Sunday, November 28, 2010

ஆலவாய் ஈசனே!-- 1


விரிவான் கங்கையன் வெண்ணீ றணிசிவன்
பொரியார் வண்டுசூழ் பூம்பொழில் தளியான்
தரியான் அன்பிலார் தம்முளம் அவர்க்கே
அரியான் ஆலவாய் மேவிய அண்ணலே....1

முன்பின் இல்லா ஆதியாம் மூலமாம்
அன்பில் ஆளும் அருள்நிறை வள்ளலாம்
துன்பில் தோன்றாத் துணையாய்த் தோன்றிடும்
என்பொன் ஆலவாய் மேவிய ஈசனே.....2

வீற்ற இன்னருள் கோலமும் வெவ்வினை
மாற்றும் ஆறுதல் தந்திடும் மாயமென்?
போற்றும் அன்பரின் பற்றெனும் பூரணன்
ஏற்றில் ஏறுமெம் ஆலவாய் ஈசனே...3

புறவும் ஆழியும் நின்னருள் போற்றிடும்
கறவைக் கன்றென உன் தாள் கருதியே
நறவு சேர்மலர் தூவினேன் நைவினை
அறவந் தேத்துமெம் ஆலவாய் அண்ணலே....4

புறவு=காடு,நறவு=தேன்,வாசனை
கறவை=பசு.....

கல்லால் தாக்கினும் கனிந்ததைத் தாங்குவான்
ஒல்லாச் சாட்டையின் ஊறினை ஒப்புவான்
சொல்லால் கூடிடாத் தூயமெய் அன்பினால்
எல்லாம் நல்கும்நம் ஆலவாய் அண்ணலே....5

கல்லால்=கல்லினால்.(சாக்கிய நாயனார்)
ஒல்லா=பொறுக்கமுடியாத.

Sunday, November 21, 2010

அடியேற் கருள்வாயே!(திருவண்ணாமலை)


வண்டார் மலர்மாலை வடிவாய் இசைந்தாடக்
கண்டோர் உனைநாடும் கதியாய் வருவாயே
பண்டாய் நவமானாய் பதியே பரமேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....6

எண்ணாய் எழுத்தாகி இயம்பும் பொருளாகிப்
பண்ணார் இசையாகிப் பரவும் துதியானாய்!
கண்ணோர்க் களியாகக் காணும் பெருஞ்சோதி
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.... 7

எண்ணேன் இமைப்போதுன் இணைத்தாள் சிரமேற்கப்
பண்ணேன் உனைநாளும் பரவும் துதிபூசைத்
தண்ணார் தடம்சோலைத் தருசூழ் வனமோங்கும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....8

கண்ணா யிரங்கொண்ட காளி யவள்கேள்வா
விண்ணா றினையேற்கும் விரிசெஞ் சடையோனே
வெண்ணீ றணிவோனே விந்தை அழலோனே
அண்ணா மலையோனே அடியேற் கருள்வாயே....9

விண்ணோர் அமுதேஎம் வினையாம் பவம்தீர்ப்பாய்
பெண்ணோர் புறம்வைத்தாய் பிறைவார் சடையோனே
மண்ணோர் தொழும்ஞான மறையோன் ரமணர்சேர்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....10

Sunday, November 14, 2010

அடியேற்கு அருள்வாய் (திருவண்ணாமலை)


'மா புளிமாங்காய் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.

பண்ணார் நடமாடும் பதமே தருவாயே
கண்ணால் முடி,தாளைக் காணா அயன்மாலும்
விண்ணாய் வளர்தீயாய் மிளிரும் உனைநாடும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....1

புண்ணாம் படிநோவப் புரியும் வினையோடக்
கண்ணார் ஒளிமேவும் கருணை பொழிவாயே
மண்ணாய்ப் புனல்வானாய் வளியாய் அழலானோய்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....2

கண்ணால் உகுநீருக் கருள்வாய் மதலைக்கே
உண்ணா அமுதுண்டே உமையா ளுடைமைந்தாய்
பண்ணார் பதிகத்தால் பரவித் துதிசெய்தார்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....3

கண்ணீர் விழிமல்கக் கரையும் உணர்வாகி
எண்ணேன் உனதன்பை இரங்காய் இறையோனே
விண்ணாய் உயர்கோவில் மேவும் அருணேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....4

புண்ணார் விழிசெந்நீர்ப் புனலாய் வழிந்தோடக்
கண்ணாய்த் தனதப்பும் கருணை சொலப்போமோ?
திண்ணார்த் தடந்தோளன் திண்ணன் துதிசெய்யும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....5

Saturday, November 6, 2010

சிராப்பள்ளி சேர்!



அலையாய் அலைந்தே அமைதியை நாடின்
நிலையாய் மலர்தாள் நினையென் மனமே
கலையாய் நடிக்கும் கழலன் இமயச்
சிலையான் சிராப்பள்ளி சேர்....6

சிலை=மலை.

நலம்பெற வைத்து நலி வினைத் தீர்த்தே
வலம்பல நல்கிடும் வாஞ்சைஎண் நெஞ்சே!
தலம்பல ஆடிடும் தாண்டவன் கைலைச்
சிலம்பன் சிராப்பள்ளி சேர்....7

ஆர்த்தெழும் தீவினை அண்டாதென் நெஞ்சமே
வார்த்தையில் சொல்லொணா வாத்ஸல்யம் பொங்கிடப்
பார்த்தருளும் அன்னையாய்ப் பாவையின் துன்பினைத்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்....8

பகழியின் கூர்தோய்ப் பறவையாய் நோவ
நிகழும் வினைத்துயர் நீங்கிட நெஞ்சே
தகழி யொளியினில் தண்மலர் தூவத்
திகழ்ந்தான் சிராப்பள்ளி சேர்....9

பகழி=அம்பு.

கட்டும் வினைகள் கயிறாய்ப் பிணிப்பதை
விட்டு விலகிட வேண்டிடின் நெஞ்சமே
இட்டன், அடியருக்(கு) இன்னருள் செய்திடும்
சிட்டன் சிராப்பள்ளி சேர்....10

Sunday, October 31, 2010

சிராப்பள்ளி சேர்!


( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )

பற்றும் பழவினையால் பந்தப் படும்வேளை
சற்றும் சிவநாமம் சாற்றுவை நெஞ்சமே!
சுற்றும் கயலுயரத் துள்ளுமெழில் பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்....1

குருவாய் அமர்வோனின் கோலம் நினைந்தே
உருவாய் ஒளியாய் உணர்வாய் மனமே
தருவான் மலர்பதம் தாயாய் அருள்வான்
திருவார் சிராப்பள்ளி சேர்....2

தொல்வினை சூழ்ந்தே துயர்தரும் போதினில்
வெல்வழி யொன்றினை மேவிடு நெஞ்சமே
மெல்லிய லாளொடு வெள்ளை எருதமர்
செல்வன் சிராப்பள்ளி சேர்....3

அவமாய் அலைந்தே அலமரும் வாழ்வில்
நவமாம் வழியினை நாடிடில் நெஞ்சே
தவமே உருவெனச் சார்ந்தார்க்(கு) அருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்....4

தாவல் தருவினையைத் தாண்டி உயர்வுறச்
சேவமர் செல்வனருள் தேடுமென் நெஞ்சமே
நா வல் அடியர் நயமுறப் போற்றிடும்
தேவன் சிராப்பள்ளி சேர்.....5

தாவல் = வருத்தம்
சே + அமர் = சேவமர் ( உடம்படு மெய் 'வ்' வந்து சேவமர் என்றாகியது )

Tuesday, October 26, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 5


(தானனா தானன..தந்த தான-- 5)

வாரிமீ தாடுது..ரும்ப தாக
...வாடுவோர் நாடிடும்..அஞ்சல் ஈவாய்
சாரியாய் ஊழ்துயர்.. தந்த போதுன்
...தாளதே நானுணர்.. சிந்தை யாவாய்
கோரியே மாதவள்.. வந்தி நாடும்
...கூலியா ளாகுவை..சுந்த ரேசா
ஆரியா ஆதர..வென்று மானாய்
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.

Sunday, October 24, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 4

(தானனா தானன.. தந்த தான--4)

ஓடுமே தீவினை யஞ்சி யேதான்
...ஓதுமோர் ஆதியு .னன்ப தாலே
பாடுவோ ராயிர முன்ற னாமம்
...பாகுசேர் தேனத னின்ப மாமே
தோடுடை யாயுனை அன்று நாவால்
...சூடுபா மாலைசெய் விஞ்சை என்னே
ஆடுவாய் வானெழில் மிஞ்சு மாடல்
...ஆலவாய் மேவிய எம்பி ரானே.

Saturday, October 23, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 3

(தானனா தானன.. தந்த தான)

மாறலா தாடிடு .. மன்று ளானே
...மாசிலா மாமணி.. யென்று மானாய்க்
கூறதாய் மாதுமை..தங்கு மீசன்
...கோலமார் சோதியி.. .லின்பு சேரும்
பேறதாய் ஆகுமு.. .னன்பி .னாலே
...பீடதே யாகிடும்.. தஞ்ச மீவாய்
ஆறலை வேணிய.. சுந்த ரேசா
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

மாறு=ஒப்புமை.

Thursday, October 21, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 2

(தானனா தானன .. தந்ததான--2)

மோனமாய் ஆலமர்.. கின்ற தேவே
...மோகமோ டாறையும்.. வென்றி டேனோ?
கூனலாய் வான்மதி.. கங்கை சூடும்
...கோதிலா வேணிய..னென்று வேத
கானமாய் ஓதிடும்.. அன்பர் நேசா
...காவலாய் ஆதர மென்று தாயும்
ஆனவா மாதுமை.. பங்க .னாகி
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆதரம்=அன்பு, உபசாரம்
மோகமோ டாறையும்= மோக, காம, லோப, குரோத, மத, மாச்சர்யம்.

Tuesday, October 19, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே !

(தானனா தானன .. தந்ததான)

பூரணா நீறணி..கின்ற ஈசா
...போதமே நானறி..கின்றிலேனே
பாரமார் ஊழ்தரு.. துன்பு மாயும்
..பாதமே நாடுயர்.. சிந்தை ஈவாய்
காரணா தீயெரி.. கின்ற ஈமம்
...காதலோ டாடிடு.. மன்ற மாகும்
ஆரமாய் மார்பிசை..கொன்றை யோடே
...ஆலவாய் மேவிய..எம்பி ரானே.