Saturday, May 8, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 7

பொதிமிகு சுமையென வருவினை பொடிபட இணையடி அருளுவன்
சுதியொடு எழுமிசை இனிதுறு சுகமென உணர்வதில் நிறைபவன்
புதிரொடு புதிரினில் விடையெனும் புரிதலை அளி இறை குளிருறு
மதிதவழ் சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Thursday, May 6, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் -- 6

பதமிடு நடமதில் மனமதும் பரவச நிலையினில் மகிழுறும்
இதமுடன் மவுனமும் உணர்வினில் இசைவுற அளிசெயும் குருபரன்
சதமெனும் அவனருள் நினைபவர் தமதிறை எழிலுடன் மிளிர்கிற
மதகரி உரியணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Wednesday, May 5, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் ---5

முழுமுத லிறைவனை அகமதில் முறையுடன் நெகிழுள மொடுதொழும்
குழுவினில் இணையவும் அருளுறு குருவடி பணியவும் புரிபவன்
உழுவையி னுரியுடை யுடனொரு உரகமு இடையணி குழகனின்
மழுவமர் கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Tuesday, May 4, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 4

பிழையையும் குணமெனும் பெருநிதி யவனடி சிரமதில் அணிகுவம்
இழையணி பணியுடன் இணர்மலர் தொடையலில் இசைவுடன் ஒளிர்பவன்
விழைகிற அடியவர் விதமுற நடமிடு பரமனின் அலைநதி
மழைபொழி சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

Monday, May 3, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 3

பழவினை யதிலுழல் விழலெனும் பயனறு பிறவியின் தளையற
அழலுட னுழைதிகழ் கரமுடன் அபயமு மளிதயை மிகுபவன்
தழலுறு சுடலைவெண் பொடியணி சடையவன் இடமுறை உமையுடன்
மழவிடை மிசைவரும் அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

உழை=மான்

Sunday, May 2, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 2

துணிபிறை யணிசடை யினில்நதி துலங்கிட வருநம திறைவனும்
அணிசெயும் நுதல்விழி யதிலுறு அழகினில் திகழ்ந்திட வருபவன்
தணியுறும் பனிமலை யுறைசிவன் சதியுமை அருள்பெறு பவர்தொழு
மணியொளிர் மிடறுடை அரனகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

தணி=குளிர்ச்சி.

மயிலையை அடைபவர் மகிழ்வர்

விலையிலை யெனுமுயர் வழிசெல விதிதரும் இடரதும் விலகிட
வலையெனும் பிணிசெயும் பவமதன் மயலிருள் தொலைவுற அருள்பவன்
கலைமதி நதிசடை மலர்பதம் கருதிட வருபவன் இடமதில்
மலைமகள் இணையரன் உறைநகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

Tuesday, April 27, 2010

ஆலவாய் அண்ணல் ---5

விந்தை யான விரிசடை கொண்டவன்
அந்த மில்நடம் ஆடிடும் தாண்டவன்
சுந்த ரேசனாய்த் தோன்றி அருள்பவன்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

நாவி னுக்கிதம் நல்குமஞ் சட்சரத்
தேவி னைத்தெளிந் தேத்தும் அடியவர்
பாவி னுக்குப் பரிந்தருள் செய்பவன்
சேவில் ஏறும் திருஆல வாயனே!

ஆலவாய் அண்ணல் --4

இந்த னம்சிர மேற்றே இசைத்தமிழ்
சந்த தம்வெலத் தந்தருள் செய்தவன்
சிந்தை மேவிடு செஞ்சடை ஈசனாம்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!

இந்தனம்=விறகு(விறகுவெட்டியாய் பாணபத்திரனுக்கருள்செய்தது)
வெல்ல =வெல(இடைக்குறை)

ஓயா அன்பினில் உன்னிட நிற்பவர்
நோயாம் வல்வினை நூக்கிடும் அங்கணர்
"நேயா! வந்தருள் நின்மலா!"என்றிடத்
தாயாய்க் காப்பவர் ஆலவாய்த் தந்தையே!

நூக்குதல்= தள்ளுதல்.

Friday, April 23, 2010

ஆலவாய் அண்ணல்! -- 3



விரியும் வானில் மிதந்திடும் கோள்களை
உரிய பாதை ஒழுங்கில் சுழன்றிடப்
புரியும் அந்தமில் புண்ணியச் சோதியர்
அரிவை பாகர் எம் ஆலவாய் அண்ணலே!

தந்த இன்னலைத் தாங்கிடும் பக்தியில்
நந்தன் தில்லையின் நாதனைக் கண்டனன்
அந்த மொன்றிலா அன்பினுக்(கு) ஆட்படும்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!