!

பச்சை பசுமையில் சூழ்வயல் தோற்றிடும்
...பாங்கினில் நெஞ்சமும் துள்ளும்!
இச்சை மொழிசொலும் பைங்கிளி வண்ணமும்
...எண்ணிட இன்பமே கொள்ளும்!
விச்சை மரகத வண்ணமும் அன்னையின்
...மின்னிடும் தண்ணளி அள்ளும்!
மெச்சும் செழுமையும் பச்சையின் வண்ணமாய்
...மேன்மையைத் தந்திடக் கொள்வோம்!

Wednesday, October 1, 2008

இயற்கை எனும் எழில்வரம்!

சிறைவிரிக்கும் பறவை செறிந்திலங்கும் தருக்கள்
...திரையலைக்கும் நதிகள் சிறப்பாகும்!
உறைபனியின் குளிரும் ஒளிபொழியும் நிலவும்
...ஒழுகருவி நடையும் சிலிர்ப்பாகும்!
முறையியைந்த நெறியில் உலகமுடன் யுகமும்
...முரணின்றி சுழல்தல் வியப்பாகும்!
இறையழகை இயற்கை எழில்வரமாய் விளக்கும்
...இனிமையினில் உணர்வும் உயர்வாகும்!

Saturday, September 27, 2008

விகிர்தா!அருள்வாய்!

விழுதாய் மனதுனை விழைந்தே படர்ந்திட
...வேண்டி உனையே நாடேனோ?
அழுதே பலமுறை அகந்தை அழிந்திட
...அருள்வாய் எனவே பாடேனோ?
தொழுதே பதமலர் துணையாய்க் கருத்தினில்
...சுடராய் ஒளிரத் தேடேனோ?
மழுமான் கரம்திகழ் மதிவான் நதிசடை
...விகிர்தா அருள வாராயோ?

வேலவனின் அழகு!




நெஞ்சமதில் தோன்றுதொரு காட்சி வண்ண
..நீலமயில் வேலவனின் மாட்சி!
கொஞ்சிவரும் தென்றலுமே வீசும்! கந்தன்
..கொலுவிருக்கும் பேரழகைப் பேசும்!
விஞ்சுமெழில் வள்ளிமகிழ் நாதன்! பக்தர்
..வினையகற்றி வெற்றிதரும் வேதன்!
தஞ்சமென்று தாளிணையைச் சூடும் அன்பர்
..தங்குமுள்ளம் பொங்குமின்பம் கூடும்!

Friday, September 19, 2008

கவிதை பாயும் நேரம்!

பண்மண்டும் சந்தயிசை பயிலுகின்ற பாடலுடன்
...பனிதவழும் விடியல் நேரம்!
மண்விண்டு தளிரிலைகள் வெள்ளந்தி மழலையென
...வெளிவந்தே விழித்துப் பார்க்கும்!
கண்கண்ட மஞ்சலெழில் கதிர்வரவால் கீழ்க்காணும்
...கடல்வெளியும் பொன்னாய் மாறும்!
விண்கொண்ட களிப்பினிலே மனமும்தான் துள்ளியெழ
...வெள்ளமெனக் கவிதை பாயும்!

Wednesday, September 17, 2008

இயற்கையே வியப்புதான்!

நீலவெளி வெள்ளியலைக் கோலமோ?
...நெளிந்துயர்ந்துத் தெறித்துவிழும் ஜாலமோ?
ஓலமிடும் ஆழியொலி வேதமோ?
...உறுமுகின்ற இடியொலியே நாதமோ?
பாலமொன்று விண்புவியை சேர்க்குதோ?
...பாதையொன்றை வானவில்லும் ஆக்குதோ?
காலமெனும் சக்கரந்தான் வெல்லுமே!
...கணக்காக விதிவழியே செல்லுமே!

Friday, September 12, 2008

அருமருந்து!

