Tuesday, October 2, 2012

சண்பை நகர் (சீகாழி) -- 1

சண்பை நகர் (சீகாழி)
------------------------------
(மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு) 


அழுது நெகிழ்வர்க் கணுக்கன் மதிசூடி
தொழுது மகிழத் துணையென் றருளூராம்
எழுமின் னிசையை ஏந்தித் தவழ்தென்றல்
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....1


அணுக்கன்=அண்மையில் இருப்பவன.

பொங்கும் அழலாய்ப் பொலியும் மலைஈசன்
பங்கம் தீர்த்துப் பரியும் அருளூராம்
தெங்கின் கீற்றில் செழுமைக் கிளியாடித்
தங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....2


தீங்கும் அழிப்பான்  சீரார் மணிகண்டன்
தேங்கும் அன்பில் தேடி அருளூராம்
ஓங்கும் மரங்கள் உயர்ந்து முகில்மோதித்
தாங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....3


துவள வருமூழ்த் தொலைக்கும் குருநாதன்
பவள வண்ணன் பத்தர்க் கருளூரான்
தவளை ஒலிக்கச் சாரல் சொரிமேகம்
தவழும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....4 


சடையன் முடையார் தலையில் பலிதேரும்
நடையன் துதியில் நனைந்தின் பருளூராம்
தடையின் றுயர்ந்த தருக்கள் முகில்மேவித்
தடவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....5 




1 comment:

Geetha Sambasivam said...

//துவள வருமூழ்த் தொலைக்கும் குருநாதன் //

ஊழ் தொலையக் காத்திருக்கேன். நன்றி அம்மா.