Tuesday, January 18, 2011

திருஆனைக்கா ஈசன்! -9

ஆதி அந்த மென்றொன் றில்லானே
...அன்புக் குடும்ப முடைய இல்லானே
மோதி அலைக்கும் ஊழைத் தீர்ப்பவனே
...முறையாய் ஆவின் துயர்க்குத் தீர்ப்பவனே
சோதி ஒளிரும் அருவாம் தழலாடி
...சுடுதீ கானில் நடம்செய் தழலாடி
பூதி அடைவோர் உள்ளம் நிறைந்தானே
...பொழில்சூழ் திருவா னைக்கா நிறைந்தானே! ....9

2 comments:

sury siva said...

// அன்புக் குடும்ப முடைய இல்லானே //

ஈண்டு இவ்வுலகத்தே அவன் படைத்த எல்லா உயிர்களையும் காப்பவன்
அவனே என்று சொல்கிறோம். அவனுடைய அன்புக்கு இணையில்லை எனவும்
ஈசனைப்புகழ்கிறோம். அப்படி இருக்கையில், அன்புக்குடும்பமுடைய இல்லானே
என்பதன் பொருளதனை சற்று விளக்க வேண்டுகிறேன்.

தங்களது பாடலை பாகேஸ்வரி ராகத்தில் பாடுகையில் மன நிம்மதி தருகிறது.

சுப்பு ரத்தினம்.

Thangamani said...

// அன்புக் குடும்ப முடைய இல்லானே //

திரு.சூரி அவர்களுக்கு,
உமையம்மை,கணபதி,முருகன் இவர்களை
குடும்பமாகக் கொண்ட இல்லான்(இல்லத்தவன்) குடும்பத்தன்.

இல்லாள்,இல்லான் என்று இல்லத்தலைவி,தலைவனைக்
கூறுவதுபோல், இல்லான் என்று எழுதினேன்.
பாகேஸ்ரீ ராகம் உருக்கமான ராகம்.பாடியதற்கு
நன்றி !

அன்புடன்,
தங்கமணி.