அருமருந்து!
--------------
பதம்தூக்கி ஆடுகின்ற பாங்குகண்டேன்!--எண்ணம்
...பனிமேவும் நிலவாடும் விரிசடைக்கே!
விதமாகும் உன்னடியார் விசனமற--நீயேன்
...வேடமிட்டு துன்பமுற்று சிறுமையுற்றாய்!
நிதமேஉன் தொண்டினுக்கே நினைவுடையார்--பாக்கள்
...நிறையுமன பக்தியுடன் கனிந்துதந்தார்!
சதமாகும் உன்னிருதாள் தொழுவதொன்றே--பிறவித்
...தளைநீக்கும் வினைதீர்க்கும் அருமருந்தாம்!

குமரனருள் போற்றுவோம்!



கண்குளிர சிவகுருவைப் பாடியே!
...கண்டுநிதம் தொழுதிடுவோம் நாடியே!
விண்மகிழ சூர்வதைத்த சக்திவேல்!
...வினையகற்றி வெற்றிதரும் முத்துவேல்!
பண்ணழகு அருணகிரி சந்தமே!
...பழகுதமிழ் தந்திடுமா நந்தமே!
எண்டிசையும் குமரனருள் போற்றுவோம்!
...இசைமலரில் சரம்தொடுத்துச் சாற்றுவோம்!

பட்டதாரி F.C.

பூணூல் உள்ளவரை போராட்ட மாமிங்கு
போகும் இடமெல்லாம் ஃபார்வேர்ட் காஸ்ட்- வேலை இன்றி
பைத்தியமாய் வீதியோரம் படுத்திருக்கும் ப்ராமணனே
அய்யரென் றிருமாப்பு கொள்!

திப்பிலி

Thursday, September 11, 2008

நதியே..

நதியே..
நதியே..
வளைந்துநெளிந்து
யவ்வனம் காட்டுவதால்..
பெண் என்றா ரோ சிலர்?????????
பாவ மூட்டைகள்
பலரது சுமந்ததால்..
தாய் என்றாரோ சிலர்????????

நான் சொல்வேன்...
நீ பெண்ணே அல்ல என்று..

செங்காலை கதிரவனும்
குளுமை தரும் வெண்ணிலவும்
என்னதான் பேசும் உன்னிடம்.????????
சொல்லி இருப்பாயா... யாரிடமாவது?????????

துள்ளி ஓடும் மீன்கள்
துக்கம்என்ன என்றே
உனக்கு மட்டுந்தானே தெரியும் ????
சொல்லித்தான் இருப்பாயா.. யாரிடமாவது???????

சத்தமின்றி , சலனமின்றி
ஆர்பாட்ட ஆரவாரமின்றி ...
ஆடி அசைந்து வரும் நீ..
.நிச்சயமாய் பெண்ணா என்ன???????/

பிடித்து வைத்த பிள்ளையார் எல்லாம்
கரைத்து போட்டனர் உன்மேலே..
மறைத்தே உன்துக்கத்தை ...
மறுகும் நீ பெண்ணா என்ன??????????
நதியே..நான் சொல்வது சரியா???????????????

நல்லதை நினை மனமே!

நினைப்பதில் நலத்தை நாடிடு!
...நிறைவுறு உளமும் கூடிடும்!
முனைப்புடன் உழைப்பை ஏற்றிடு!
...முறையுடன் உயர்வும் சேர்ந்திடும்!
சினத்தையுன் பொறையால் வென்றிடு!
...தெளிந்திடும் அமைதி வாய்த்திடும்!
மனத்தினில் இறையைச் சார்ந்திரு!
...வளம்தரும் அறிவும் ஓங்கிடும்!

இயக்க இணையும் இனிமை!

Thursday, 11 September, 2008
இயக்க இணையும் இனிமை!
வீசு கின்ற தென்றல்தான்
...வெய்யிலினில் வாட்டம் தீர்க்கும்!
நேசிக் கின்ற மனத்தில்தான்
...நிறைவான அன்பு வாழும்!
வாசிக் கின்ற வரையில்தான்
...வசமாகும் வீணை நாதம்!
பூசிக் கின்ற பக்தியில்தான்
...புதிதான பாதை தோன்றும்!


அன்புடன்,
தங்கமணி.
Posted by Thangamani on Thursday, September 11, 2008 0 comments

Tuesday, September 9, 2008

மெட்டுக்கு பாட்டு !

