Wednesday, January 7, 2009

மணல் கோவில்!(படக் கவிதை)

கடலலையில் விளையாடிக் கையளைந்து மணல்வெளியில்
...கலைவண்ணம் விஞ்சிடவே என்னசெய்தாய்?
சுடரெனவும் வெங்கதிரோன் சுடுவதும்நீ உணர்ந்திலையோ?
...தொடர்ந்திடுமுன் செயலதனில் கண்ணானாய்!
தடமெனவும் மதிலெனவும் தலமமைத்து இறையவனார்
...சிவரூபம் லிங்கமென உருவமைத்தாய்!
படமெனவே இளமனதில் பதிந்திருந்த நினைவுகளும்
...பக்குவமாய் ஆலயமாய் வளர்ந்ததுவே!

காற்றுமழை வாராமல் கருணைசெய வேண்டுகிறேன்
...கலைந்திடாமல் ஆலயமும் விளங்கிடவும்
சாற்றிமலர் தூவிடவும் சந்நிதியில் பாடிடவும்
...சரம்சரமாய் கொன்றைதும்பை பூத்திருக்கும்!
ஏற்றமுடன் மண்சுமந்து எளியவந்திக் காளெனவே
...இறைவனவன் பிட்டுக்காய் அடிபட்டான்!
மாற்றறியாப் பொன்னான மகேசனின் அன்பினையே
...மனமுருகச் சொல்லிடுவேன் கேள்!குழந்தாய்!

கண்மூடித் துதிசெய்யும் கண்மணியே!கருத்துடன்நீ
...கட்டிவைத்த ஆலயமுன் கைவண்ணம்!
வெண்ணீறன் நீலகண்டன் விளையாடல் அறிந்திடுவாய்!
விழைந்தமைத்த மனக்கோவில் உறைபவனாம்!
தொண்டாகி நின்றவூர் தூயோனின் அம்பலத்தைத்
...தொழும்பூச லார்மனமே குடிலென்றான்!
மண்ணாலே சிவலிங்கம் மனங்கொள்ள நீசமைத்தாய்!
...மறையாமல் கணினியில் நின்றிடுமே!

நின்ற ஊர்--திருநின்ற ஊர்

2 comments:

திவாண்ணா said...

அற்புதம்!

Thangamani said...

அன்புள்ள திவா!
பாராட்டுக்கு மனமுவந்த நன்றி.

அன்புடன்,
தங்கமணி.