Thursday, December 31, 2009

திருவாதிரை நன்னாள்!



ஆதிரைநன் நாள்தன்னில் ஆண்டவனை வேண்டிடுவோம்!
மேதினியில் தீங்குகளை வீழ்த்திடுவான்! - வேதியனுக்(கு)
அன்பினொடுத் தொண்டானோர் ஆக்கியபா மாலைகள்
கன்மவினைப் போக்கும் களிம்பு.

Tuesday, December 29, 2009

கலைஞர்களை வாழ்த்துவோம்!


கண்ணனுக்குத் தாசனவன் கற்பனையில் சொற்புனைவில்
...கவியுணரும் தத்துவத்தில் கவிவெல்லும்!
எண்ணமதில் நீங்காத இடம்பிடித்த வரலாறாய்
...எழுத்திலுயர் கல்கியைநாம் மறப்போமா ?
வண்ணமுறு சித்திரங்கள் வரைந்தஉயர் ஓவியர்கள்
...வாழ்கின்ற நாடிதென்று பெருமைகொள்வோம் !
தண்ணமுதத் தமிழ்பாடும் தண்டபாணித் தேசிகரின்
...செம்மைகுரல் பண்ணிசையில் மயங்கார்யார்!


Sunday, December 20, 2009

சிவனைத் தொழுவாய்!


முந்தும் வல்வினை மூண்டிடும் வேளையில்
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே!
விந்தை யாக விளையாடும் ஈசனாம்
எந்தை தேசனின் ஏகம்பம் ஏத்தவே!

பாச மாகிய பற்றதும் நீங்கிட
நேச னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச னாருறை ஏகம்பம் ஏத்தவே!

மாடு மேலமர் மாதுமை பங்கனின்
ஆடு வான்கழல் அண்டிடு நெஞ்சமே!
பாடும் பக்தரைப் பார்த்தருள் செய்குவான்
ஈடி லான் திரு ஏகம்பம் ஏத்தவே!

சோத னைமிகு துன்பில் நலிந்து
வேத னைதனில் வீழ்வ தறிகிலாய்!
போத னாம்தவப் புண்ணியன் பேர்சொலும்
ஏத மில்திரு ஏகம்பம் ஏத்தவே!

அம்மை பாகனாம் ஆடலில் வல்லவன்
வெம்மை யாம்வினை வீழ்ந்திடச் செய்பவன்
இம்மை வாழ்வினில் இன்னருள் நல்குவன்
எம்மை யன் திரு ஏகம்பம் ஏத்தவே!

Friday, December 18, 2009

தெய்வத் தமிழ்!

மீனாட்சித் தாயவள் மீதுயர்ந்த பிள்ளைதமிழ்
தேனார்செந் தமிழினில் தெய்வமகன் பாடுகின்றான்!
குமரகுரு பரர்பாடல் குழந்தைமீனாள் வந்துகேட்டாள்
அமுதமொழி கவிசுவைக்க அமர்ந்தாளே கொலுவினிலே!
அரசனின் முத்தாரம் அன்பனுக்கே அணிவித்தாள்!
பரவசமாய்க் குருபரனைப் பாரேத்தச் செய்தனளே!

தெய்வீகத் தமிழ்மொழியில் திருக்கதவம் தாள்திறக்கும்!
தேயாதபவுர்ணமியாய் தேசாகும் அமாவாசை!
மெய்யாக மனந்தோய்ந்து வண்டமிழில் சொல்லெடுத்தால்
செய்கின்ற செயலினுக்குத் தெய்வீகம் கைகொடுக்கும்!
தேவாரம் திருப்புகழ் திருஓங்கும் பிரபந்தம்
நாவார இசைத்திடுவோம் நம்பிக்கை கொண்டிடுவோம்!

கையில் விழுந்தகனி!