புது சுதந்திரம்
நிதம் வளம் தரும்
இனி தினந்தொரும்
தரம் நிரந்தரம்

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்

பணம் வளர்ந்திடும் தினம் தினம்
குணம் நிரைந்திடும் நிதம் நிதம்
முகம் மலர்ந்திடும் இனம் புரிந்திடும்
புகழ் பிறந்திடும்...

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்

மரம் விளைந்திடும் உறம் உறம்
கரம் இணைந்திடும் அகம் புறம்
பழம் கனிந்திடும் விதை விளைந்திடும்
சுகம் தினம் வரும்...

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்...

(1990-ல் சங்கர் மெட்டுக்கு எழுத ஆரம்பித்து பிறகு முடித்தது- மெட்டு நினைவிருக்கிறதா உங்களுக்கு?)

மாற்றமும் மறைத்தலும்

மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!

நிழல்கள் ஒன்றை ஒன்று ஒளியது ஒன்றை ஒன்று
பெரியது சிறிதை மற்றும் சிறியதே சிறிதாய் பெரிதை,
உறவுகள் ஒன்றை ஒன்று அறிவது ஒன்றை ஒன்று
பணமது குணத்தை என்று பிணமது ஆகும் வரையில்

மறைத்தலே மனிதர் தத்துவம்.

காற்றினில் ஏறி என்றும் கற்பனைக் குதிரை ஓட்டி
கனவிலே இன்பம் கண்டு கண்ணிலே பொய்மை பேசும்.
பொய்யது கண்டு கொண்டால் வாயது இளித்து நிற்கும்
பாசாங்கு செய்தல் என்றால் பல்லது இளித்து காட்டும்
மாற்றமா மனிதம் ? என்றும் மறைத்தலே மனிதம்.

விலங்குகள் மறைத்தல் அறியா.
கோபமோ கண்கள் காட்டும்; ஆத்திரம் வாயில் வடியும்
காதலோ இதயம் காட்டும் இன்பமோ உடம்பே சொல்லும்
மாக்கள் மனிதம் ஆகா; மறைத்தலை மாக்கள் அறியா.

உணர்ச்சிகள் திரையில் அடங்கா; உண்மைகள் கரைக்குள் அடங்கா.
வெளிப்பாடு என்றும் எதற்கும்;வடிந்தது மனமென்றாகும்.

ஆனால் மறைத்தலே மனிதம்.

பூட்டிய உணர்வே பின்னாள் விஷமாகும் என்றான் நீட்ஷெ.
உண்மையும் விஷமும் அறிவோம்; அனைத்தையும் பூட்டி வைப்போம்!

சங்கிலி இடுவோம் நமக்கே; சட்டிக்குள் சுற்றும் குதிரை!
பொங்கிட ஆசை கொள்ளும் மனமதை மறைத்து காப்போம்.

கோபமும் க்ரோதம் வேட்கை, குமைந்திடும் ஆசை மோகம்,
ஏளனம் கண்கள் சொல்லும் இகழ்ச்சியும் வெறுப்பு மற்றும்
துன்பமும் சோகம் வருத்தம், துவண்டிடும் சோர்வு தளர்ச்சி
நாணமும் மருட்சி வெட்கம், நால் வகை குணமுமென்று
அனத்தையும் மறைத்து வைப்போம்.மறைத்தலால் மனிதராவோம்!

மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!
மறைப்பதால் மாற்றலாகி மாற்றமும் மாறி மாறி....
மறைத்தலே மனிதர் தத்துவம்!
மறைந்தவர் சொல்லிச்சென்றார் மாற்றமே மனிதமென்று,
மாற்றமே தத்வமென்றால் தத்துவம் மாறுவதென்றோ !
திப்பிலி

(இருட்டு பாதையில் நீள இரவில் ஒரு நாள் நடக்க நேரிட்ட போது தோன்றிய எண்ணக் குழப்பங்கள் கவிதையானது- 1989)

Saturday, September 6, 2008

யதார்த்தம்

இலக்கின்றி திரியுமந்த
செம்மேகப் பொதிகளில்
எம்மேகம் என் மேகம்?

பறந்து திரிந்து
பிரிந்து விரிந்து பின்
கலைந்து போவது

பிறப்பின் நிதர்சனமும்
இறப்பின் சாஸ்வதமும்
புரிந்த பின்
வாழ்வின் யதார்த்தம்
விளங்கிடலாச்சு !

திப்பிலி

(கணையாழியில் வந்த என் கவிதை. முழுவதுமாக தயாரித்தது(manufactured) கணையாழியின் style-ல். மணியுடனான bet . நான் வென்றேன்!(1989)

நுணல் (அ) விடியல்

விடிந்தும் விடியாத
அதிகாலை திரிசங்கில்

எந்த விடியலுக்காய்
இவை இப்படிக் கூவுகின்றன?

வாலது விரிய
கொண்டை சரிய
குரல் கிழிய

கசாப்புக் கடையின்
கம்பிக் கூண்டிலிருந்து...

மானுட வல்லமையின்
போலி நிரூபணங்களாய்

எட்டு மணிக்கு
இறக்கைக் குவியலாகவா?

திப்பிலி

பிறிதொரு மரணம் !

(எனது உறவினர் ஒருவரின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புக்களின் ப்ரதிபலிப்பு (1988))

---------
பெற்று வளர்த்து நம்மை பெரியவராக்கும் தாய்.
கற்றுக் கொடுத்து குடும்பக் கலை வளர்க்கும் சுற்றம்
முற்றி முதிர்ந்து உடலும் முதுமையால் மாறும் தானாய்
இற்று விழுந்திடும் நாளை எதிர்பார்திருப்பாய் நீயும்.

பெற்று வளர்த்த பிள்ளை பேசிடுவான் 'கிழம் தொல்லை'
சுற்றிடும் மாயை தன்னில் சூதுவாதறியா மகனும்
பற்றது விட்டே மரணப் படுக்கையை தயாராய் வைப்பான்
பிற்பகல் அறியாதான்; முற்பகல் ஆடுகின்றான்!

மருத்துவரும் வந்திடுவார் 'மறு நாள் மாலைக்குள்
பருத்த உடலை விட்டே பறவையும் பறந்திடும்' என்றே
இறப்புக்கு நாள் குறிப்பார்;இவனும் கேட்பான் ' நாளை
இறக்காவிடில் என்று இறந்திடுவார்?' என்றே!

உயிரது பிரியும் முன்னே உண்மைகள் புரிந்து போகும்
மரணம் வரும் முன்னே மடிந்தது மனம் என்றாகும்.
உறவுகள் சுற்றம் எல்லாம் உன்னருகே சூழ்ந்து நின்று
பெருமைகள் பேசி அழுவர்; பிளந்தவாய் முதலைக் கண்ணீர்!

உயிரது பிரியும் நேரம் உடனே வாராதா என்று பாசக்
கயிரது தேடி அலைவாய்; கண்களில் வழியும் கண்ணீர்.
பேசுதல் நின்று போகும்;பார்வையும் மங்கிப் போகும்
சேற்றுழல் யானை போல சோர்ந்தது மனம் என்றாகும்.

மூச்சதும் நிற்கும் முடிந்தது கதையென் றறிந்து
காத்திடும் சுற்றமெல்லாம் கலங்குதல் போலக் காட்டும்.
அழு குரல்,கதரல்,கத்தல் அரற்றல் புலம்பலென்று
மறுபடி முதலைக் கண்ணீர்,மாண்ட பின் மாற்றமென்ன?

சாவது வந்த பின்னே சடங்குகள் பெரிதாய் நடக்கும்
ஆவது என்ன? பிரிந்த ஆவி தான் திரும்பி வருமோ?
கூவிடும் கோழி மறு நாள் கும்பலும் பறந்து போகும்
காடது வரையில் வந்த காயமும் பிரிந்த தாகும் !

திப்பிலி

Friday, September 5, 2008

அந்தி வரும் நேரம் !

அந்தியின் வெட்கமா, அழகிய கவிதையா
...அழகினை என்ன சொல்வேன்?
சிந்திடும் ரத்னமா, சிவந்தநற் பவளமா
...செறிந்திடும் செக்கர் வானம்?
செந்தழல் கோலமா, குங்குமக் கமலமா
...சிந்தையைத் தூண்டும் காட்சி?
சுந்தர மெகந்தியா, குல்மொகர் மலர்களா
...சொக்கிடும் மாலை நேரம்?


மாலையில் ஆநிரை மந்தையாய் வந்திடும்
...மணியொலி ஓசை கேட்கும்!
சோலையில் பறவைகள் சொந்தமாய்க் கூட்டினுள்
...சுகமுடன் பார்ப்பைக் கொஞ்சும்!
மாலையின் காட்சியும் மாறிடும் வானமும்
....மங்கலாய் சாம்பல் தோற்றம்!
ஆலயம் தொழுதெம் அன்பரும் வேண்டுவர்
...அகிலமும் நன்றாய் வாழ!

Saturday, August 30, 2008

சதங்கைக் கொஞ்சிவரும் சித்திரமே!

சின்னவடி நடைபயிலும் செஞ்சதங்கை கொஞ்சிவரும்
...சித்திரத்தின் முதலாண்டு நிறைவுதனில்
தென்றலவள் பட்டணிந்துத் திரியுவண்ணப் பூச்சியெனச்
... சிரிப்புடனே வருகையிலோர் காட்சியதோ
பொன்னொளிரும் கற்பூரப் பூவொளியில், மணியொலியில்
...பூரணனைப் பெரியவர்கள் போற்றுமுன்னே
தன்னழகுக் கண்மூடித் தலைசாய்த்துக் கரங்குவிக்கும்
...தளிர்மழலைச் செய்கையினில் மனங்குளிர்ந்தேன்!

பொழிவினில்!

கண்களின் பொழிவினில் கரைந்திடும் துயரமும்
...கனியும் பக்தியும் தோன்றும்!
விண்ணதன் பொழிவினில் விளைந்திடும் பயிரெலாம்
...வேண்டும் வளங்களைச் சேர்க்கும்!
புண்ணியப் பொழிவாம் பொருள்பெறு சொற்களில்
...பொலியும் மாந்தரின் மாண்பு!
பண்ணியம் பொழிந்திடும் பரமனின் அருள்திறம்
...பாக்கள் மலர்களாய்ப் பூத்து!

அன்புடன்,
தங்கமணி.

Friday, August 29, 2008

கனவே.. கலையாதே...

கண்மூடிய கனவில்
கைக்கு கிட்டியவை..
எட்டாமல் ஓடியதேன்..
நிற்காமல் ... நிஜத்தில்..

கனவே.. நீ .. கலையாதே..
இமை எனும் கதவிலே.
.இழுத்து பூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை ..
காணாமல் போய்விடுவாயே .. நீ .. என்று

Wednesday, August 27, 2008

'முள்ளிள்ளா ரோஜா?' அல்லது 'வாழ்க்கை காசின் இரு பக்கம்'

மூடியிட்ட துன்பந்தான் இன்பம்போல் ஏமாற்றும்(கலீல் கிப்ரான்)
வாடுவதால் என்ன வாழ்க்கையா மாறிவிடும்?
தவிக்காமல் இன்பமதை தருவிக்க முடியாது
கரிக்காத உப்பேதும் உண்டோ?

திப்பிலி

காயம்.

வந்தாரும் போனாரும் இருந்தாரும் என்செய்வர்?
சொந்தம்பின் பந்தமென என்னாளும் இருந்திடுமா?
இறந்த பின்னால்தான் எரிந்திடுவாயென் நெஞ்ஜே,
இப்போதே உனக்கேன் ஆசைத்தீ மோகத்தீ?

கூடு போல் காயமிது குன்று போல் நின்றிடுமா?
ஆடுவான் ஒரு நாள் ஆண்டவனும் தாண்டவம்தான்.
ஆடிக்காற் றூழியில் அத்தனையும் பறந்து விடும்
கூடது மட்டுமிங்கே; வீடது செல்வது யார்?

