Wednesday, May 23, 2012

ஆனைக்கா! (திருவானைக்கா

எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா)
------------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

ஒருமன்றில் நட்டமிடும் உமைகேள்வன் மதியுறையும்
மருள்விளைக்கும் மயல்நீக்கும் மதிசூடி அமருமிடம்
பருகென்று பொன்னியன்னை பசுமைநிறை காட்சியள்ளித்
தருகின்ற வயல்சூழும் தண் ஆனைக் காநகரே....1

வெருவவரும் வினைத்தளையை விடுவித்து நலம்சேர்க்கும்
அருளுருவில் திகழ்வோனாம் அம்பலத்தான் அமருமிடம்
திருவடியைப் போற்றிடவே தேடிவரும் பொன்னிநதி
அருகடையும் அழகுடைய ஆனைக்கா நகர்தானே....2

அப் புரங்கள் மூன்றினையும் அனலெரிக்க நகைத்தவன்நம்
ஒப்பரிய அப்பனவன் உமையோடும் அமருமிடம்
எப்புறமும் இருளெனவே நிழலடர்ந்த பசுமரங்கள்
செப்பரிய எழிலாரும் திருவானைக் காநகரே....3

ஆல்தருவின் நீழலிலெ அருள்மோன குருவவனை
நால்வகையாம் மறைபுகழும் நம்பனவன் அமருமிடம்
பால்நுரையாய்ப் பொன்னிநதி பாய்வாய்க்கால் வயலூடே
சேல்பாயும் வளம்சேரும் திருவானைக் காநகரே....4

 சஞ்சலத்தை நீக்கியருள் தஞ்சமதைத் தந்தருளும்
குஞ்சரத்தின் தோலுடையான் கூத்தனவன் அமருமிடம்
அஞ்சுகயல் விழிமாதர் அளைந்தாடும் காவிரிபால்
மஞ்சடையும் பொழில்சூழும் மணிஆனைக் காநகரே....5

No comments: