
சந்தவசந்தத் தமிழ் குழுமத்தில்,நிகழ்ந்த 'பாரதி இன்றிருந்தால்'கவியரங்கில் பங்குப் பெற்று நான் எழுதிய கவிதைகள்.பாரதியாரின் பிறந்தநாளில் அவர் பதம் பணிந்து, இடுவதில் மகிழ்கின்றேன்!
வருவதைமுன் உணர்ந்துரைக்கும் வரகவியே!பாரதியே!
...வணங்கியுந்தன் திறம்வியந்து வாழ்த்துகின்றேன்!
பெருமையுறு தகவுடைத்துன் பீடுபெறு பக்திநிலை
...பிள்ளை யுன்சொல் கேட்கின்ற சக்திகண்டேன்!
திருநிறைவும்,நூறகவைசெம்மைசேர்வாழ்வினையும்
...தெளிவுடனே தருகென்றாய்! பெற்றிலையே!
வருவதுவும் போவதுவும் வான்சக்தி செயலதெண்ணும்
...மாண்பினையுன் வரமாக்கிக் வெற்றிகொண்டாய்!
ஐயா!உன் கனவுதனில் ஆற்றலுடன் தமிழோங்க
...அருமையான கவிதைதனில் எடுத்துரைத்தாய்!
மெய்யாகி உலகிலுயர் வான்மொழியாய் நிறைந்திலங்க
...வளர்கலைசொல் மொழிபெயர்நூல் தமிழொளிரும்
பொய்யாத தமிழமுதப் புதையலினை வெளிக் கொணர்ந்து
...புதுமையென உலகறியத் தந்திடுவோம்!
செய்யாதத் தவப்பயனாய்ச் செங்கவியாய்ப் பாரதி நீ!
...தமிழ்த்தாயின் மனங்குளிர வந்துதித்தாய்!
தண்டமிழில் நவரசத்தைச் சிறப்புற உன் கவிநயத்தில்
...தெய்வமணம் பெற உரைத்தாய் பாரதியே!
விண்டறிய ஒண்ணாத விஞ்சையையும் வியப்பினையும்
...வெள்ளந்தி மனமாக விரித்துரைத்தாய்!
கண்டுறையும் இனிமையினில் காதலினை,பக்தியினை
...கருணையையும், கனிவினையும் கலந்துரைத்தாய்!
மிண்டுகின்ற ஆளுமையில் மேவுகின்ற கவிதையினில்
...வரமெனவே சக்தியன்னை ஒளிர்ந்திடுவாள்!