குப்புறப் போட்டுவிட்டால் நிமிறாத ஆமை போல் நாம்.
குடும்பமும் சொந்தம் பந்தம் கும்பலாய் வாழ ஆசை.
உடும்பு போல் ஆசை பற்றி உண்மையை உதறி விட்டோம்

குடத்திலே அரிசி போட்டு குரங்கு போல் நம்மை ஆக்கி
இடக்காய் கை மாட்டிய பின் இக்கட்டில் சிரிப்பவன் யார்?

திப்பிலி

மனமென்றோர் மாயை!

மனத்தொடு ஒருமை குன்றின் மார்க்கமே வாயென்றாகும்
உளத்தொடு சமரச மின்றேல் உண்மைகள் உறிக்கப் படலால்
பேசுதல் தேடி நீவிர் பேதை போல் ஓடுகின்றீர்!
பேசுதல் தவிர்க்க வேண்டின், நீங்களும் உங்கள் மனமும் நிசப்தமாய் கூடல் வேண்டும்.
மௌனமே பரம நண்பன்; மௌனமே பரம சத்ரு.
மௌனமே பரம ஆசான்; மௌனமே உலக சாந்தி!
மனத்தொடு தர்க்கம் வேன்டாம்; மாயையைக் கிளற வேண்டாம்!

திப்பிலி

முதற்கவிதை.

அஞ்சற்க நெஞ்சே!
என்ன நடக்குமென் றேதுமறிகிலேம்.
ந்ன்மை பயப்பன நடக்குமென் றெண்ணுவேன்.
இன்றில்லையெனினும் என்றேனும் என்றேனும்.
யாவற்றுக்குமப்பால்,
கூதலிற் பின் வசந்தம் வாராது போகுமோ!

தென்னீச பிரான்.
(தமிழாக்கம் திப்பிலி)
A verse by Lord Tennyson.
(translated by me)

Behold,We know not anything;
I can trust that good shall fall,
At last - far off- at last, to all,
And every winter change to spring.

Saturday, August 23, 2008

கண்ணன் வந்தான்!

கண்ணன் வந்தான்!
-----------------
கண்ணன் தண்டையின் ஓசையில்
...கன்னங் குழிந்திடும் முறுவலில்,
எண்ணங் கவர்ந்திடும் சேட்டையில்,
...இன்பக் களியுறும் வையகம்!
கிண்ணம் நிறைந்திட வெண்ணையைக்
...கெஞ்சிக் கொஞ்சியே உண்ணுவான்!
பண்ணில் குழலிசை நாதமும்
...பாகாய் உருகிடப் பண்ணுவான்!
அன்புடன்,தங்கமணி.

Friday, August 22, 2008

பிள்ளையார் சுழி

வினாயகனே..

வினாயகன்.. வினை தீர்ப்பவன்..

விளையாட்டாய் ,சித்தி வினாயகனாய்
வலஞ்சுழியாய் வடிவு கொண்டு..
வருந்துயர் அகற்றுபவன்..

அழகன் ஆறு முகனை
ஆண்டியாக்கிய ஆனைமுகன்..
அம்மை அப்பனன்றி..
அவணி வேறில்லை என்றமகன்..

தடுக்கி விழும் இடமெல்லாம்..
தனியாக இருப்பான் அவன்..
தடுத்திடுவான்.. தடைகளை..
தவிக்க விடாமல்.. தன் பக்தர்களை!!!!!!!!!

உன்பாதம்.. தேடிவந்தேன்..
உள்ளத்து தூய்மையுடன்
ஊழ்வினைகள் தீர்ப்பாயே..
உமைமைந்தன் நீயுந்தான்..

அன்புடன்

அகிலா

Tuesday, August 19, 2008

இதயம் என் கோவில் !

எனக்கெனும் கோவிலென் இதயம்
...இறைவனுள் வாழ்ந்திட வருவான்!
மனத்திருள் மாசினை ஒழித்தே
...மலர்ந்திடும் அன்பினை வளர்ப்பான்!
வினைதரும் துன்பினை எளிதாய்
...விலக்கிநல் பாதையை அருள்வான்!
நினைப்பினில் மோனத்தை நிறைத்தே
...நிதமவன் பாதமே துதிப்பேன்!


