Tuesday, January 13, 2009

பச்சை வண்ணங்கள்!-௨.(தொடர்ச்சி)

பச்சை பசுங்கிளிகள் பச்சைமயில் தோகையெழில்
கச்சைக் கட்டிநின்று காட்டுமுயர் பச்சையென்று

பரந்த வயல்வெளியில் பசுமையே பாய்விரிக்கும்
விருந்தென இயற்கைத்தாய் விஞ்சைகள் புரிகிறாள்

விசும்புயரும் தருஇனங்கள் விருட்சங்கள் சோலைகள்
திசைமறைக்கும் வழிமறக்கும் தேடரிய பசுவனங்கள்

மருத்துவ குணமுடைய மரம்செடிகள் செல்வங்கள்
கருத்தினில் கொண்டிடுவோம் காத்திடுவோம் பசுமையினை

கண்நிறைந்த பச்சைக்காய் கறிகளுடன் கீரைகள்
உண்ணநல் உணவாகும் உடல்நலமும் உயர்வாகும்

திருமண மண்டபத்தில் திகழ்குலையாய் வாழைமரம்
தருகின்ற வெற்றிலைச்சீர் தாம்பூலம் நிறைவுபெறும்

வீட்டினிலே செடிகொடிகள் விதவிதமாய் வளர்த்திடுவோம்
தோட்டமாய்க் காய்கனிகள் தோதாக விளைவிப்போம்

பச்சைக் குதிரையெனும் பாங்கான விளையாட்டும்
இச்சையுடன் விளையாடார் எவருண்டு சொல்லிடுவீர்?

பச்சைக் குழந்தைஎனப் பகன்றிடுவர் சிசுவினையே
பச்சை யெனும்பெயரும் பருவமாம் புனிற்றிளமை

பச்சைநிற விளக்கெரிய படபடக்கும் வாகனங்கள்
அச்சமின்றி சாலையினை அலையெனவே கடந்திடுவர்

பச்சைக் கொடியசைய பச்சைநிற விளக்கெரிய
புஸ்புஸ் பெருமூச்சாய்ப் புறப்படுதே தொடர்வண்டி

பசுமைநிறம் நம்கொடியில் பண்பாய் விளங்கிடுதே!
திசையெங்கும் புதுமைதனைத் தேடி உழவுசெய்வோம்!

கற்றவர்க்கு எளிதாகக் காட்சிதரும் பச்சையட்டை
பெற்றிடுவர் வெள்நாட்டில் பெரிதுவந்துத் தங்கிடுவர்!

அயல்நாட்டில் வாழ்ந்திடவே அலைந்திளைஞர் வாடுகின்றார்!
இயலாதப் பெரியோர்கள் ஏங்கிடுவர் மக்களுக்காய்!

மங்கையர்கை சிகப்பழகு மருதாணி இலைகளினால்
செங்கையாய் அழகுபெறச் சிறுமியரும் விரும்பிடுவர்!

பூங்கொடிகள் மான்மீன்கள் பொலிவான கோலங்கள்
பாங்குடனே குத்திடுவர் பச்சையினில் கலைதிகழ!

பச்சையெனும் உயர்நிறத்தைப் பாராட்டி மதித்திடுவோம்!
நிச்சயமாய்க் கருணையெனும் நித்தியமும் பசுமையன்றோ?

அஞ்சனையின் தவப்புதல்வன் அனுமனவன் ராமபக்தன்
சஞ்சீவிப் பருவதத்தைத் தந்ததுமோர் அருஞ்செயல்தான்!

பச்சை நிறத்தழகா! பார்வதியின் சோதரனே!
துச்சமென வினைநீங்கத் துதித்திடுவேன் நலமருள்வாய்!

(தமிழ் எழுத்துரு பிரச்சினையால் மறுபடியும் இடுகிறேன்)

1 comment:

Erode Nagaraj... said...

புத்தாண்டு வாழ்த்துகள் :) :) :)