ஏழைப்பெண் அன்றளித்த எளியநெல்லிக் கனிமுனியால்
மாழைப்பொன் கனியான மகிமைபெறும் அறக்கனியாம்!
அரசனுக்கு அவ்வைதந்த அரியநெல்லிக் கனியன்பின்
வரமாக மக்களுயர் வாழ்வுக்கே உகந்தகனி!
புனிதவதி மனங்குளிரப் புண்ணியர்க்கு அளித்தகனி
வனிதையவள் பக்திக்கே வழங்குமுயர் மாங்கனியாம்!
நாவலென்னும் பழமரத்தில் நாடகமாய்ச் சுட்டகனி
ஆவலுடன் ஊதுகையில் அறிவுசொல்லும் அளிந்தகணி!
அன்னைதந்தை உலகெனவே ஆனைமுகன் பெற்றகனி
என்னதவம் செய்தடைந்தோம் எழில்பழனி அருள்கனியை!

Sunday, December 13, 2009

மனதை வேண்டி 'சீட்டுக்கவி!'

(சந்தவசந்தக் குழுமத்தில் நடந்த 'சீட்டுக்கவி' என்னும் கவியரங்கில் கலந்து கொண்டு நான் எழுதிய கவிதைகள்.)

சிதாகாசம் மனமுனக்குள் சித்துவிளை யாடிடுமே!
நிதானத்தைப் பயிலுகின்ற நெறிதன்னை அளித்திடுவாய்!

இமயமாம் மலைகளிலும் இயற்கையிலும் தவசீலர்
அமையுமன உணர்வலைகள் அருள்செய்தத் தேசமிது!

வான்வெளியில் பறக்கின்ற வண்ணப் பறவைபோல்
நான் எண்ண வெளிபறக்க நத்திடுவேன் நல்மனமே!

மனமேநீ தோணி!யென்பேன் மக்களைக் கரைசேர்ப்பாய்!
மனமேநீ ஆழிய்!என்பேன் மந்திரமாம் உன்னொலியே!

மனமேநீ சக்தி!யென்பேன் வல்லமையே உழைப்பிலென்பாய்!
மனமேநீ! ஆலயம்! வரமாக இறைவருவான்!

மனமுன்னை வேண்டுகிறேன் வளம்பெருக வேண்டுமென்று
தனமொன்றே எண்ணமதாய்த் தடுமாறும் மானுடத்தைத்

தரமான நிலையாக்கு! தகவாகும் வலுவாக்கு!
உரமான உளமாக்கி உயர்வாக்கு! உனைக்கேட்டேன்

உன்னுள்ளில் ஒலிக்கின்ற உணர்வலைக்கு வண்ணமுண்டு!
வன்கண்ணும், வன்மமும் வன்மையும் வண்ணந்தான்!

உவகையும் சாந்தமும் உயர்த்திடும் வன்னமாம்!
தவமென்னும் சத்துவம் தருநிலையே உன்னதமாம்!

வளர்ச்சியில் பலநிலைகள் மனமேநீ! இருக்கின்றாய்!
தளர்ச்சியில் ஆறுதல் தந்தென்னைத் தாங்கிடுவாய்!

இளமையினில்,நடுவயதில்,இரங்கிடும் முதுமையில்
வளந்தரும் வாழ்வாக மனமேநீ! அமைந்திடுவாய்!

மனிதனுக்குள் உள்ளுணர்வாய் மனமுந்தன் சாட்சியுண்டு!
தனிமனித உயர்வினுக்கு சந்ததமும் கைகொடுப்பாய்!

மனிதனுக்கும் மனமுனக்கும் மாறாத போராட்டம்!
மனமிறுக்கம் மனமுளைச்சல் வரிசையாய் இவ்வுலகில்!

இன்றைய வாழ்க்கைமுறை இயங்குகின்ற வேகத்தில்
சென்றிடுமிந் நிலைமையினைத் தாங்கியருள்!ஓ!மனமே!

படிகின்ற மாசுகளைப் பக்குவமாய் நீக்கிவிட
முடிகின்ற விந்தையினை வரமாகக் கொடுமனமே!

