Saturday, August 6, 2011

வானம் கூப்பிடு தூரமே!

"மா விளம் மா விளம் மா விளம் விளம்"
என்ற வாய்பாடு - எழுசீர் விருத்தம்.

கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே
ஒலிசெய் பம்பையும் துடிக்கும் தாளமாய்
...உவந்து நடமிடுக் கூத்தனும்
புலியின் தோலினைப் புனைவான் சீரினைப்
...புகழ்ந்துப் பாடியுய் யலாமதே
மலியும் வினைதடுத் தெமைகாக் குங்குடை
...வானம் கூப்பிடு தூரமே....1

மாட்டும் தூண்டிலில் மடியும் மீனெனெ
...மயலில் உழல்கிற நெஞ்சமே
கூட்டும் பத்தியில் கூடும் அடியரின்
...குழுவில் இருந்திடல் பெற்றியே
பாட்டில் ஒளிர்கிற பரமன் பேரினைப்
...பரவி மகிழ்வுற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைகாக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....2

ஊணில் உயிரினில் ஊனில் நிற்பவன்
...ஓங்கும் அழலென ஆனவன்
ஆணிப் பொன்னவன் ஆடல் வல்லவன்
...ஆர்க்கும் மறைபுகழ்ப் பாதனே
வீணில் பிறப்பிதில் மெய்யன் பேர்சொல
...மேவும் சுகம்பெற லாமதே
வாணி கர்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....3

வாள் நிகர்=வாணிகர்
ஆர்க்கும்=ஒலிக்கும்.

நிருத்தம் பயில்பதம் நினைந்து போற்றியே
...நெகிழும் அடியரும் பாடிடும்
எருத்தம் கறையுடை இறைவன் தண்ணருள்
...ஈடில் பேற்றினைத் தந்திடும்
உருத்தி ராக்கமும் ஒளிர்வெண் நீறணி
...உமையின் பங்கனின் பேரதே
மருத்தென் றெமை வினைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....4

மருத்து= மருந்து(வலித்தல் விகாரம்)
எருத்தம்= கழுத்து.

அஞ்ச வருகிற ஆறு வெம்பகை
...அலைக்கத் துயருறு நெஞ்சமே
மஞ்சு சேர்மலை மன்னன் எம்பிரான்
...வரம்தந் தடியரைக் காப்பவன்
தஞ்ச மளிமலர் தாளன் பேரினைச்
...சாற்றி உரைத்திட லாமதே
வஞ்ச வினைவிடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....5

7 comments:

Thangamani said...

வருக குணசீலன்!உங்கள் பாராட்டுக்கு
மிக்கநன்றி

Unknown said...

அருமையான,மரபுக்கவிதை!
மிகவும் நன்று
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

வருக என் வலைப் பக்கம்
தருக கருத்துரை.

Thangamani said...

புலவர் சா.இராமாநுசம்!
உங்கள் பாராட்டுக்கு மகிழ்வோடு நன்றி
சொல்கிறேன்.
தங்கள் வலையைப் பார்க்கிறேன்.நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

அம்பாளடியாள் said...

அருமையான மரபுக் கவிதை வாழ்த்த எனக்கு வயது போதாது .
அதனால் தங்கள் கவிதைக்குத் தலைவணங்குகின்றேன்.
மிக்க நன்றி அம்மா தங்களின் பகிர்வுக்கு இந்தச் சிறுபிள்ளையும்
பலகவிதைகள் வரைதுள்ளாள் பாடல்களும் எழுதியுள்ளாள்
முடிந்தால் youtube ல் aathi sakthi என்று குடுத்து என் பாடல்களைக்
கேட்டு உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்.உங்கள் வாழ்த்து
எனக்கு கிடைத்தால் மென்மேலும் என் ஆக்கங்கள் சிறப்புறும்
என்பது என் எண்ணம் .

Thangamani said...

அன்புள்ள அம்பாளடியாள்!
உங்கள் பாடல்கள் அருமை!இன்னும் படிக்கிறேன்.
அருள்தரும் மருவத்தூர் ஓம் சக்தி சூலம்! பாடல் கேட்டு
மகிழ்ந்தேன்!நன்றி!
உங்கள் அழகான பாடல்களுக்கு என் வாழ்த்துகள்!பாராட்டுகள்1!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே //

மனக்கிலேசம் அகன்றது அம்மா. நன்றி.

Thangamani said...

மிக்கநன்றி,கீதா!