Sunday, November 18, 2012

மழபாடி வயிரத்தூண் --5

உயர்வென்றும் தாழ்வென்றும் உருளும் வாழ்வில்
...உத்தமன் தாள் தொழுபவர்க் குய்வைத் தந்தே
துயர்செய்யும் இருவினையைத் தொலைப்பான் தன்னைச்
...சோதிபொங்கும் அருணமலை சுடரா னானைச்
செயல்தன்னில் விளைவாகத் திகழ்வான் தன்னைச்
...சீராக  அண்டமெல்லாம் செலுத்து வானை
வயல்சூழும் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....9

தூமதிசேர் வார்சடையன்  துணைத்தாள் பற்றித்
...தொடுத்தமலர்க் கொன்றைத்தார் சூட்டிப் போற்றின்
தாமதியா  தருள்செய்துத் தாங்கு வானைத்
...தருநீழல் அமர்மோனத் தவசி தன்னைச்
சேமநிதி யாயிடரைத் தீர்க்கும் தேவைச்
...சேவூரும் பெம்மானை, சீலன் தன்னை
மாமதில்சூழ் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....10

1 comment:

Geetha Sambasivam said...

அனைத்தும் அருமை.