Wednesday, September 28, 2011

என்பணிஅரன்துதி!--1

என்பணிஅரன்துதி
---------------------------
'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' - அறுசீர் விருத்தம்;
மாச்சீர் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்;
(1-3-5 சீர்களில் மோனை)

கொய்த நாண்மலர் கோத்தெழில் மாலைகள் குலவியே தோள்சேரும்
பைதல் வெண்பிறை பாயலை கங்கையைப் பாந்தமாய் சடையேற்பான்
வெய்தி டர்தரு வினைச்சுழல் மீட்பவன் விண்திரி புரமூன்றை
எய்தெ ரித்திடும் இறைத்துதி என்பணி இனியிலை இன்னாவே....1

பைதல்=இளைய
குலவுதல்=விளங்குதல்.

கரவு நெஞ்சமாய் கணந்தொறும் பொய்யினைக் கழறிடும் என்னாவே
பரவு வெவ்வினை படுவழி அறிகிலை பறைதிநான் என்னாவேன்
உரவு நீர்சடை உற்றவன் ஓங்குதீ ஒளியவன் எரிகானில்
இரவு செய்நடம் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே!....2

உரவுநீர்=ஆறு என்னும் பொருளில்.

1 comment:

Geetha Sambasivam said...

உரவுநீர்=ஆறு என்னும் பொருளில்//

புதிய சொல் தெரிந்து கொண்டேன்.