Monday, July 25, 2011

பராய்த்துறை மேவிய பரனே!--1

எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு

மறலியை அன்று சினமிக எற்றி
...வழிபடும் சிறுவனைக் காத்தாய்
பிறவிசெய் நோயால் பிணியுறு வேனைப்
...பெருகுமுன் கருணையில் காப்பாய்
கறவையின் அன்பில் களித்திடும் கன்றாய்க்
...கண்ணுதல் உனருளில் உய்வேன்
பறவைகள் நாடிப் பைம்பொழில் கூடும்
...பராய்த்துறை மேவிய பரனே....1

சகடென உருளும் சகமுறு வாழ்வில்
...தளைவினை விடவருள் எந்தாய்
சகலமும் உன்றன் சரணிணை என்றே
...தண்மலர் தூவினேன் காப்பாய்
பகடதில் ஊரும் பரமனுன் நாமம்
...பரவிடும் பேறினைத் தாராய்
பகலவன் ஒளியில் பூமலர் தடம்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....2

No comments: