Monday, March 5, 2012

திருக்கூடலையாற்றூர்!--2

வார்சடை அதன்மீது வான்மதி அணிவான்தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே....6

வெஞ்சினம் எழவேளை விழித்தெரி படச்செய்தான்
நஞ்சணி கறைகண்டன் நற்றவ குருவாகி
அஞ்சலென் றருள்செய்து அடைக்கலம் தருமீசன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே....7

காளமும் அமுதென்றுண் கறைமிட றுடையானும்
நீளவெந் துயர்செய்யூழ் நீங்கிட அருள்தந்துத்
தூளவை யெனதீர்க்கும் தொண்டரின் துணையாவான்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே....8

எங்குளன் இறைவன் தான் என்றவன் அருள்தேடின்
தங்குவன் உளம்தன்னில் தாங்கிநம் வினைதீரப்
பொங்கிடும் தயைசெய்வான் பொலிவுறும் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே....9

நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான்
ஆற்றினை பிறைதன்னை அழகுடை சிரம்கொண்டான்
சீற்றமும் மிகவன்று சிறுவனுக் கருள்செய்யக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே....10

1 comment:

Geetha Sambasivam said...

நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான் //

இப்போ இது தான் தேவை! :))))