கள்ளமின்றிக் கபடின்றிக் களங்கமில்லாப் பிள்ளைமனம்
வெள்ளையுள்ளச் சிரிப்பினிலே வியந்திறைவன் குடிபுகுவான்!

பிஞ்சு வயதினில் பிள்ளைமனம் தெய்வீகம்
அஞ்சும் ஆர்ப்பரிப்பில் அடங்காது வளர்ந்தமனம்!

கெஞ்சியுன்னைக் கேட்பதெல்லாம் கெடுதியில்லா நன்றினுக்கே!
தஞ்சமென்பேன்! இறையுணர்வில் தளைத்திடவை! என்மனமே!

குழந்தைமனம் வேண்டுகிறேன்! கொண்டிடுநீ கருத்தினிலே!
வழங்கிடுவாய் இவ்வரத்தை மனமே நீ! வாழ்க!வாழ்க!


அன்புடன்,
தங்கமணி.

Saturday, December 12, 2009

வரகவி ! பாரதி !


சந்தவசந்தத் தமிழ் குழுமத்தில்,நிகழ்ந்த 'பாரதி இன்றிருந்தால்'கவியரங்கில் பங்குப் பெற்று நான் எழுதிய கவிதைகள்.பாரதியாரின் பிறந்தநாளில் அவர் பதம் பணிந்து, இடுவதில் மகிழ்கின்றேன்!

வருவதைமுன் உணர்ந்துரைக்கும் வரகவியே!பாரதியே!
...வணங்கியுந்தன் திறம்வியந்து வாழ்த்துகின்றேன்!
பெருமையுறு தகவுடைத்துன் பீடுபெறு பக்திநிலை
...பிள்ளை யுன்சொல் கேட்கின்ற சக்திகண்டேன்!
திருநிறைவும்,நூறகவைசெம்மைசேர்வாழ்வினையும்
...தெளிவுடனே தருகென்றாய்! பெற்றிலையே!
வருவதுவும் போவதுவும் வான்சக்தி செயலதெண்ணும்
...மாண்பினையுன் வரமாக்கிக் வெற்றிகொண்டாய்!

ஐயா!உன் கனவுதனில் ஆற்றலுடன் தமிழோங்க
...அருமையான கவிதைதனில் எடுத்துரைத்தாய்!
மெய்யாகி உலகிலுயர் வான்மொழியாய் நிறைந்திலங்க
...வளர்கலைசொல் மொழிபெயர்நூல் தமிழொளிரும்
பொய்யாத தமிழமுதப் புதையலினை வெளிக் கொணர்ந்து
...புதுமையென உலகறியத் தந்திடுவோம்!
செய்யாதத் தவப்பயனாய்ச் செங்கவியாய்ப் பாரதி நீ!
...தமிழ்த்தாயின் மனங்குளிர வந்துதித்தாய்!

தண்டமிழில் நவரசத்தைச் சிறப்புற உன் கவிநயத்தில்
...தெய்வமணம் பெற உரைத்தாய் பாரதியே!
விண்டறிய ஒண்ணாத விஞ்சையையும் வியப்பினையும்
...வெள்ளந்தி மனமாக விரித்துரைத்தாய்!
கண்டுறையும் இனிமையினில் காதலினை,பக்தியினை
...கருணையையும், கனிவினையும் கலந்துரைத்தாய்!
மிண்டுகின்ற ஆளுமையில் மேவுகின்ற கவிதையினில்
...வரமெனவே சக்தியன்னை ஒளிர்ந்திடுவாள்!


Tuesday, December 1, 2009

அருணேசா! அருள்வாயே!


அண்ணா மலையே!அருணேசா!
...அருவாய் அழலாய் ஒளிர்வாயே!
பெண்ணாய் ஆணாய் அலியானாய்
...பிறைவான் நதிசேர் சடையானே!
விண்ணோர் உனையே துதிசெய்ய
...விடத்தை மிடற்றில் உடையானே!
பண்ணாய் இசையாய் இசைவோனே
...பரிவோ டெமைக்காத் தருள்வாயே !