Friday, January 28, 2011

தேரோடும் திருவிடை மருதூர்!


மருதமர நிழலின்கீழ் மங்கையொரு பங்குடையான்
அருளுருவில் காட்சிதரும் அண்ணலவன் மகிழுமிடம்
பொருவினையைத் தீர்ப்பவன்சீர்ப் புகழடியார்ப் போற்றிசெயத்
திருமலியும் தேரோடும் திருவிடை மருதூரே ! ...6

எவ்விதமும் இணையில்லா எழிலாடல் செய்திடுவான்
திவ்வியனாம் தேசுடைய செஞ்சடையன் மகிழுமிடம்
பவ்வியம்கொள் அடியவர்கள் பரமன்பேர் தொழுதேத்தச்
செவ்விமிகு தேரோடும் திருவிடை மருதூரே! ...7

நிகழ்கின்ற யாவுமவன் நீதியென்று நினையன்பர்
இகழ்வுறினும் அருள்செய்யும் இறைவனவன் மகிழுமிடம்
முகிழ்பக்தி மனமுடையோர் முக்கணனைத் தொழுதேத்தத்
திகழ்கின்ற தேரோடும் திருவிடை மருதூரே! ...8

மருண்டயரச் செய்வினையால் வரும்துன்பம் நீக்குபவன்
சுருண்டமுடி செஞ்சடையன் சொக்கேசன் மகிழுமிடம்
புரண்டுவரும் அலையொலியாய்ப் போற்றுமன்பர் ஒன்றாகத்
திரண்டிழுக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...9

நாவிற்கு மதுரமவன் நாமமது நவின்றிடவே
பாவிற்குள் நின்றருள்வான் பரமனவன் மகிழுமிடம்
கோவிற்கு அடியரெலாம் கொலுவிருப்போன் வீதியுலா
சேவிக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...10

2 comments:

Geetha Sambasivam said...

எல்லாப் பாடல்களுமே அருமையாய் இருக்கின்றன.

Thangamani said...

அன்பு கீதா,
பொறுமையாகப் படித்து,கருத்துரைத்ததற்கு
மிக்கநன்றி!