Wednesday, July 31, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')--2

துஞ்சிட நமனையே நெஞ்சினில் உதைத்துடன்
கெஞ்சிய சிறுவனுக் கஞ்சலைத் தந்தவன்
செஞ்சடையானுறை தென்குடித் திட்டையை
தஞ்சமென் றடைபவர் சஞ்சலம் தீருமே....3

கன்னலின் வில்லினன் கனல்பட விழித்தவன்
இன்னலில் காத்திடும் முன்னவன் மதியணி
சென்னியன் மேவிடும் தென்குடித் திட்டையை
முன்னிடும் அடியவர் முன்வினை நீங்குமே....4

முன்னுதல்=கருதுதல்.

வரியதள் அணிபவன் மழவிடை ஊர்பவன்
விரிசடை சேர்பிறை மிளிர;புன் நகையினால்
திரிபுரம் எரித்தவன் தென்குடித் திட்டையை
பரிவொடு பணிபவர் பழவினை பாறுமே....5

 வெண்பனி மலையினன் விண்ணதிச் சடையினன்
பெண்ணுமை பங்கினன் பிஞ்ஞகன் மருமலி
செண்பக மாலையன் தென்குடித் திட்டையை
கண்பனித் தேத்துவார் கடுவினை கழலுமே....6

வேயினில் கீதமாய் வெளிதவழ் காற்றவன்
நோயினில் மருந்தவன் நோற்றிடு நாமமே
தீயினில் ஆடுவான் தென்குடித் திட்டையை
வாயினால் வாழ்த்துவார் வல்வினை மாயுமே....7







2 comments:

அம்பாளடியாள் said...

அற்புதமான இந்த சொற் பிரயோகம்
மிகுந்த வியப்பை அளிக்கிறது ......!!!!
வணங்குகிறேன் அம்மா .

Thangamani said...

உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும்
மிக்கநன்றி அம்பாள் அடியாள்!