Sunday, May 13, 2012

திருச்சோற்றுத் துறை!-- 2

வாழ நிலையாம் வழிகாண் பதுவே
தாழ விரிசெஞ் சடையன் தொழுதல்
சூழ வருமூழ்த் தொலைப்பான்;அடியார்த்
தோழன் பிரியான் சோற்றுத் துறையே....6

வேத வடிவில் விளங்கும் பரமன்
நாத வெளியில் நடனம் புரியும
பாதன்;நடையாய் பரவை யிடம்செல்
தூதன் பிரியான் சோற்றுத் துறையே....7

உடுப்பான் புலித்தோல் உடையாய்; கைலையை
எடுத்தான் வலியோ டிசைப்பான் மடுப்பான்
கொடுப்பான் அருளை கொடிய வினையைத்
துடைப்பான் பிரியான் சோற்றுத் துறையே....8
 
உரியான் அடியார் உளமே தளியாய்ப்
பரிவான் எளியர் படுதுன் பகலப்
புரிவான் தயையைப் பொழிவான் அருளாய்ச்
சொரிவான் பிரியான் சோற்றுத் துறையே....9
 
 உண்டன் புநிறை ஒருவன் கறையார்
கண்டன் அருளும் கழலார் பதத்தான்
அண்டும் வினைகள் அகற்றும் நிலவுத்
துண்டன் பிரியான் சோற்றுத் துறையே....10

1 comment:

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.