காலைக் காட்சி!
கவிமாமணி.இலந்தை அவர்கள் கொடுத்த ஈற்றடி:
"சோலையில் பறவைகள் சோம்பலை உதறியே
...சுறுசுறுப் பாவதைப் பார்!"
காலையில் உலகினை கதிரொளி எழுப்பிடும்
...கடமையை கண்டுகொள் வாய்!
வேலையின் அலைகளில் விரிகதிர் ஒளிசெயும்
...வியத்தகு பொன்னிறம் காண்!
பாலையில், கானகப் பரப்பினில் வெயில்தரல்
...பகலவன் நோக்கமொன் றே!
சோலையில் பறவைகள் சோம்பலை உதறியே
...சுறுசுறுப் பாவதைப் பார்!
காலைக் காட்சி (தொடர்ந்து)
சாலையில் இயங்கிடும் சந்தடி அரவமும்
...சாற்றிடும் காலையென் றே!
கோலமும் திருப்புகழ் கூறிடும் பாடலும்
...கோவிலாய் வீடுதோன் றும்!
பாலமாய் இணைந்திடும் பண்பினைக் கூட்டிடும்
...பயணமும் விடியலா கும்!
காலையின் ஆட்சியில் கண்டிடும் காட்சிகள்
...கலையென மகிழ்வுசேர்க் கும்!
காலைக்காட்சி
ஆடவும் பாடவும் அருமுடல் பயிற்சியும்
...அமையுநற் காலையா கும்!
ஓடவும் மனந்தனை ஒருமுகப் படுத்தவும்
...உயர்ந்திடும் காலையா கும்!
பாடமும் கருத்தினில் படிப்புமாய் இளைஞரின்
...பள்ளிநாள் சென்றுபோ கும்!
வேடமாம் முதுமையை வெறுத்திடா வாரிசின்
...விரிந்தநல் அன்புவாழ் க!
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment