Friday, May 31, 2013

திருவாட் போக்கி-- 2

மணக்கொன்றை மலராலே அலங்கல் சூடும்
...மாசில்லா ஒளிப்பிறையை சிரமேற் றானை
குணக்குன்றை பெம்மானை நினைந்து வேண்டி
...குவிகரமோ(டு) அலர்தூவப் பவமும் தீர்க்கும்
துணைக்கென்றும் பரிவோடு வந்து நிற்கும்
...சுந்தரனை தேன்மொழியாள் கேள்வன் தன்னை
மணிப்பச்சை வயல்சூழும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....6

அகலாத அன்பினுக்கே ஆளா வானை
...ஆனந்த நடனம்செய் அழகன் தன்னை
நிகராரும் தனக்கில்லா நேயன் தன்னை
...நின்மலனை வானவர்க்காய் நஞ்சுண் டானைப்
பகையான அறுவினைசெய் துன்ப றுக்கும்
...பைநாகக் கச்சணியும் பரமன் தன்னை
மகவோடு மந்திதிரி திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....7

தீனரவர் உறுதுணையாய்த் தோன்று வானைத்
...தீராத இடர்தன்னைத் தீர்க்கின் றானை
ஆனையுரி ஆடையாக அணிந்தான் தன்னை
...அகிலமெல்லாம் படைத்தருளும் ஐயன் தன்னை
வானமுதென் றலையிலெழு நஞ்சை உண்டே
...வானவரைக் காத்தகறை கண்டன் தன்னை
வானரங்கள் பாய்ந்தோடும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....8

எந்தையரன் தாயுமாகிப் பெண்ணைக் காத்த
...ஈடில்லா அருளாடல் போற்றிச் சொல்லும்
சிந்தைதனில் அன்பகலா அடியர் செய்யும் 
...பூசனையை உவந்தேற்கும் புனிதன் தன்னை
விந்தைமிகு அண்டாண்டம் காக்கின் றானை
...வேதமதை விரித்துணர்த்தும் விமலன் தன்னை
மந்திபல மகிழ்ந்தாடும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....9

பிஞ்சுபிறை சூடுகின்ற சடையி னானைப்
...பித்தனென்றும் பேயனென்றும் அன்பில் போற்றி
நெஞ்சுநெகிழ் அடியார்கள் பணியும் பாடல்
...நிறைவாகச் செவிமாந்தும் நிமலன் தன்னை
நஞ்சுதனை அமுதெனவே உண்ட தேவை
...நலமருளி வினைதீர்க்கும் நம்பன் தன்னை
மஞ்சுவந்து தீண்டுகின்ற திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.....10


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள் அம்மா...

Thangamani said...

வாழ்த்துக்கு நன்றி தனபாலன்.