என் 66ஆம் வயதில், சந்த வசந்தக் குழுமத்தில் மரபுக் கவிதைப் படிக்கும் ஆர்வத்தில் சேர்ந்தேன்.

ஆனால் கவிதை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது,அங்குள்ள சான்றோர்கள் பொறுமையுடன், அன்புடன் கற்றுத் தருகிறார்கள்!

இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சந்த வசந்தத் தலைவர் கவிமாமணி. திரு. இலந்தை அவர்கள், திரு. அனந்த் அவர்கள், திரு. பசுபதி அவர்கள், திரு. யோகியார் அவர்கள், இன்னும் பலர்!

இந்த அன்புச் சகோதரர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி

பானை பிடித்தவள் பாக்கியம்

அள்ளஎன்றும் குறையாத அன்புநிறைப் பொக்கிடமாய்
...அவனிதனில் வந்துதித்த தேவதையோ?
வெள்ளமெனத் துள்ளிவந்து வேகமுடன் வழிநடக்கும்
...விளைச்சலெனப் பயிர்தழைக்கும் பெண்ணதியோ?
கொள்ளையின்பக் கருணையிலே கொலுவிருக்கும் சக்தியைப்போல்
...குடும்பமதைக் காக்கின்ற குலமகளோ?
பிள்ளைகளும், கணவனுடன் பெரியவரும் போற்றுகின்ற
...பெண்ணிவளே பாக்கியத்தைப் பெற்றவளாம்!

Thursday, August 7, 2008

ஊனாகி உயிராய்..!


ஊனாகி உயிராய் ஊணாய் உணர்வாய் உருவாய் உதிக்கும் ஒண்பொருளே!
கானாகித் தருவாய் கனியாய் மலையாய் கதிராய் விளங்கும் கண்மணியே!
தேனாகிப் பாகாய் தெவிட்டாக் கன்னல் சாறாய் இனிக்கும் தெள்ளமுதே!
வானாகி வெளியாய் வளியாய் விரிவாய்க் கருணை தழைக்க வந்தருள்வாய்!

அன்பே நிறைவு..!

-------

ஓடுகிறோம் ஆடுகிறோம் உண்டயர்ந்து தூங்குகின்றோம்
வாடுகிற வாழ்வில் வருவதென்ன?--தேடியிங்குக்
கூடுமுயர் நன்மைபெறக் கும்பிடுவோம் தெய்வத்தை
நீடுலகில் அன்பே நிறைவு.

Monday, August 4, 2008

சிவன் , முருகன் துதி...!


சிவன் துதி
-----------
செஞ்சடையில் பிஞ்சுமதி சேர்ந்திலங்கும் கங்கைநதி!
அஞ்செழுத்தைச் சிந்தித்தல் ஆனந்தம்!--கொஞ்சுமெழில்
மஞ்சுதவழ் மன்னிமய மங்கையொரு பாகத்தன்
கஞ்சமலர்த் தாளிணையே காப்பு.
---------------

முருகன் துதி
--------------
செந்தமிழின் சந்தங்கள் சிந்துக்கள் விந்தைகள்!
கந்தனின் காவடிபோல் கண்ணிமைக்கும்--சந்நிதியில்
சிந்தைமகிழ் சுந்தரனை செந்தில்வேல் சண்முகனை
வந்திப்போம் நெஞ்சமதில் வைத்து.

Sunday, August 3, 2008

இன்பம்!

..
தென்றலினில் தலையாட்டிச் சின்னமலர் அசைவினிலே
...சிறுமழலை சிந்தும்பூஞ் சிரிப்பதின்பம்!
கன்றுதுள்ளிப் பாய்ந்தோடிக் களித்தாடி தனதனையைக்
...கனைத்தழைத்துத் தேடுகின்ற குரலதின்பம்!
குன்றதனில் தண்டுகொண்ட குமரனைதன் குருவெனவே
...கொண்டாடும் சிவனருளை நினைப்பதின்பம்!
என்றுமுள இயற்கைதரும் எழிலதனில் உளமுருகி
...இன்தமிழில் கவியியற்றித் திளைப்பதின்பம்!

அனை = அன்னை (இடைக்குறை)

அன்புடன்,
தங்கமணி.