Sunday, December 21, 2008

கூட்டம்!

கண்ணுக்குக் காட்சிகளே கூட்டம், சிந்தைக்
...களத்துக்கு எண்ணங்கள் கூட்ட மாகும்!
உண்ணிற்கும் நினைவலைகள் ஒருகூட் டம்தான்,
...உருவாகும் கருத்தினிலே கலைகள் தோன்றும்!
மண்ணுக்குப் பெருகுகின்ற மக்கள் கூட்டம்
...விண்ணுக்குப் பொழியுமழை மேகக் கூட்டம்
பண்ணுக்கு அருட்பாக்கள் படைப்புக் கூட்டம்!
...பலவிதமாய் திருவருளைப் பாடிப் போற்றும்!

3 comments:

jeevagv said...

ஆகா, அருமையான படைப்பு!
ஒரு வினவல்:
//உண்ணிற்கும்// = உள்+நிற்கும்?

Thangamani said...

அன்புள்ள ஜீவா!
பாராட்டுக்கு மிகவும் நன்றி!

ஆம்.நீங்கள் கூறுவது சரி.

உள்+நிற்கும்= உண்ணிற்கும்.
குறளில் ஒரு எடுத்துக் காட்டு,
"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்."
கண்+நின்று=கண்ணின்று
முன்+இன்று=முன்னின்று

அன்புடன்,
தங்கமணி.

இப்னு ஹம்துன் said...

கூட்டங்கள் பலவுண்டு கொள்கைக் கேற்ப
...கூடாத நெறியினுக்கும் கூட்டம் உண்டு
ஆட்டங்கள் பாட்டங்கள் அதிகம் கண்டு
...அதனாலே வாழ்வினையும் தொலைப்பார் உண்டு
தேட்டத்தில் மெய்ஞ்ஞானம் தெரிதல் என்று?
....தெளிவான நல்லறிவும் துலங்கும் அன்று
வாட்டத்தில் இருக்கின்ற உயிர்கள் கண்டு
...வழியொன்று காட்டுதலே என்றும் நன்று!
---------
(அம்மா, என் வலைப்பூவுக்கு வருகைத் தந்து கவிதைகளில் தங்களின் ஆலோசனை கருத்துகளை அளித்திடக் கேட்டுக்கொள்கிறேன்.