Sunday, June 19, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

தானதன தானதன தானதன தானா" என்ற சந்தத்தில்


கண்டமணி நஞ்சுதிகழ் கண்ணுதலை வேண்டி
செண்டுமலர் சூட்டியவன் சேவடியைப் போற்றும்
தொண்டருளளக் கோவிலுறை தூயஒளி யானான்
ஒண்டமிழ்கள் கொண்டுதொழும் ஒற்றிநகர் ஆமே...1

வேதமென தீம்பதிகம் மெய்யடியர் ஓத
நாதமொடு பூங்கழல்கள் நர்த்தனங்கள் ஆட
கோதறுவெண் கூன்பிறையில் கோலமுறு சீலன்
ஓதமலி கின்றதிரு ஒற்றியுறை கோனே...2

தாழியுள என்பினையும் தந்தருளும் பெண்ணாய்
காழியுறை ஆளுடயார் கண்டுகொண்ட தெய்வம்
சூழிடரும் அகலவருள் தோன்றவரும் ஐயன்
ஊழிமுதல் ஆடுமிறை ஒற்றியுறை கோனே....3

முன்னவனும் பின்னவனும் மூலமுதல வன் தான்
இன்னமுத மென்னநஞ்சை ஏந்தியுண்ட வள்ளல்
என்னதுயர் நொந்துறினும் இன்னருளில் உய்ப்பான்
உன்னுமடி யார்க்கருளும் ஒற்றியுறை கோனே....4

சூதுறையும் தீமையழி தூயமலர்த் தாளை
யாதுமவன் என்றடையின் அன்பருளம் ஆள்வான்
போதுமலர் பைம்பொழிலில் பூமதுவை நாடி
ஊதுகிற வண்டுமிகும் ஒற்றியுறை கோனே....5

No comments: