Tuesday, August 16, 2011

இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

('மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)

சிம்மா தனமின்றி சிந்தை மகிழ்வாக
வெம்மா வனமேகும் மெய்யன் இராமன் தான்
அம்மா வினைதீர ஆர வழிபட்ட
எம்மான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....1

'மெய்சேர் பொடிபூசும் வேதன் அடிபோற்றும்
வெய்தாய் இராமன் தன் மிஞ்சும் வினைதீரச்
செய்தான் புரமூன்றும் தீயா கிடஅம்பொன்
றெய்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....2

வேசம் பலவேற்று விந்தை விளையாடல்
நேச முடன்செய்த நிமலன் அருளென்னே
பேச இனிக்கின்ற அஞ்சக் கரத்தானாம்
ஈசன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....3

சாந்து மணமேவும் தண்ணார் தமிழ்வேதம்
மாந்தி மகிழ்வாகும் மதியன் உமைபங்கன்
காந்தி ஒளிர்கின்ற கண்கள் அருள்தன்னை
ஏந்தி அமர்கோவில் இராமேச் சுரம்தானே....4

சாந்து=சந்தனம்.

கூற்றை உதைசெய்யும் கூத்தன் திருஞானப்
பேற்றை அருளாகப் பெய்யும் நிதியாகி
மாற்று நிறைபைம்பொன் மணியா யொளிர்கின்ற
ஏற்றன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....5

No comments: