Friday, January 11, 2013

திருப்புன்கூர்-- 1

திருப்புன்கூர்
----------------------------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

கலைவுறா பத்தியினில் கண்ணாரக் காணவேண்டித்
தலைவனை தில்லையினில் தரிசிக்கும் நந்தனுக்காய்
விலகுவாய் கொஞ்சமென்று விடைக்குரைத்த கைலாய
மலையினான் திருப்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....1

திருநாளைப் போவார்தன் தீராத அன்புடனே
ஒருநாளே தரிசித்தால் உய்யும்நாள் எனவேண்டி
வருவாரை விடையேநீ மறைக்காமல் ஒதுங்கென்றான்
இருதாளை புன்கூரில் ஏத்தவினை மாயுமன்றே....2


நீரடையும் வேணியன்பேர்  நினைந்துருக வந்தருளும்
பூரணனைக் காணவரும் புனிதருக்காய் விடையொதுங்கும்
ஆரணிசேர் புன்கூரின் ஆடவல்லான் தாள்தொழவே
போரணியாய் வருவினையை புறங்காணல் எளிதாமே.3


தந்தையாய்த் தாங்குவான் தாள் தரிசித்தே உய்யவந்த
நந்தனார் வழிமறைக்கும் நந்திசற்று விலகவைத்த
அந்தமார் புன்கூரின் அங்கணனை தொழுவாரின்
சிந்தையார்  தீவினைகள் தீபுக்கப் பஞ்சாமே....4


சிரஞ்சேர்கை குவியநிதம் சிவனைநினை அடியாரின்
 உரஞ்சேர்மெய்த் தொண்டினுக்கே உவகையுடன் அருள்செய்யும்
 பரஞ்சோதி மேவுகின்ற பதிபுன்கூர் கண்டுதொழ
 வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே....5






2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிரஞ்சேர்கை குவியநிதம் சிவனைநினை அடியாரின்
உரஞ்சேர்மெய்த் தொண்டினுக்கே உவகையுடன் அருள்செய்யும்
பரஞ்சோதி மேவுகின்ற பதிபுன்கூர் கண்டுதொழ
வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே

அருமையாக சிவனை நினைக்கவைத்த பகிர்வுகள்..

Thangamani said...

அன்பு ராஜேஸ்வரி,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
மிக்கநன்றி.