Saturday, May 5, 2012

அருளாய் அறம்வளர்த்த நாயகியே!-- 2

வாரணநன் முகத்தானை மகனாகப் பெற்றவளே
நாரணனின் சோதரியே நலியவைக்கும் வினைதீராய்
தோரணமும் கட்டிநறுந் தூபமுடன் மலர்தூவி
ஆரணங்கே அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே....6

சோதியுயர் அழலாகத் தொழுமன்பர்க்(கு) அரியானின்
பாதியுனைப் பணியுமன்பர் பாவினிலே உறைபவளே
மோதியெமை தாக்குகின்ற மூள்வினையை போக்கிடுவாய்
ஆதியுனை அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே....7

பாலகனின் பயம்தீரப் பாய்ந்துவந்து சினத்தோடு
காலனையே உதைசெய்த காலனவன் கண்மணியே
ஓலமிட வருமிடர்செய் ஊழ்வினையைப் போக்கிடுவாய்
ஆலமுண்டான் பங்கிலுறை அறம்வளர்த்த நாயகியே....8

வெங்கடம்சேர் துஞ்சினார் மேனிலைக்காய் ஆடுபவன்
திங்களையும் கங்கையையும் சென்னிதனில் சூடியவன்
பங்கிலுறை பூரணியே பாரமிகு வினைதீராய்
அங்கயல்போல் கண்ணுடையாய் அறம்வளர்த்த நாயகியே....9

மையாரும் வேல்விழியாய் மஞ்சிமய மங்கையுனை
கையாரக் கும்பிடுவேன் காய்வினையைத் தீர்த்தருளாய்
பையாரும் விடவரவம் படர்மார்பன் பங்குடையாய்
ஐயாறோ டொன்றொடொன்றாம் அறம்வளர்த்த நாயகியே....10

1 comment:

Geetha Sambasivam said...

அறம் வளர்த்த நாயகி தரிசனம் அருமை.