Saturday, December 27, 2008

குமரன் அழகு!





மழையில் கலவம் மகிழ்வுற விரித்திடும்
...மஞ்ஞையின் நடனம் அழகு!
பொழிலில் மணமாய்ப் புதுப்புது நிறங்களில்
...பூத்திடும் மலர்கள் அழகு!
விழையும் உளமாம் வெளியினில் நிலைத்திடும்
...சித்தமும் மவுன அழகு!
இழையும் அணியும் இசைவுடன் இலங்கிடும்
...இன்னருள் குமரன் அழகு!

7 comments:

கிரி said...

அழகென்றால் முருகனே!

Thangamani said...

அன்புள்ள கிரி!
ஆமாம்.அழகே முருகன்!
"அழகெல்லாம் முருகனே!" இந்தப் பாடலை
சூலமங்கலம் சகோதரிகள் பாடிக் கேட்டதுண்டு!
கருத்துக்கு நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

jeevagv said...

//கலவம் விரித்த மட மஞ்ஞை//
பொருநர் ஆற்றுப்படை!
அருமை!

ஓர் வினவல்:
இன்னருள் = இனிய + அருள்?

Thangamani said...

அன்புள்ள ஜீவா!
பொருநர் ஆற்றுப்படையில் அழகான ஒரு
எடுத்துக்காட்டு கொடுத்தீர்கள்! அருமை!
மிக்க நன்றி!
ஆம்.இன்ன‌ருள்=இனிய‌ அருள் தான்."இன்ன‌று நீர்க்க‌ங்கை"
"இன்னுயிர் த‌ந்தெமை"என‌ பார‌தியும் பாடுகின்றார்!
மிக்க‌ ந‌ன்றி!

அன்புட‌ன்,
த‌ங்க‌ம‌ணி.

jeevagv said...

அருள், எப்போதுமே இனிது அல்லவோ!
எதற்காக இனிய அருள் என குறிக்க வேண்டும் - என நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.
இலக்கியத்தில் பலரும், 'இன்னருள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்!.
அனேகமாக - சந்தத்திற்காக அப்படிச் செய்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது!.
திரைப்பாடல் ஒன்று:
"இன்னருள் தரும் அன்னபூரணி..."

Thangamani said...

அன்புள்ள ஜீவா!
நீங்கள் கூறுவதுபோல சந்தத்திற்கும்
இசைகிறது!
இன்னருள் என்ற சொல்,
அருளைச் சிறப்பிக்க "இன்னருள்" எனக் கொள்ளலாமே!
"செஞ்ஞாயிறு" என்றால் ஞாயிறைச் சிறப்பிக்க
செம்மை ஞாயிறு என்பது போல! நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

jeevagv said...

//அருளைச் சிறப்பிக்க "இன்னருள்" எனக் கொள்ளலாமே!//
ஆம், அம்மா, நல்லது!
பண்புத்தொகை போலும்!
நன்றி!