Sunday, April 8, 2012

பழனத்தரன் பாதம் பணி!(திருப்பழனம்) --1

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - என்ற வாய்பாடு)

1)
துயிலும்நிதம் விழிப்பும்தொடர் நிலையாகிடும் உலகில்
மயலில்வரும் இடர்நீங்கவும் துதிசெய்திட அருள்வான்
மயிலும்நடம் இடும்பூம்பொழில் தனில்பாடிடும் குயில்கள்
பயிலும்திருப் பழனத்தரன் பாதம்பணி மனமே.
2)
வாடும்படி மிகுதுன்பினைத் தரும்வெவ்வினை தீர
ஆடும்பதம் நாளும்பணி பவர்க்கேயருள் செய்வான்
மூடும்புனல் மலராலெழிற் மிகச்சூழ்ந்திட வண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே.
3)
புத்தித்தடம் விலகித்தடு மாறும்நிலை மாறும்
சித்தத்தெளி வினுக்கோர்வழி புகல்வேனது கேளாய்
தித்தித்திடும் திருப்பேருடை சுத்தத்தவன் போற்றி
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே.
4)
ஓலத்திரை கடல்சூழ்ந்திடும் புவிமீதுறு வாழ்வில்
காலத்திடர் செயும்வெவ்வினை தீர்க்கும்தயை கொண்டான்
சூலப்படை உடையான் தன(து)அடியார்களின் துணையாய்ப்
பாலித்தருள் பழனத்தரன் பாதம்பணி மனமே.
5)
அலையும்மனம் அடங்கும்வழி மொழிவேனது கேளாய்
தலையில்பிறை சூடும்சிவன் கழல்போற்றிட அருள்வான்
உலவும்வளி தவழ்பூம்பொழில் மணம்வீசிடும் கொடிகள்
பலவும்திகழ் பரனத்தரன் பாதம்பணி மனமே.

1 comment:

Geetha Sambasivam said...

புத்தித்தடம் விலகித்தடு மாறும்நிலை மாறும்
சித்தத்தெளி வினுக்கோர்வழி புகல்வேனது கேளாய்
தித்தித்திடும் திருப்பேருடை சுத்தத்தவன் போற்றி
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே//

இது ரொம்பப் பிடிச்சது.