Tuesday, April 14, 2009

சீர்பேசி உய்தல் சிறப்பு.


மண்ணுலகை வாழ்விக்க வந்துதித்த ராமனையே
எண்ணிநிதம் பண்பாடி ஏற்றிடுவோம்!-- வண்ணமதில்
கார்மேகம் மாரியெனக் காத்தருளும் பண்பாளன்
சீர்பேசி உய்தல் சிறப்பு.

Sunday, April 12, 2009

அஞ்சலென்று காட்சியருள் வேலவா!


(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)

எழுசீர் விருத்தம்.
(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)
ஆறு கூவிளங்காய் கூவிளம்
ஆறு தானதன தானனா

தேடிவரும் அன்பரெல்லாம் தீந்தமிழ்*ப்*பா மாலைகளைச்
சீர்பெறவே சூட்டிடுவர் வேலவா!
ஓடிவரும் தேனருவி உன்புகழை ஓசையிட்டே
உச்சரித்துப் பாய்ந்துவரும் வேலவா!
கூடிவரும் பக்தியினில் குன்றுதொறும் காண்பதற்கு*க்*
கூவியுன்னை வேண்டிடுவேன் வேலவா!
ஆடிவரும் தோகைமயில் அன்னைதந்த வேலுடனே
அஞ்சலென்று காட்சியருள் வேலவா!

Friday, April 10, 2009

அண்ணா மலையாம் அருணசிவம்!


எண்ணா திருப்பினும் இன்னருள் செய்திடும்
அண்ணா மலையாம் அருணசிவம்!-- விண்ணாய்
விரிந்துயர் கோபுரம் விந்தைமிகக் கண்ணால்
தெரிந்திடக் காட்டும் சிவம்.

Wednesday, April 1, 2009

அன்னைகாமாட்சியின் திருக் கோலம்!


பொன்னில் ஒளிரிழை புதுமலர்ச் சரங்கள்
...பொலியத் திகழும் அழகோடு
கன்னல் சிலைமலர்க் கணைகரம் அணைத்து*க்*
...கருணை பொழியும் விழியாளே!
மின்னல் கொடியென மிளிர்ந்திடும் இறைவி!
...வியந்து மனத்துள் தொழுகின்றேன்!
இன்னல் தருவினை இடரதும் தொலைய
...இணைபூம் பதமே சதமென்பேன்!