Monday, December 8, 2008

கலைமகள் துதி!

தாயே வாணி! வருவாய்நீ!
...தஞ்சம் அடைந்தேன் அருள்வேண்டி,
தூயே! எழுதும் திறம் ஊக்கி
...சொல்லும் கருத்தும் இசைவாக்கு!
ஓயா துன்னை இதுகேட்பேன்!
...உனக்கே அருளத் தடையுண்டோ?
சேயேன் தாயுன் தயைப்பெற்றுத்
...திகழும் மேலாம் கவிசெய்வேன்!

3 comments:

அகரம் அமுதா said...

அழகிய இறைவணக்கம் பாட்டி! வாழ்த்துகள். சில ஐயங்கள்:- தூயே!? தூ- தூய்மை. தூயே -தூய்மையானவளே என்பதா?

இசைவாக்கு ஓயா துன்னை -இதைப்புணர்ந்தால் ஓரசை குறைகிறதே (இசைவாக்(கு) ஓயா துன்னை

விருத்தத்தின் ஒவ்வொரு அடியின் முடிவும் அடுத்த அடியின் துவக்கச்சொல்லும் புணரும் வழக்கம் உண்டல்லவா? சற்றே ஐயம் நீக்கவும் பாட்டி அவர்களே!

Thangamani said...

அன்புள்ள அகரம் அமுதன்!
உன் பாராட்டுக்கென் நன்றி!
தூயே= தூய்மையானவளே என்பது சரியே.

அரை அடியின் முடிவில் வரும்"உ" கரம்
அடுத்த அரை அடியின் முதலில் வரும்"ஓ" காரத்துடன் புணராததற்குக்
காரணம் உண்டு. கண்பார்வையை முதலடிக் கடைச் சீரிலிருந்து
திருப்பி
அடுத்த அடி முதர்சீர் வர எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தால்
புணர்ச்சி விதி இல்லை.(கேள்விப் பட்டுள்ளேன்)
என் எண்ணம்:இசைவாக்கு! என்ற வேண்டுகோள் இந்த அடியுடன்
முடிகின்றதே!

அன்புடன்,
தங்கமணி.

அகரம் அமுதா said...

விளக்கங்களுக்கு நன்றி பாட்டி அவர்களே! தங்கள் மூலமாக "கண்பார்வையை முதலடிக் கடைச் சீரிலிருந்து திருப்பி அடுத்த அடி முதர்சீர் வர எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தால்
புணர்ச்சி விதி இல்லை" என்னும் செய்தியை அறிந்துகொண்டேன். எனக்கு இலக்கணம் கற்றுத் தந்த என் ஆசானும் முதலடியின் இறுதிச்சீருக்கும் அடுத்த அடியின் முதற்சீருக்கும் உகரப் புணர்ச்சி பார்க்கத் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அப்பொழுது அதற்கான விளக்கம் தெரியா திருந்தது. தங்களின் இவ்விளக்கம் என்ஐயத்தைத் தீர்த்துவிட்டது. நன்றி