Wednesday, January 5, 2011

திருவானைக்கா ஈசன்!

==============
திரு இயமகம்.
==============

ஆடல் புரிவான் மதுரைக் கூடலிலே
...அடியார் மனமும் பக்திக் கூடலிலே
வேடம் புனையும் விருப்ப முடையானே
...வேண்டும் பலிதேர் சிரம்கை முடையானே
காடன்,உமையாள், குகனும் மலையாரே
...கருணை அவர்தம் இயல்பே மலையாரே
பாடல் விழைவன்;உகப்பன் ஏற்றினையே
...பணிவாம் திருவா னைக்கா ஏற்றினையே!

விளக்கம்:
சுந்தரேசனாய் மதுரைக் கூடலில், திருவிளையாடல்கள் புரிவான். அடியவர் உளமும் பக்தி நெறியில் ஒன்று கூடும்.

விதவிதமாய்(விறகுவெட்டி, கூலியாள், வளையல் வியாபாரி...போன்ற) வேடங்கள் ஏற்பதை
விரும்புவான்.(அடியருக்காக)தனக்குத் தேவையான உணவைப் பிச்சையாக ஏற்கும்
கையொடுள்ள முடைநாற்றமுள்ள பிரமகபாலம் கொண்டவன்.

குடும்பமே மலைவாசிகள்.(சிவன்,உமை,முருகன்) தயை செய்வது அவர்களின் இயல்பே
எனவே மலைத்து வியப்பதற்கொன்றுமில்லை.

அன்பர்களின் பாடலை விழைபவனாய் இடபத்தை வாகனமாய்க் கொள்வதில் மகிழ்பவன்.
அந்தத் திருவானைக்கா காளையைப் பணிவோம்.

அன்புடன்,
தங்கமணி.

1 comment:

Uma said...

பலித்தேர் சிரம்கை முடையானே......பொருள் புரியவில்லை
விளக்கம் படித்து புரிந்து கொண்டேன்.
நன்றாக உள்ளது.
உமா.