Saturday, January 23, 2010

மதிசூடி துதிபாடி! - 4



பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சுகமும் துயரும் இருவினையாய்த்
...தொடரும் பந்தத் தளைகளறத்
திகழும் உனது நிழல்தருமே
...செறிந்த பக்தி நெறிதனையே!
இகமும் பரமும் உனைநினைக்கும்
...இதமாம் பதமே அளித்தருள்வாய்!
புகழும் புகலும் தரும்பரமா!
...பூலா வனத்துப் பெருமானே!

சுதியில் இசைந்த இசைவடிவே!
...சுயம்பு லிங்கேஸ் வரஹரனே!
மதுவின் இனிப்பில் சுவைவருமோ?
...மதுரம் தருமுன் அஞ்செழுத்தே!
எதுவும் வசமுன் அருள்நிழலில்
...இகமாய்ப் பரமாய்த் திகழ்பவனே!
பொதுவில் நடனம் புரிந்தருளும்
...பூலா வனத்துப் பெருமானே!

No comments: