Monday, August 8, 2011

வானம் கூப்பிடு தூரமே!-- 2

வீணா யுழன்றிட வெருதா கின்றதோ
...வேண்டும் பிறவியில் நெஞ்சமே
காணா உருவிலி காட்சி யாகவே
...காணும் உருவினன் காப்பவன்
பூணாய் எருத்தினில் பொலிவார் பாம்பினை
...பூணும் எந்தையின் பேருரை
வாணா ளதன்பய .னெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....6

நிலையாய் உறுதுணை நிமலன் தாளிணை
...நிதமும் தொழுதிடு நெஞ்சமே
கலைசேர் நிலவுடன் கங்கை சூடிடும்
...கருணைக் கடலருள் செய்பவன்
அலைமேல் எழுவிடம் அமுதாய் உண்டவன்
...அணிசேர் அஞ்செழுத் துரையதே
வலையாய் சூழ்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....7

கொட்டும் முழவொலி குமுறும் பம்பையின்
...கூடும் ஒலியினில் ஆடுவான்
சுட்ட நீறணி சோதி மேனியன்
...துணையென் றிருந்திடு நெஞ்சமே
மட்டுவார் குழல் மங்கை பங்கினன்
...வணங்கி அஞ்செழுத் துரையதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....8

குமுறுதல்= அதிர்வொலிசெய்தல்.

சுற்றாய்ச் சுழல்கிற சுமைசேர் வாழ்விதில்
...சுகமே அவனருள் நெஞ்சமே
செற்றான் முப்புரம் தீயில் வெந்திடத்
...தேவர் தொழுதிடும் நம்பனே
சற்றா யினுமவன் தாளை எண்ணியே
...சாற்றும் அஞ்செழுத் தாமதே
வற்றா பவம்தடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....9

கண்டம் கறைபட கடலின் நஞ்சுணும்
...கருணை போற்றிடு நெஞ்சமே
தொண்டர் தம்பிரான் தூய அன்பினில்
...தோன்றாத் துணையெனக் காப்பவன்
துண்டு பிறையினை சூடும் எம்பிரான்
...துய்ய அஞ்செழுத் தோததே
மண்டு வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....10

2 comments:

Geetha Sambasivam said...

படிக்கப் படிக்க மனம் லேசாகிறது.

Thangamani said...

மிக்கநன்றி,கீதா!