Monday, May 20, 2013

திருவாலங்காடு --2

மண்ணீர் வான் தீ யோடு
...வளியாய்த் தோன்றும் வள்ளல்
விண்ணீர் கங்கை சூடி
...வெண்ணீ றணியும் மெய்யன்
கண்ணீர் ததும்ப வேண்டின்
...காக்கும் கழலன் ஊராம்
தெண்ணீர்ப் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங் காடே....3

பால்போல் மதியும் பாம்பும்
  ...பாயும் நதிசேர் சடையன்
  சூல்சேர் பிறப்பும் சாவும்
  ...தொடரா தருளும் ஐயன்
  ஆல்கீழ் மறையைச் சீடர்
  ...அறியச் சொல்வான் ஊராம்
  சேல்பாய் பொன்னித் தென்பால்
  ...திகழும் ஆலங் காடே ....4

 தலையோ டுடையான் கொன்றைச்
...சடையன் பேரை ஓதி
நிலையாம் அவன் தாள்  என்றே
...நினையும் அன்பர் தெய்வம்
மலைமா தோர்பால் வைத்த
...மதியன் மேவும் ஊராம்
அலைசேர் பொன்னித் தென்பால்
...அழகார் ஆலங் காடே....5

விரையார் மலரில் மாலை
...மிளிரச் சூடும் மார்பன்
குரையார் கழல்செய் ஆடல்
...கும்பிட் டன்பர் காணும்
மரைசேர் கையன் பங்காய்
...மங்கை கொண்டான் ஊராம்
திரையார் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங்காடே....6

பறவை ஏன மாகப்
...பறந்தும் அகழ்ந்தும் காணா
இறைவன் முடிதாள் இன்றி
...எரியாய் அழலாய் நின்ற
பிறையை நதியைச் சூடும்
...பெம்மான் மேவும் ஊராம்
அறையும் பொன்னித் தென்பால்
...அழகார் ஆலங்காடே....7

வெயிலாய் வாட்டும் வெம்மை
...வினையைத் தாங்கச் செய்வான்
செயலாய் விளைவின் துன்பைத்
...தீர்ப்பான் அன்பர் நேசன்
இயலாய் சுதிசேர் பண்ணில்
...இசைவாய் மிளிர்வான் ஊராம்
கயல்பாய் பொன்னித் தென்பால்
...கவினார் ஆலங் காடே....8

பொன்னும் மணியும் பூவும்
...பொலியும் அணியாய் மார்பில்
முன்னும் பின்னும் இல்லா
...மூல முதல்வன் பேரை
இன்னும் இன்னும் சொல்ல
..இனிக்கும் அண்ணல் ஊராம்
செந்நெல் வயல்கள் சூழத்
...திகழும் ஆலங் காடே....9

திறந்த வெளியில் வானில்
...சிவனின் ஆடல் காணப்
பிறந்த பயனைக் கொள்வர்
...பெம்மான் அடியார் தம்மை
நிறைந்த அருளில் வைப்பான்
...நிமலன் மேவும் ஊராம்
செறிந்த பொழில்கள் சூழத்
...திகழும் ஆலங் காடே...10

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான வரிகள் அம்மா...

தொடர வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

மிகவும் அருமையான பாடல் வரிகளைப் பகிர்ந்துள்ளீர்கள் அம்மா மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் தங்கள் பணி ...!!

Thangamani said...

வாங்க தனபாலன்
மிக்கநன்றி உங்கள் வாழ்த்துக்கு.

Thangamani said...

வாங்க அம்பாள் அடியாள்
உங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் அம்மா...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...