Thursday, May 30, 2013

திருவாட்போக்கி-- 1


(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' அரையடி வாய்பாடு)

வான்பிறையைக் கண்ணியெனச் சூடு வானை
 ...மாதொருபால் பங்குடைய பரமன் தன்னைக்
  கான்நடுவில் எரிதழலில் ஆடு வானைக்
   ...கண்டமதில் கறையுடைய அழகன் தன்னை
   ஊன்முடைசேர் ஓடுடனே பலித்தேர் வானை
    ...உன்னுதற்கும் பேசுதற்கும் இனியான் தன்னை
   வான்முகில்வந் துலவுகின்ற திருவாட் போக்கி
    ...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....1

சிரமதனில் பொன்கொன்றைச் சூடு வானைத்
...தேடிவரும் அன்பர்க்குத் துணையா வானை
வரமெனவும் வினையிடரைத் தீர்க்கும் தேவை
...மாறாத பத்தியினில் உவக்கின் றானை
சரமலர்சேர் மாலையணி அண்ணல் தன்னைச்
...சந்ததமும் பணிவாரின் நேயன் தன்னை
மரகதம்போல் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....2

மானோடு தீஏந்தும் கரங்கொண் டானை
...மணிநீல கண்டனான மதியன் தன்னைக்
கோனான பாண்டியனுக்(கு) அருளி .னாலே
...கூன்நீக்கி நலம்செய்த அண்ணல் தன்னைக்
கானாடும் பெம்மானின் மலர்த்தாள் போற்றிக்
...கண்கசியப் பணிவோரின் துணையா வானை
வானோடும் மதிதீண்டும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....3

விளைவான வினையிடர்கள் வெருட்டும் போது
...விமலனின் பூந்தாளைப் பணிந்துப் போற்றி
உளமார நினைவோர்க்குப் பரிவாய்க் காக்கும்
...உத்தமனை வெண்ணீற்றில் ஒளிர்கின் றானைக்
குளமாரும் மலர்சூழக் சுரும்பி .னங்கள்
...கூடிஒன்றாய் முரலுகின்ற சோலையோடு
வளமாரும் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....4
 
தழையோடு மலர்நீரைத் தாளில் சேர்ப்பார்
...தண்டமிழ்ப்பாத் தேனமுதை மாந்து வானைப்
பிழைசேரும் வாழ்விதனில் நலியா வண்ணம்
...பேறெனச்சீர் அருள்செய்யும் பெம்மான் தன்னைப்
பழிதீரப் பகீரதற்காய் பாயும் ஆற்றைப்
...பாந்தமுடன் சிரமேற்றச் சடையன் தன்னை
மழைமேகம் வந்துலவும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....5
 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...