Monday, November 24, 2008

இறை செயலாம்!

விந்தைமிகு சக்தியில் விரைந்திடும் கோள்களின்
...வேகமும் நெறிகளும் எவர்பொறுப்பாம்?
முந்தையபல் யுகங்களாய் முறையுடன் நீதியின்
...ஒழுங்குடன் சுழலுதல் எவர்செயலாம்?
பந்தவினைத் துன்பினைப் பற்றிடும் மாந்தரைப்
...பரிவுடன் காத்திடும் இறைசெயலாம்!
சந்ததமும் அவனையே சார்ந்திடும் சிந்தையும்,
...,தளர்விலா வாழ்வையும் வேண்டுவமே!

2 comments:

Anonymous said...

`வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ என்பார் திருநாவுக்கரசர் பெருமானார்.

`வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ’ என்பது மாணிக்கவாசகர் அருள்மொழி.

நம் மெய்யாசிரியர்கள்தம் திருவருள்மொழிக்கிணங்க நீங்கள் `சந்ததமும் அவனையே சார்ந்திடும் சிந்தையும் தளர்விலா வாழ்வையும்’ வேண்டுவது மகிழ்ச்சி தருகிறது.

Thangamani said...

திரு.நம்பி அவர்களுக்கு,
மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினீர்கள்!
மெய்யாசிரியர்கள் இறையருள் திறத்தை,
வியந்து அநுபவித்துத் தாங்கள் உணர்ந்ததை
மாந்தரும் அனுபவிக்க,அருட்பாடல்களாய் அளித்தத்
திறம் போற்றுவோம்!
மிகவும் நன்றி!

அன்புடன்,
தங்கமணி.